Thursday, May 27, 2010




வயிறு எரிகிறது..

அப்படித்தான் அனைவருமே சொல்லுகிறார்கள் ஆந்திர அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை நினைத்து.

காலி (Gali) கோபுரம் என தெலுங்கர்களால் அழைக்கப்பட்டு வந்த 136 அடி உயர காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சியை என்னவென்று சொல்வது..




கி.பி. 1516 ஆம் ஆண்டு, கங்கர்களை போரில் வென்றவுடன், தன் காணிக்கையாக இந்த ராஜகோபுரத்தை சுவர்ணமுகி நதிக் கரையில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கட்டியபோது, இந்த கோபுரம் ஒரு ஆயிரம் ஆண்டாவது நிலைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கட்டிய கோபுரமாகத்தான் அவன் நினைத்திருக்கவேண்டும். அப்படித்தான் இத்தனை காலமாக இருந்தது. அந்தக் கோபுரத்தின் உயரத்திலும், சிவனுக்காக கட்டிய மாபெரும் தெய்வீகத் தொண்டு என்ற பெருமையிலும் அந்த கோபுரத்தின் பக்கத்திலேயே ஒரு சிலையாக நின்று கொண்டு தவம் செய்த அந்த அரசனின் கனவு கூட இந்த கோபுரத்து இடிபாடுடன் இடிந்த போன சோகக் கதையை என்னவென்பது?

அடித்தளம் பாறையுடன் கூடியது மேலே செங்கல்லும், சுண்ணமும், பாறாங்கல்லும் சேர்ந்த கலவையோடு கட்டும்போது, இந்தக் கோபுரத்தை தமக்குப் பின் வருவோர் அவ்வப்போது மராமத்து செய்வார்கள், நிச்சயம் அவர்கள் நன்றாகக் கட்டிக் காப்பார்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்து நின்ற அந்த அரசனின் கனவு அப்படியே நொடிந்தபோன நிலையை எப்படி சொல்வது?

வெளிநாடுகளில், அதுவும் நாகரீகம் மிகுந்த மேலை மற்றும் கீழை நாடுகளில் 200 வருடம் பழையது என்றாலே மிகுந்த அக்கறையோடு பொறுப்பெடுத்து அவைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால் 500 வருடம் பழைமை மிகுந்த இக்கோபுரம் இடியப் போகிறது என்று நன்றாகவே முன்னமேயே தெரிந்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மட்டுமே இடிந்தபோன இந்த உயர்ந்த கோபுரத்தை இனி மறுபடியும் காண்பதேது? மேலே உள்ள படத்தில் மட்டுமே காணலாம் இனி..

136 அடி உயரத்தில் உள்ள கோபுரம் பழைய கோபுரம்தான். பல ஆண்டுகளாகவே மேலிருந்து கீழாக விரிசல் விட்டு எப்போது இடிந்து விழுவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த கோபுரம்தான். (படத்தை விரிவாக்கிக் கூர்ந்து பார்த்தால் இந்த விரிசல் தெரியும், இத்தனைக்கும் இது பழைய படம்). ஆனாலும் கோயில் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு வரவில்லை. 1960 ஆம் ஆண்டில் ஒருமுறை, மறுபடியும் 1990 ஆண்டு ஒருமுறை இந்த விரிசல்களை செப்பனிட்டார்களாம்.(இந்தப் பணம் கூட திருப்பதி தேவஸ்தானம் கடனாக - ரூ. பத்து லட்சம் கொடுத்ததாம்) இன்னும் ஒரு முப்பது ஆண்டு காலம் அதாவது 2020 ஆன் ஆண்டு வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ.. அல்லது வேறு யாராவது கடன் கொடுக்க முன் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாமே என்று ‘சும்மா’ இருந்துவிட்டார்களோ என்னவோ..

இத்தனைக்கும் சமீபத்தில் வந்த ‘லைலா’ புயல் காற்று இவர்களுக்கு அந்த விரிசலை அகலப் படுத்தி (சுமார் ஒரு அங்குலம் விரிசல்) ஆட்சியாளருக்குப் பாடம் வேறு புகட்டியது. இப்போதாவது கவனியுங்கள் சாமி, என்பதைப் போல.

ஏதோ கவனித்தார்கள். எச்சரிக்கைப் பலகை ஒன்று போட்டார்கள். ‘இந்தக் கோபுரம் இடிந்து விழும் நிலையில் இங்கு யாரும் வரவேண்டாம்’ என்று. (இப்படிப் போட்டதால் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன் என்றாலும் அந்தக் கோபுரங்களில் வாழும் நூற்றுக்கும் மேலான குரங்குகளும், பறவைகளும் ‘படிப்பறிவு’ இல்லையாதலால் பார்க்கவில்லை) சென்னன ஐ.ஐ.டி யிலிருந்து நிபுணர் ஒருவரை சொகுசுக் காரில் வரவழைக்கப்பட்டு அவர் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட கோரிக்கை விடுத்ததாம். அவரும், இந்த அரசாங்கம் போலவே, ஆகா.. இதோ செய்கிறோமே.. என்று இன்னமும் திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ..

ஆனால் ஆகாச அளவுக்கு உயர்ந்த அந்த கோபுரம் ‘அறிவில்’ மனிதன் அளவு கூட உயரவில்லை அல்லவா.. திட்டம் போட மனிதன் பேப்பர் எடுத்து எழுதுவதற்கு முன்பே இடிந்து விழுந்துவிட்டது. அத்தோடு குரங்குகளும் பறவைகளும் கூட சமாதி ஆகிவிட்டன.. பாவம்.. வாயில்லா ஜன்மங்கள்..

எல்லாம் முடிந்த பின்னே, ‘அடடே.. இது பழைய கட்டடம்,, காற்றுக்கு இடிந்து போவது சகஜம்தான்.. புதியது ஒன்று கட்டிவிடலாமே.. என்ன பத்து கோடி ஆகுமா.. சரி, உடனே கோப்பு ஒன்று எழுதுங்கள்.. உடனடியாக கட்டிவிடலாம்’ என்று ஆந்திர அரசு சாவகாசமாக சொல்கிறது. இந்த பத்து கோடியில் பத்தில் ஒரு பங்கு முன்னமேயே கொடுத்து மராமத்து செய்திருந்தால் ஒரு புராதனக் கோயிலின் புராதனக் கோபுரம் கட்டிக் காக்கப்பட்டிருக்குமே.. அதோ இடிபாடுகளுக்குள்ளும் இடிபடாமல் அப்படியே சோகமாக நிற்கும் ஸ்ரீகிருஷ்ணதேவனை சுகமாக நிற்க வைத்திருக்கலாமே.. ஒரு புராதன நினைவுச் சின்னம் சின்னாபின்னாபடுத்தப் படாமல் முறைப் படுத்தியிருக்கலாமே.. இறந்து போன வாயில்லா ஜீவன்கள் தம் இருப்பிடத்தை செப்பனிட்டதற்காக வாயார அல்லது நெஞ்சாற வாழ்த்தியிருக்குமே..



ஏன் தோன்றவில்லை இவர்களுக்கு,

அப்படி ஒன்றும் கோயில் ஏழைக் கோயிலும் இல்லை. நல்ல வருமானம் ஈட்டித் தரும் பெரிய கோயிலில்களில் ஆந்திரத்து காளஹத்திக் கோயிலும் ஒன்று. காளஹத்தி ஈஸ்வரன் எல்லோருக்கும் எல்லா நன்மையும் உடனடியாக செய்து கொடுப்பதால் கோயிலில் வரும் பக்தர்களில் வருகையும் நாளுக்கு நாள் அதிகம்தான். சிவராத்திரி நாட்களில் ஊரே நெருக்கத்தில் தவியாய் தவிக்கும். பஞ்சபூத சேத்திரங்களுள் ஒன்று. ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று திருவாசகத்தால் பாராட்டப்பட்ட ஒப்பற்ற பக்தனான கண்ணப்பன் இருந்து வழிபட்ட தலம் இது. இத்தகைய தலத்தை இப்படி அலட்சியப்படுத்தலாமா.. பல்லவர் காலம் தொட்டுப் புகழ் பெற்ற கோயிலில் இப்படி ஒரு வருத்தமான நிகழ்ச்சியை நடத்த விடலாமா.. ஆன்மீகம் போற்றப்படும் ஆந்திராவிலேயே இப்படிப்பட்ட நிலைமையா?

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் அரசாட்சி ஏற்று சென்ற வருடத்தோடு ஐந்நூறு ஆண்டுகாலம் நிறைவு பெறும் நேரத்தில், அந்த ஒப்பற்ற அரசனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா.. நம் அலட்சியப் போக்கால் காலத்தால் அழிக்கமுடியாத செல்வங்களை இப்படி அழித்துக் கொண்டே போனால்,.. எதற்கும் சாட்சி தேவைப் படும் இந்த அசாதாரண உலகத்தில் புராதனம் அழிந்த நிலையில் நாளை பாரதம் தன்னை உலகத்தாருக்கு எப்படி வெளிக் காட்டிக் கொள்ளும்..

வயிறு எரிகிறதுதான்.

(Pictures curtesy The New Indian Express and Srikalahasti Temple GurukkaL)

Thursday, April 29, 2010

கடவுளும், தெலுங்கு எழுத்தாளர்களும்

என்ன காரணம் என்று தெரியவில்லை., இந்த மாதம் முதல் தேதியிலிருந்தே தினம் ’அன்புத்தொல்லை’க் கொடுத்துக் கொண்டிருந்த திருவாளர் பிரும்மாஜி கடந்த இரண்டு மூன்று நாளாக தொலைபேசியிலும் சரி, நேரிலும் சரி, வரவில்லைதான். கொஞ்சம் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. மனுஷன் பேசினா கேள்வியும், ஆதங்கமும்தான்.. இத்தனை ஆதங்கங்கள், மனதில் தாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்த முடியாத எழுத்தாளராக அதுவும் இந்த 60 வயது வாழ்க்கை அனுபவத்தில் இப்படி இவரால் எப்படி இருக்க முடிகிறது என நான் வியப்பதுண்டு. ஆனாலும் இவர் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் என்னிடம் தீர்வு கிடையாது.

’திருமலைத் திருடன்’ நாவல் பற்றி தெலுங்கில் பேச வேண்டுமென இங்குள்ள ’சஹ்ருதய சாஹிதி’ எனும் தெலுங்கு இலக்கிய அமைப்பு கேட்டதினால், அதுவும் தெலுங்கில் பேசவேண்டும் என்ற கோரிக்கையினால், நானே சற்று உள்ளுக்குள் உதறலோடுதான் அந்தச் சபையில் ஆஜரானேன். ஏதோ பேசினோமா, முடித்தோமா, போனோமா என்ற நிலையில் நான் அங்கிருந்து வெளியே வந்தபோதுதான் நம் பிரும்மாஜி என்னுடனே கூடவே வந்தார்.

’என் பெயர் பிரும்மாஜி!. உங்க நாவல் கதை முழுவதும் சொன்னீங்க.. கேட்பதற்கு ரொம்ப நல்லா இருந்திச்சு.. (இதுவரைக்கும் எனக்கும் நல்லாவே இருந்துச்சு).. ஆனா சார்.. உங்க நாவல் ல ஆண்டவன் இருக்கானா அல்லது இல்லையான்னு தெளிவா முடிவுல சொல்லி இருக்கீங்களா?’

”சார்.. ஆண்டவன் இருக்கிறதுனாலதான் இந்தக் கதையே இப்படி நடந்ததுன்னு கடைசில விளக்கம் கொடுத்தேனே சார்..”

”ஆங்! கொடுத்தீங்க சார்.. ஆனா. உண்மையிலே ஆண்டவன் இருக்கானா சார்.. உங்க சொந்த அபிப்பிராயம் என்ன.. அதைச் சொல்லுங்க..”

“அவன் இருக்கறதுனாலேதானே சார் உங்களை மாதிரி அன்பர்களையெல்லாம் சந்திச்சுப் பேசிண்டிருக்கேன்.. ஏன்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..”

’இது பத்தி உங்கள்ட்ட பேசணும் சார்.. உங்க விலாசம் கொடுங்க.. நான் வரதுக்கு முன்னாடியே போன் பண்ணிட்டு, நீங்க வரச் சொன்னா மட்டுமே வருவேன்.. அநாவசிய டிஸ்டர்பன்ஸ் பண்ணமாட்டேன் சார்..’

’என்ன சார் இது.. கட்டாயம் வாங்க..’

அங்கிருந்து அவரிடம் அப்படி சொல்லித் தப்பித்து விட்டதாகத் தான் அன்றிரவு நினைத்தேன். ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் இன்னொன்று நினைப்பான் அல்லவா.. அடுத்த நாள் காலையே போன் செய்து, மாலை என் அலுவலகம் வரலாமா என்று பர்மிஷன் கேட்டு, நானும் முழு மனதோடு (?) கொடுக்க, அன்று மாலையே மறுபடி பிரும்மாஜி என்னெதிரே ஆஜர்.

”சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இங்கே இருக்கற எழுத்தாளர்கள்னு சொல்லிக்கிறவங்கள்ளே – என்னையும் சேர்த்து - முக்கால்வாசிப்பேருக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.!”’ என்று ஆரம்பித்த பிரும்மாஜி, கவிஞர்கள், கதை எழுத்தாளர்கள் பலர் பெயர்களையும், அவர்கள் புத்தக விவரங்களையும் எடுத்துச் சொன்னார். முக்கால்வாசி புத்தகங்கள் இன்னமும் புரட்சிகளை முன் வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும், சுரண்டல் பேர்வழிகள், முதலாளிகள் இவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார். தெய்வபக்தி போன்றவை பெண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற பாவனையில் பலர் இருப்பதாகவும், கோயில் குளம் என்று செல்லும் எழுத்தாளர் பலர் கூட வீட்டுப் பெண்டிர் வற்புறுத்தலால் மட்டுமே அதிகம் செல்கிறார்கள் என்றும் சொன்னார்.

‘சார்.. என்ன இப்படிச் சொல்லிட்டிங்க.. நித்யானந்தா மாதிரி எந்த குருசாமி எந்த ஊர்லேருந்து வந்தாலும் முதல்ல ஆதரவு கொடுக்கறது நீங்கதானே சார்..’

மறுபடியும் எனக்கு தெளிவு படுத்தினார் பிரும்மாஜி. ஆந்திரர்கள் இன்னமும் முழுமையாகப் படிப்பறிவு பெறவில்லை எனவும், பாதிக்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கையில் கிடந்து மோசம் போகிறார்கள், இவர்களைக் காப்பாற்ற எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எத்தனையோ முயற்சி செய்தும் இவர்கள் திருந்த முன்வரவே இல்லை..’ என ஆதங்கத்துடன் பேசினார்.

’தெலுங்கு எழுத்தாளர்களின் முன்னோடி ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தான் சார். இவரும் புரட்சிகரமான கம்யூனிச எழுத்தாளர். சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர்களில் பாதிப்பேர் புரட்சி சிந்தனை எழுத்தாளர்கள்தான்’ என்று சொல்லிய பிரும்மாஜி, சில விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டார்.

தெலுங்கு மக்கள் என்னவோ இத்தகையவர்களை ஆதரிக்கவில்லை, இவர்கள் புத்தகங்களையும் வாங்குவதில்லை என்று பிரும்மாஜி வருத்தப்பட்டாலும், தெலுங்கு வாசிப்பு என்பதே மக்களிடையே சுவாதி, ஜோதி (நம் குமுதம், விகடன் போல) என்ற வர்த்தகப் பத்திரிகைகள்தான் என்றும் சொன்னபோது, ’அட, இது எங்கள் ஊரிலும் இப்படித்தான்.. நாடெங்கும் தேசமெங்கும் இருக்கும் நிலைதானே சார்!,’ என்று அவரிடம் சொன்னேன்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ’என்ன இருந்தாலும் தமிழர்களின் படிப்பறிவே தனி சார். அவர்கள் புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள். இங்கு புத்தகப்பதிப்பகங்கள் அவ்வளவாகக் கிடையாது. அப்படியே பதிப்பகங்கள் ஒவ்வொன்று கிடைத்தாலும் எழுத்தாளர் செலவு செய்தே பிரசுரிக்கவேண்டும். எழுத்தாளர் என்றால் அரசாங்கத்திடமோ, அல்லது பொது மக்களிடமோ எந்தவித மரியாதையும் கிடையாது. அதுவும் தெலுங்குப் புத்தக வாசிப்பு என்பதே கௌரவக் குறைச்சல் என்ற அளவுக்குப் போய்விட்டது சார்’ என் வருத்தப்பட்டார் பிரும்மாஜி.

‘உங்கள் நூலகங்கள் என்ன செய்கின்றன பிரும்மாஜி?’

’வெட்கக்கேடு, இந்த நூலகங்கள் பராமரிக்க இங்கே அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. அப்படியே ஒரு 200 நூலகங்கள் நாடெங்கும் இருந்தாலும் அவைகளில் புதிய தெலுங்குப் புத்தகங்கள் சேர்ப்பதுமில்லை. லைப்ரரி என்ற சொல்லே வேறு ஒரு புதிய அர்த்தத்துக்கு இப்போது வழி வகுத்துள்ளது’

‘என்ன சார் அது?’

’நாளிதழ், வார இதழ்கள் படிப்பதற்கும், விஞ்ஞானம் பற்றிய பழைய செய்திகள் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன சார். ஆங்கில நூல்கள் அதுவும் பழைய நூல்கள் ஏராளமாகப் பார்க்கப்படுகின்றன.. தெலுங்கு மொழியை இதில் கூட சீண்டுவார் இல்லை. ஏனெனில் தெலுங்கு மொழியில் யார் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறார்கள் என்ற மனப்போக்கு மக்களிடையே அதிகம்..’

உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. பிரும்மாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு மொழி சீரடைவது ஏன் என்ற ஆராய்ச்சி செய்து வருகிறாராம். இவர் இப்படியெல்லாம் ஒரு மொழியின் அழிவைப் பற்றிப் பேசும்போது அது கேட்க மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.

’ஆனால் தெலுங்குக்கு உண்மை நிலை இன்று இதுதான் சார். நானே 20 புத்தகங்கள் எழுதி என் செலவில் அச்சடித்து வெளியுட்டுள்ளேன். ஆதரிப்பார் யாரும் இல்லை. இலவசமாக விநியோகித்து வருகிறேன் சார்” என்று பிரும்மாஜி வருத்தத்தோடு சொன்னார்.

’என்ன செய்தால் இந்த நிலை மாறலாம்’ என்ற ஆலோசனைகள் உங்களைப் போன்றோர் தரவேண்டும். நான் இப்படிப் பலரையும் சந்தித்துப் பேசி அவர்கள் ஆலோசனைகளைப் பதித்து வருகின்றேன்.. பிறகு இந்த ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஐதராபாத் வரை நான் செல்லத் தயார். ராஜதானியில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து ஏதாவது நம் மொழி வளர்ச்சிக்குச் செய்யவேண்டும் சார்.. நான் என் ஆராய்ச்சியின் முடிவுரையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். அதே போல உங்கள் யோசனைகளையும் சொல்லுங்கள் சார்.. தமிழ் எழுத்தாளர்கள் நியாயமாகச் சொல்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய ஆய்வு முடிவுக் கட்டுரைக்கும் ரொம்பவும் உதவியாக இருக்கும், என்று பிரும்மாஜி கேட்டுக் கொண்டு போனவர், இரண்டு நாட்களாக வரவில்லை.

முதன் முதலில் தெலுங்கு மொழியில் நன்னய்யா எனும் பெருங்கவிஞர் மகாபாரதத்தை கவிதை நடையில் எழுதினார். நன்னய்யாவை தெலுங்கின் ஆதிகவி என்று சொல்வார்கள். அவருடைய பாரதத்தில் முதல் மூன்று வரிகளே மும்மூர்த்திகளை வணக்கம் சொல்லி பாடப்பட்ட முத்தான சமுஸ்க்ருத வரிகள். ஸ்ரீ, வாணி, கிரிஜா ஆகியோரை தங்களிடத்தே கொண்ட மும்மூர்த்திகளே, ஆதி தெய்வங்களே! இந்த உலகத்தை, ஆக்கி, காத்து, அழித்து, மறுபடியும் அருளும் பரப்பிரம்மத்தின் சொருபங்களே! எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி ஆரம்பிப்பார். பிறகு பாடப்பட்ட அனைத்துப் பாடல்களுமே தெலுங்கில்தான். (இவரால் மகாபாரதத்தை முழுமையாக எழுத முடியவில்லை. பின்னர் வந்த திக்கனா, எர்ரனா இருவரும் இந்த நூலை முடித்து வைத்தனர்)

நன்னய்யாவின் பாரதம் மிகவும் புகழ்பெற்ற நூல். இவர் எழுதிய காலம் சுமார் 1050 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. ஏனெனில் இவரின் இரண்டாவது பாடல், சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் மருமகனான விமலாதித்தன் எனும் வேங்கி அரசனின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் (கி.பி.1022-1060) எனும் பெயருடைய அரசன் மீது பாடப்பட்டதாகும். (இவ்விவரங்களை நன்னய்யாவே தனது இரண்டாவது பாடலில் மிக மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்) இதைக் கொண்டு பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தெலுங்கு நூல் இன்னமும் புகழ்பெற்று விளங்குகிறது ஏன் என்று இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் சிந்திக்கவாவது முயலவேண்டும்.

அடுத்து 15ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் பாடப்பட்ட அன்னமய்யாவின் பாடல்கள், திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட அற்புதமான நாவுக்கினிய கீதங்கள், பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வரிகள், ஐந்நூறு வருடத்துக்கு முன் இயற்றப்பட்ட இவை இன்று பட்டி தொட்டியெங்கும் பரவத்தொடங்கி உள்ளதையும் இந்தக் கால எழுத்தாளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் ‘ஆமுக்தமால்யதா’, அதே போலவே ராமதாசரின் கீதங்கள் கூட மக்களிடையே பிரபலம்தான்.

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனை தெலுங்கு நூல்கள் எழுதப்பட்டு சிறந்து விளங்கின என்று சில தெலுங்கு எழுத்தாளர்களிடம் கேட்டேன். எல்லோருமே ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசலு எனும் ஸ்ரீ ஸ்ரீ கவிதைகளைப் பற்றியே சொல்கிறார்களே தவிர, ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வதில்லை என்றே படுகிறது. எனக்குத் தெரிந்து ஜகன்னாத ராஜு எனும் நம் ராஜபாளையத்துக் காரர் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் அவைகளை சீண்டுவதில்லை என்பது வாஸ்தவமே. மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை என்பது கூட உண்மைதான். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் தெலுங்கில் ஒரு காலத்தில் மிக மிகப் பரவலாகப் பேசப்பட்டவை (தமிழில் சுஜாதா போல) ஆனால் இப்போது இவர் கூட ஒரு சபையில் பேசும்போது தன்னுடைய கதைகள் அவ்வளவாக விற்பதில்லை, ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று எழுதிய தன்னுடைய சிறிய நூல் ஒன்று லட்சம் பிரதிகள் விற்கிறது என்று ‘வருத்தத்துடன்’ குறிப்பிட்டார். ஆக இவரும் எழுத்தாளராக மிகவும் புகழ் பெற்றாலும், தெலுங்கில் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற குறையை பகிரங்கமாகவே சொல்லி வருகிறார். தெலுங்கு இலக்கிய உலகம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதை ஒரு அமைச்சரே சமீபத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் பேசியதை நானே கேட்டுள்ளேன். இப்படி எல்லோருமே கவலைப்படுவது போல முகத்தை சோகமாக்கிக் கொண்டு பேசி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்களுக்குத் தங்கள் மொழி வளர்க்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நல்ல தரமான எழுத்துகளுக்கு, அது எந்த மொழியாக இருந்தாலும் சரி, நிச்சயம் தெய்வம் துணை நிற்கும். அரசாங்கம் உண்மையிலே கவலைப்பட்டால், அது முதலில் செய்யவேண்டிய வேலை ஊரெங்கும் நூலகங்கள் ஏற்படுத்தி தெலுங்கு நூல்களை ‘டப்பு’ செலவழித்து வாங்கவேண்டும். எல்லா தெலுங்கு நூல்களும் ஒவ்வொரு நூலகமும் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும். இப்படி சட்டம் இயற்றப்படுவதால் ஒரு சில தீமைகளும் எழலாம். புற்றீசல் போல நெறியற்ற எழுத்துகள் நாடெங்கும் எழுதப்பட்டு, நூலகங்களுக்கு விற்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் காலாகட்டத்தில் இவை தேய்ந்துதான் போகும்.

ஆனால் உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், இலக்கிய ஆதாரங்கள், மண்ணின் வளம், பாரதத்தின் பண்டைய மேம்பாடு, என எழுத்துகள் வர ஆரம்பிக்கும்போது மொழி செழிப்பாக வளர நிச்சயம் வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தங்கள் எழுத்தில் இன்றைய எழுத்தாளர்கள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த விஷயங்களின் அடிப்படை உணர்ச்சியே தெய்வ நம்பிக்கை என்பதையும் இவர்கள் தெளியவேண்டும்.

விஜயநகரப் பேரரசு தென்னகமெங்கும் பரந்து விரிந்து கோலோச்சும் வேளையில் அதாவது சுமார் 200 வருடங்களுக்கு தெலுங்கு மொழியும் அரசவை மொழியாக கோலோச்சியது.தமிழகத்திலேயே தஞ்சை, மதுரை, காஞ்சியில் அப்போதெல்லாம் தெலுங்கு மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. தெலுங்கு மொழி பாடல் வகைகளுக்கேற்ற இனிய மொழி. நல்ல திரைப்படப் பாடல்கள் கூட இன்னமும் இனிய கீதமாக வேற்றுமொழிக்காரர்களால் கூட பாடமுடியும் அளவுக்கு இனிமை நிறைந்த மொழி. ஆனால் இம்மொழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது..

‘கன்ஞ்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா’ (வெண்கலம் கணீர் என கேட்பதைப் போல, தங்கத்தால் அப்படி முடியாதுதான், ஆனால் தங்கத்தின், அதன் தரத்தின் முன்னே வெண்கலம் நிற்குமா) என்று ’வேமனா’ எனும் பெரும் புலவர் தெலுங்கில் கேட்பார். தாய்மொழி தங்கம் போன்றது என்பதை எப்படி மக்களிடையே எடுத்துச் சொல்வது?

பிரும்மாஜி போன்றோர் கவலைகள் கவனிக்கப்படவேண்டியவை. மிகவும் ‘சீரியஸ்’ ஆக கவனிக்கப்படவேண்டியவை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் ஒரு மொழியை தெலுங்கு எழுத்தாளர்களான இவர்கள் வைத்திருக்கக்கூடாது. சமீபத்தில் ‘யுனெஸ்கோ’ அறிக்கையில், வருங்காலத்தில் மறைந்து போகும் உலக மொழிகளில் தெலுங்கும் ஒன்று என்று வந்துள்ளதாக சொல்கிறார்கள். இது உண்மையென்றால் நிச்சயம் நிலைமை கவலைக்கிடம்தான். தெலுங்கு மொழியைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்..

இப்படி (கடவுள்தான் காப்பாற்றவேண்டும்) நான் பிரும்மாஜியிடம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் சொல்லிவிடவேண்டியதுதான்.. ஏற்கனவே சொன்னேன், பிரும்மாஜி இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று.. வரட்டும்.. சொல்லிவிடலாம்..

Thursday, February 25, 2010


நாராயணனும் நாம கைங்கரியமும்

ஆந்திரத்தின் கதையே அலாதிதான்.

ஆந்திரர்கள் மிக நல்லவர்கள். நான் இங்கு வசிப்பதனால் இதை நான் சொல்வதில்லை. பொதுவாகவே மற்ற மாநில மக்களைக் காட்டிலும் (சுயநலம் குறைந்த) நல்லவர்கள். ஆனாலும் இவர்களுக்கு தங்கள் பழமையின் பெருமை இன்னும் புரியவில்லையோ.. தங்கள் நிலத்தின் வளமையும், மொழியின் வளமையும் இன்னமும் கூட தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தெரிந்து கொள்ள முயலவில்லையா என்பதும் எனக்கு இன்னமும் சந்தேகம்தான்.

ஆந்திரப்பிரதேச வரலாறு இங்கு மக்களுக்கு இன்னமும் சரிவரப் போதிக்கப்படுவதில்லை என்பது என்னுடைய மிகப் பெரிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை பல இடங்களில் இங்கு நான் பதிவு செய்தபோதெல்லாம் சிரித்துவிட்டுப் போய்விடுகின்றனர். பழமையின் பெருமை தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் உள்ள அலட்சியப் போக்கா என்பது கூட தெரியவில்லை.

நம் தமிழ் மண்ணில் உள்ள குகைக் கோயில்கள் போலவே பழமையான குகைக் கோயில்கள் இங்கு உள்ளன. முக்கியமாக விஜயவாடா நகரின் மத்தியிலேயே மூன்று குகைக் கோயில்கள் இருந்தாலும், நகரவாசிகள் பலருக்கு இங்கு சென்று காணும் ஆர்வம் கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நகரை அடுத்த தென்பகுதியில், கிருஷ்ணா நதியின் தென் கரையில் ஒரு அழகான குகைக் கோயில் உண்டவல்லி எனும் ஊரில் கட்டப்பட்டுள்ளது.


அனந்தசயனனான விஷ்ணுக்கும் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் எடுப்பிக்கப்பட்ட குகைக் கோயில் இது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட அனந்தசயனன் மிகமிக விசேஷமாக நம்மைக் கவர்கிறார். உண்டவல்லி குகைச் சிற்பங்கள் பற்றி பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நம் சிங்கப்பூர் விஜய் அழகான சிற்பப்படக் கட்டுரையைக் கூட எழுதியுள்ளார்.( www.poetryinstone.in/.../was-this-the-inspiration-behind-mahendra-pallavas-sculptural-quest.htm நாம் ஆகவே இந்தச் சிற்பங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.

என்னை மிகவும் வெகுவாகக் கவர்ந்தவர் இந்த பதினேழு அடியில் படுத்துக் கொண்டிருக்கும் அனந்தசயனன்.. பாற்கடலில் பள்ளி கொள்வதுபோல இருந்தாலும், பாற்கடலை தவிர்த்து அங்கே அத்தனை முனிவர்களும் தேவர்களும் பெருமாளைச் சேவிப்பது போல செதுக்கியுள்ளது ஒரு விசேஷம்.
அவரையே நானும் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது விசேஷமான ஒரு விஷயம் நம் கண்ணில் பட்டது. அது பெருமாளுக்குப் போடப்பட்டிருந்த நாமம். நல்ல பெரிய தென் கலை நாமத்தை கண்களுக்கு பளிச்சிட செதுக்கியிருந்தார்கள்.

ஆனால் நாமம் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாளோடு சேர்ந்து செதுக்கப்பட்டதாக இருக்கமுடியாது என்பதும் புரிந்தது, ஏனெனில் நாமம் இவ்வளவு பெரிதாக பெருமாளுக்கு போடப்படுவது உடையவர் ஸ்ரீராமானுஜர் காலத்தில்தான் மிகப் பரவலாக வளர்ந்தது. ராமானுஜருக்கு முந்தைய காலக் கட்டத்தில் சந்தனக் கீற்றாக ஒரு யூ வடிவில் போடப்பட்டதாக சில குறிப்புகள் கிடைக்கின்றன.

உடையவர் காலம் பதினோராம் நூற்றாண்டு. இந்த சிற்பம் படைக்கப்பட்ட காலத்தை சற்று ஆராய்ந்தோம். ஆந்திராவை பல அரச வம்சங்கள் பலப் பல ஆண்டுகளுக்கு ஆண்டுவந்தார்கள்.

கிருத்து பிறப்பதற்கு முன் இருநூறு ஆண்டுகளும், பிறந்த பின் 250 ஆண்டுகளுமாய் சுமார் நானூற்றைம்பது ஆண்டுகள் ஆண்ட பெருமை உடையவர்கள் சாதவாகனர்கள். இவர்கள் வேதமதத்திலும் பிறகு புத்தமதத்திலும் சேர்ந்து பெருமை படைத்தவர்கள்.

இவர்களுக்கு பின் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஆந்திரம் பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டது. இவர்களில் ஆந்திர இக்ஷவாகு அரசர்களும் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) ஆனந்த கோத்திர அரசர்களும் (கி.பி. நான்கும் ஐந்தாம் நூற்றாண்டு மத்தி வரை) இவர்கள் காலத்திலேயே இவர்களுக்குப் போட்டியாக வந்த விஷ்ணுகுந்தின் வம்சமும் மிகவும் புகழ்பெற்றவை. கி.பி.600 ஆம் ஆண்டு வரை ஆண்ட இந்த அரசர்களுக்குப் பிறகு சாளுக்கிய வம்சத்தினர், மேலைச் சாளுக்கியமாகவும், கீழைச் சாளுக்கியமாகவும் ஆந்திராவைப் பிரித்து ஆள ஆரம்பித்தனர். நம் தகவல்களுக்கு இந்தச் சரித்திரம் போதும் என நினைக்கிறேன்.

சரி, இந்த இடத்தில் நாம் குறிப்பிட்ட ஆனந்தகோத்திர அரசர்களால்தான் இந்த உண்டவல்லி குகைக் கோயில் குடையப்பட்டது. அதாவது சுமார் கி.பி.450-500 ஆண்டு கால கட்டங்களில் வேதமதத்தை மிகச் செழிப்பாக வளர்க்கும் உத்தியில் சிவன் - விஷ்ணு - பிரும்மா வுக்காக சிறுமலையைக் குடைந்து உளி கொண்டு செதுக்கப்பட்ட உயிரோவியங்கள். இப்படி இது நான்கு-ஐந்து நூற்றாண்டு கால ஆனந்தர்களால் கட்டப்பட்டது என்பதை அங்கேயே செதுக்கப்பட்ட, ரெட்டி அரசர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சொல்கிறது.

சரி, நாம் இப்போது நாம கைங்கரியத்துக்கு வருவோம்,

ராமாநுஜருக்கு முந்தைய நூற்றாண்டுகளில், அதுவும் அந்த ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் இந்த நாம வடிவம் இன்றுள்ளதைப் போல இல்லை என்று எல்லா சரித்திர ஆசிரியர்களும் எளிதாகவே சொல்லிவிடுவர். ஆனால் இந்த ஒரே பாறைச் சிற்பத்து பெருமாளில் எப்படி நாமம் வந்தது. அந்த நாமம் மட்டும் சுதை கொண்டு பின்னாளில் அதாவது பதினோராம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டுள்ளதாக சரித்திர ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

முதலில் எனக்கு சந்தேகம்தான். என்னதான் சுதையில் செய்து தனியாக இணைத்தாலும் இன்னமும் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் காலத்திலும் பொருந்துகிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக இருக்குமோ என்ற கேட்டதில் சமீபத்தில் ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்து அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை எடுத்துக் கொண்டு ஆராயச் சொன்னார். இது மறைந்த முன்னாள் பேராசிரியர் திரு பி.எஸ்.ராவ் அவர்களின் ஆந்திர நாட்டுச் சரித்திரம்.

இந்த உண்டவல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளால் நம் தமிழ்நாட்டு வைணவர்கள் குடும்பம் குடும்பமாக 10ஆம் நூற்றாண்டு முதல் குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டதைக் குறிப்பிடுகிறார். குண்டூர் மாவட்டம் சாத்லூரு போன்ற இடங்களில் (உண்டவல்லியும் குண்டூர் மாவட்டம்தான்) இன்னமும் இந்த வைணவக் குடும்பங்கள் உள்ளதாகவும் இவர்கள் திவ்வியபிரபந்தங்களில் சிறந்து விளங்குவதாகவும் தெரிய வந்தது. (சாத்லூரு ஸ்ரீமன் கோபாலகிருஷ்ணமாச்சார்யுலு, இங்கு விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். பிரபந்தத்தில் சிறந்த பண்டிதர். மிகச் சரளமாக தெலுங்கிலும், தமிழிலும் திவ்வியப்பிரபந்த பாடல்களை உபன்யாஸம் செய்வதில் வல்லவர்.) இப்படிப்பட்ட செய்திகளோடு இந்தப் புத்தகத்தில் இன்னொரு கூடுதல் செய்தியும் கிடைத்தது.

‘”வேங்கி மகாராஜுவைன ராஜேந்திர சோளுடு ஆக்ஞகு கட்டுபடி, அதடு சோளதேச சக்கரவர்த்தி ஆயினவெண்டனே, நாராயணராஜா ஆக்ஞபிரகாரம் சேஷசயனுடுகி பலு மராமத்து பணுலு சேயபடினதி”

என்று எழுதப்பட்டுள்ளது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது 1070 இல் ராஜேந்திரசோழன் வேங்கி அரசனானதும் அடுத்த ஆண்டிலேயே குலோத்துங்கசோழன் எனும் பெயர் பெற்று சோழதேசத்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். குலோத்துங்கசோழனின் தெலுங்கு நண்பனான நாராயணன் என்பானும் அவன் அண்ணனும் குண்டூர், கிருஷ்ணை மாவட்டங்கள் இணந்த ‘கம்மராட்டிரம்’ எனும் பகுதியை அரசாண்டதாக வரலாறு சொல்கிறது. இந்த சமயத்தில்தான் உண்டவல்லி அனந்தசயனப் பெருமாளுக்கு இந்த நாராயண சிற்றரசனால் நாம கைங்கரியம் செய்திருக்கப்படவேண்டும்.



இந்தக் கால கட்டத்தில் ‘சுதை’ எனப்படும் சுண்ணாம்புக் கலவை சிறபங்களில் உபயோகப்படுத்தப்படுவதென்பது தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த கலையாகும். மணிமேகலை இயற்றப்பட்ட காலத்திலிருந்தே இந்த சுதை சிற்பங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. (http://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612332.htm) பல்வேறு தூண்களில் இவை போல சிற்பங்கள் இன்னமும் காலத்தால் அழியப்படாமல் அதே களையுடன் சுதை கொண்டு பல்வேறு ரூபங்களில் செதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதே சுதை கொண்டு நாமம் மட்டுமே கூடுதலாக, ஒரு இணைப்பாக, ஒரு சிறு நிலத்தை ஆண்ட நாராயணனால் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட நிலம் நீர் வானம் என எல்லாவற்றையும் ஆளும் அந்த ஆண்டவனான பழைய நாராயணனுக்கு கைங்கரியமாக செய்துள்ளான் என்பது தெரியவருகிறது.

நாராயணனால் நாராயணனுக்கு செய்யப்பட்ட நாம கைங்கரியம் எனக் கொள்வோமா..

திவாகர்

Friday, January 8, 2010

பழைய புட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதம்

தெலுங்கானா - 4

(எல்லோருக்கும் ஒரு சுபசெய்தி.. இந்த தெலுங்கானா கட்டுரையை இத்துடன் முடித்துவிட்டேன்.. மகிழ்ச்சிதானே)

சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே மத்திய அரசால் சரி செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினை இந்த தெலுங்கானா பிரச்னை. இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாமல் அவ்வப்போது மிகப் பூதாகரமாக வெளிவந்து பல இளம் மாணவ உயிர்களைக் கொள்ளை கொண்டு போவதுதான் மனதுக்கு சிரமம் விளைவிக்கிறது. இந்த தெலுங்கானா பிரச்சினையால் சுமார் 400 மாணவர்கள் தியாகம் செய்துள்ளதாக தெலுங்கானா ஆதரவாளர்கள் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், மாணவர்களை ஏன் அநியாயமாக காவு கொடுக்கவேண்டும் என்று அவர்களை அதுவும் அந்த அரசியல்வாதிகளை கேட்போர் யாரும் இல்லை. பொதுவாகவே இளம் பிஞ்சுகளின் உயிர்கள் பலி வாங்கப்படும்போது மனம் கவலைப்படுமே.. இந்தக் கவலை இங்குள்ள அரசியல்வாதிகள் யாரிடத்திலும் இல்லை.



இந்த முறை மறுபடி பூதாகாரமாக வெடித்த இந்தப் போராட்டத்திலும் ஒரு சில இளம்பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டன. பல இடங்களில் மாணவர்களே முன்னின்று உண்ணாவிரதம் இருப்பதும் அவைகளை ஆதரிப்பதாக அரசியல் தலைவர்கள் செய்தி சேனல்களுக்கு போஸ் கொடுத்துவந்ததும், பேருக்காக இந்த அரசியல் தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து (சலைன் வாடர் ஏற்றிக்கொண்டே) பயமுறுத்தியதும் அனைவரும் புரிந்துகொண்டுதான் இருந்தனர். இந்த அரசியல்வாதிகளின் பூடக உண்ணாவிரதத்தின் மகிமை எல்லோருக்குமே நன்றாக தெளிவாக விளங்கியதால் இவைகளை அவ்வளவாக ஆந்திரமக்கள் ஆதரிக்கவில்லை என்றே சொல்லலாம். தெலுங்கில் நிராஹார தீட்சை (உண்ணாநோன்பு) என சொல்லப்படுவது இவர்களால் ‘நீராஹாரதீட்சை’ (தண்ணீர் அருந்தும் விரதம், அதாவது மருத்துவர்களால் சலைன் வாட்டர் ஏற்றப்பட்டது) ஆகிவிட்டது



ஆனால் மத்திய அரசு இந்த முறை வலியவந்து வலையில் மாட்டிக் கொண்டதாகவே இங்குள்ள அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் 9ஆந்தேதி வரை சாதாரணமாக இருந்த இந்தப் போராட்டத்தை நிறுத்துவதாக நினைத்துக் கொண்டு நட்டநடு நிசியில் வெளியிட்ட சிதம்பரத்தின் ‘தெலுங்கானா அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கப்படும்’ என்ற அறிக்கை இங்குள்ள நிலவரத்தை ஒரேயடியாக தலைகீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது. பழைய புட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பூதத்தையும் வெளியே விட்டுவிட்டது.



அந்த அறிக்கை சிதம்பரத்தின் (பாவம் அவர்!) அறிக்கையாகவே இங்குள்ள (ஏனைய ஆந்திரப்பகுதிகளில்) பாவித்து மிகப் பெரிய அளவில் போராட்டம் செய்தனர். ஐக்கிய ஆந்திரத்தைப் பிரிக்க மாபெரும் சதி நடக்கிறது என்றும், ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது மகா பாபம்.. என்றும் ஏனையபகுதிகளில் விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு காட்டுத் தீ போல பரவியது. சென்ற 1972 இல் தனி ஆந்திரா கேட்ட இவர்கள் அந்தக் கோரிக்கைக்கு முற்றும் மாறாக ஐக்கிய ஆந்திரம்தான் தேவை என்று போராட்டத்தில் மாணவர் சகிதம் இறங்கிவிட்டனர். அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பேதமில்லாமல் ராஜினாமா செய்ய, மத்திய அரசாங்கத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். சுமார் 25 பாராளுமன்ற எம்.பி.க்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த எச்சரிக்கை மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாகப் போகவும், அது ஏற்கனவே தெரிவித்த தெலுங்கானா ஏற்பாடுகள் துவங்கப்படும் என்பதற்கு மேலும் விளக்கமாக, 'இது பற்றி பரவலான கருத்துகள் சேகரித்தபின் முடிவு செய்யப்படும்' என்று குழப்பமாக (மறுபடியும் சிதம்பரம்) தெரிவிக்கவே, ஆந்திரா ஓய்ந்து மறுபடியும் தெலுங்கானா ரணகளம் ஆகியது.



மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி.. மத்திய அரசுக்கு இப்போது எந்தப் பக்கம் பேசினாலும் ஆபத்தே.. ஆனால் இத்தனை கஷ்டத்திலும் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு என்னவென்றால் மாநிலத்தின் பெரிய கட்சியான தெலுகுதேசத்தை உடைக்கும் நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் தெலுங்கானாவில் வந்தாலும், ஆந்திராவில் வந்தாலும் அவர்களுக்கு லாபமே. ஆனால் தெலுகுதேசத்தாருக்கு அப்படி இல்லை.. தெலுங்கானா தெலுகுதேசக் கட்சிக்காரர்கள் தனியே போவதற்கு தயாராகிவிட்டார்கள். இது அசகாயசூரரான நாயுடுவுக்கு பெரும் சோதனைதான். என்ன செய்வார் என்று பார்க்கவேண்டும். இன்றைய தேதிவரையில் அக்கட்சியில் இது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். இதுதான் அவரை இதுவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மௌனம் எத்தனைநாள் நீடிக்கும் என அவருக்கே தெரியவில்லையோ என்னவோ..



சரி, இந்தத் தெலுங்கானா பிரச்னைக்கு என்னதான் வழி.. பிரிந்து போவதா.. அல்லது ஒன்றாய் இருந்துகொண்டே சண்டை போட்டுக்கொண்டு ரத்தம் வடிப்பதா.. இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக் கட்டத்தில் இருக்கின்றது என்றே அரசியல் நிபுணர்கள் கூற்று. ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டதாகவே கருதுகிறார்கள்.



சரி, பிரிந்தால் என்னவாகும்: உண்மையாகச் சொன்னால் ஒன்றும் ஆகாது.. ஹைதராபாத் விஷயத்தில் மத்திய அரசு ஆட்சியின் பொறுப்பில் பொதுவாக வைத்துவிட்டும், மற்ற தெலுங்கானா மாவட்டங்களைப் பிரித்துக் கொடுத்தால், ஆந்திரருக்கு எந்த விதக் கவலையும் இல்லை.. ஐக்கியம் பேசுவோர் அனைவரும் உடனே ஒப்புக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா, காரமில்லாத ஊறுகாய், இனிப்பில்லாத திருப்பதி லட்டு, பருப்பே இல்லாத சாம்பார். இவர்கள் அனைவரின் கண்ணும் அந்த மாபெரும் நகரத்தின் மேல்தான். செல்வமும், நாகரீகமும் கொழிக்கும் ஹைதராபாதைப் பிரித்து தெலுங்கானா கொடுத்தால் தெலுங்கானா மக்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.



ஹைதராபாதை ஒரு பொதுவான நிலையில் வைப்பதிலும் உள்கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன என்பது மத்திய உளவுத்துறைக்குத் தெரியும். ஏற்கனவே போலிஸ் நடவடிக்கை மூலம்தான் பணியவைக்கப்பட்ட ஒரு நகரத்தைக் கடந்தகால நிலைக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசுக்கு விருப்பம் இருக்காது.



ஒருவேளை ஹைதராபாதையும் சேர்த்து தெலுங்கானாவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் ஏறத்தாழ 30 லட்சம் ஆந்திரர்களும், அவர்கள் உழைப்பும் செல்வமும் வீணாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டோமே என்ற ஒரு மாபெரும் பயம், ஆந்திராவை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த ஒரு நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. ஆனால் இப்போது இப்படித்தான். இனியும் இப்படித்தான் இருக்குமே தவிர ஹைதராபாதிலிருந்து விலகிவருவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல! நிலத்தின் மீது, தொழில்களின் மீது என ஏராளமான ஆந்திர முதலீடுகள் ஹைதராபாதில் சிக்கிக் கொண்டுள்ளன. அவ்வளவு சீக்கிரம் மீளவும் முடியாது.



வேறு என்னதான் வழி! மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ஒருவேளை சென்னாரெட்டியை மடக்கிச் செய்தது போல கேசிஆருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து சமாளிக்கமுடியுமா என்றால் ஏராளமான விழிப்புணர்வுக்கு மத்தியில் உள்ள தெலுங்கானா மக்கள் கேசிஆருக்கு எதிராகக் கிளம்பி சுனாமி போல ஆனால் என்ன செய்வது என்ற பயம் இப்போது உண்டு.



மத்திய அரசுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இப்போதே மற்ற மாநிலங்களும் தங்களுக்குள் தனித்தனிப் பிரிவினைக் கோரி அவர்களை நெருக்கவாரம்பித்துள்ளனர். தெலுங்கானா கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஒரே மொழிப் பிரதேசத்தையே இரண்டாகப் பிரித்தால், விதர்பா மராத்தி பேசாது இந்தி பேசும் மாநிலம், அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று போர்க்கொடி எழும்.



அட, தெலுங்கானாவுக்குத் தேவை சுயவளர்ச்சிதானே.. அது செய்துகொடுத்தால் போகிறது.. என்று யாரும் பேசவும் இனி வாய்ப்பில்லை. காலம் கடந்துவிட்ட வாய்ப்பு அது.



ஒரு விவரம் தெரிந்த ஆந்திர அறிஞர் சொன்னார்.. இந்தப் பிரச்சினையை ஏன் தீர்க்கமுயலவேண்டும்.. பிரச்சினை அப்படியே இருக்கட்டும், அதுவே ஆறி அணைந்து சாம்பலாகிவிட்டு, மறுபடியும் சிறிது காலம் கழித்து யாராவது புதிய தலைவர் மூலம் சாம்பல் ஊதப்பட்டு பிரச்சினை பெரிதாகி, மறுபடியும் சிலபல ‘தியாகங்கள்’ மூலம் ஆற்றப்பட்டு.. பிறகு.. மறுபடியும் பழைய குருடி, கதவைத் திறடி கதை போல இப்படியே இருக்கவேண்டியதுதான்.. காலம் செல்லச் செல்லப் பழகிவிடும் என்கிறார். காலம் ஒரு பெரிய மாயாவி என்றும் அந்த அனுபவசாலி ஆறுதல் சொல்கிறார்.



இது ஒருவகை பழைய தந்திரமே தவிர, பிரச்சினையை முடித்து சுமுகநிலை காணவேண்டும் என்ற விருப்பம் யாரிடத்திலும் இல்லையோ என்ற ஐயத்தைதான் எழுப்பும்.



அண்ணன் தம்பி உறவோ, அல்லது கணவன் மனைவி தகறாரோ, இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சந்தேகங்களும், அடிதடியும் வெகு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதையும் அப்படியும் கட்டாயப்படுத்தி ஒரே குடும்பமாக வைத்தால் இந்த அடிதடியுடன் எத்தனை நாட்கள் ஒன்றாக காலம் கழிப்பார்கள் என்ற கவலையும் வருகிறது.



‘யதா ராஜா ததா ப்ரஜா என்ற காலம் போய் யதா ப்ரஜா ததா ராஜா’ என்ற ஓட்டு வாங்கிப் பிழைக்கும் கட்டத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்ற கவலையும் கூடவே சேர்ந்து வருகிறது. இதுதான் இன்றைய சாதாரண ஆந்திர-தெலுங்கானா பிரஜையின் கவலையும் கூட..


திவாகர் (08-01-2010)
(நடுவே உள்ள படம் : தெலுங்கானா தல்லி (தாய்)படம் உதவி: கூகிளார்.

Thursday, January 7, 2010

ஹைதராபாதும் தெலுங்கானாவும்



ஹைதராபாதும் தெலுங்கானாவும்

(தெலுங்கானாவில் அரசியல் நிலவரம் சம்பந்தப்பட்டவரை நிறைய விஷயங்களை சுருக்கமாகவே தர முயல்கிறேன். குறிப்பாக கம்யூனிச இயக்க வரலாறு மிக விரிவாக வளர்ச்சி பெற்ற இடமாக தெலுங்கானாவில் சுதந்திரப் போராட்ட சமயத்தில் இருந்ததும், சுதந்திரம் அடைந்த பின்னர், காங்கிரஸ் மிகப் பெரிய பலத்துடன் இந்தியாவை ஆண்டுவந்த சமயத்திலும், கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ள செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் தக்கவைத்துக் கொண்டிருப்பதைக் கூட ஏற்கனவே சுருக்கமாகத் தந்துள்ளேன். இதன் பின்னனி மிக மிக நீண்ட வரலாறு கொண்டது.. ஆனால் இதை இங்கே விவாதிக்கப்போவதில்லை).

ஹைதராபாத் நிலவரத்துக்கு வருவோம். கோல்கொண்டா நவாப் தன் அன்பு மனைவி பாக்கியாவுக்காக பரிசளித்த பாக்கியநகரம் என்று ஹைதராபாத்தைக் கட்டியதாக சொல்வர். இப்போதும் கூட இந்த சுந்தரமொழி நாட்டு தொலைக்காட்சிகள் அடிக்கடி பாக்கியநகரம் என்றே ஹைதராபாதைப் பற்றி பேசிக்கொண்டே ஞாபகமூட்டி வருகின்றன. 458 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஹைதராபாத் கடந்த சில நூற்றாண்டுகளாகவே புகழ் பெற்ற நகரம், அதுவும் இரட்டை நகரம் என்ற பெயரில் சிகந்திராபாத் நகரும் சேர்ந்து கொண்டதால் இந்த நகருக்கு சாதாரணமாகவே ஒரு விசேஷம் வருவது கூட இயற்கைதான் நன்றாக வளர்ச்சி அடைந்த நகரம் - எந்த அளவில் என்றால், நவநாகரீகத்தில் உச்சகட்டமாகவும், ஏழ்மையில் பரம தரித்திரமாகவும் இருவேறு கோணங்களில் புகழ் பெற்ற நகரமாகவும் விளங்கியது. ஒருபக்கம் ஆடம்பரமான ஹைதராபாத் இருந்தால் அதே ஹைதராபாதில்தான் உலகத்தின் மொத்த சந்துகளும், ஒருவேளை வயிற்றுக்குக் கூட உணவில்லாத ஏழைகளும் அதிக அளவில் உள்ளனர். புகழ்பெற்ற போலிஸ் நடவடிக்கை 1948 இல் அப்போதைய நிஜாம் மீது இந்திய சர்க்கார் நடத்தியபோது ஏற்பட்ட கலவரத்தில் இறந்துபோன ஏழைக் குடும்பங்கள் (மதபேதமில்லாமல்) ஏராளம். இடம் பெயர்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில். (எழுத்தாளர் அசோகமித்திரன் கூட இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதியிருப்பதாக நினைவு) ஏறத்தாழ 1983 வரை, பழைய ஹைதராபாதில் ஒரு விசித்திரமான விதத்தில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடிக்கும். காரணம் எது, எதற்காக என்று யாருக்குமே தெரியாது. திடீரென ஊரடங்கு உத்தரவு என்பார்கள்.. யாரோ வருவார்கள்.. யாரையோ கத்தியால் குத்துவார்கள்.. ஏன் எதற்கு என்று புரியாமல் கேட்க நாதியில்லாமல் ஊர் அடங்கி காணப்படும். இதெல்லாம் ஓரிரு வாரங்கள்தாம்.. பிறகு நிலைமை வழக்கப்படி சர்வசாதாரணமாகவே இருக்கும். சில மாதங்கள், சமயத்தில் சில வருஷங்கள் கழித்தும் திடீரென பழைய கொடுமை ஆரம்பித்து முடியும்.. இதற்கு காரணம் கூட உள்ளூர் அரசியலும் அந்தந்தக் கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும்தான்.

ஆனால் இந்த நிலை முழுவதுமாக மாற்றப்பட்டது ஒரு அரசியல்வாதியால் அல்ல.. ஒரு சினிமா நடிகரால்.. ஆம்.. மதிப்புக்குரிய தெலுங்கு நடிகர் என். டி. ராமாராவ் ஆட்சிக்குப் பொறுப்பேற்ற நாள் முதல் (1983) இந்த திடீர்க் கலவரங்கள் காணாமல் போனது. மறுபடியும் ஒரு முறை 1990 இல் எழுந்து (இது அப்போது மீண்டும் பெரிதாக எழுந்த தலைவரான முதலமைச்சர் சென்னாரெட்டியை பதவியில் இருந்து விரட்டப் பயன்படுத்தப்பட்டது)) உடனே அடங்கிப் போனாலும் அந்த சமயத்தில் என். டி. ஆர் ஆட்சியில் இல்லை என்பதும் உண்மை. 1985 இலிருந்து தலைநகரத்தின் வளர்ச்சியில் மள மளவென மாற்றங்கள் காணப்பட்டன. தெலுங்கு தேசம், ஆந்திரர்களின் தன்மானம், அவர்கள்தம் உரிமை என்ற பெயரில் என். டி. ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தலைநகரான ஹைதராபாதை மிக வேகமாக பல்வேறு திட்டப்பணிகள் செய்து வளர்த்தார்கள் என்பதில் மாற்றுக்கட்சியினருக்குக் கூட அபிப்பிராய பேதம் கிடையாது. முக்கியமாக தொழில் முன்னேற்றம், பிறகு படிப்படியாக சினிமா படப்பிடிப்புத் தொழில் முன்னேற்றமும், அடுத்த கட்டமாக புறநகர்ப் பகுதியை விரிவுபடுத்தி மென்பொருள்நகரமாகவும் விரிவுபடுத்தி, மற்ற எந்த நகரத்துக்கும் கிடைக்காத வளர்ச்சியை இந்த மாநகருக்குக் கிடைக்கவைத்தார்கள். (அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு அங்கு ஓட்டு விழவில்லை என்பது வேறு விஷயம்). தற்சமயக் கணக்குப்படி சுமார் 30 லட்சம் ஆந்திரர்கள் அதாவது தெலுங்கானா தவிர ஏனைய மாவட்டத்துக்காரர்கள் ஒரு ஹைதராபாத் நகரத்தில் (மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதாவது மகா ஹைதராபாத்) மட்டும் வசித்தும், தொழில் அல்லது வேலை புரிந்தும் வருகிறார்கள். இவர்களின் உழைப்பு பல்வேறு வகையிலும் அந்த நகரத்துக்குக் கிடைத்துக் கொண்டும், அவர்களால் நகரமும், அந்த நகரத்தால் அவர்களும் ஒன்றுக்கொன்று பிரியமுடியாத அளவில் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம்.

ஹைதராபாத் பற்றி எழுதும்போது முக்கியமான விஷயம் சொல்லவேண்டும். இங்குள்ள ஹைதராபாத் வாசிகளுக்கு ஆரம்பத்தில் தெலுங்கு தெரியாது.. எல்லோருமே உருது அல்லது இந்திதான் பேசுவார்கள். இது 1990 வரை இருந்தது. இப்போது அப்படி அல்ல.. 90 சதவீதம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள். உபயம்: குடியேறிய ஆந்திரமக்களும், தொல்லைப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்களும்தான். (நம் அஷாருத்தீனுக்கும் சானியா மிர்சாவுக்கும் இப்போதும் தெலுங்கு நஹி நஹிதான்)

சரி, மறுபடியும் தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். நம் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஒரு குணம். அவர்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இது ஆதிநாளில் இருந்து வந்த ஒரு விளையாட்டுதான். ஆனால் அவர்கள் தங்கள் டெல்லித் தலைவருக்குக் கட்டுப்பட்டவர் போல வெளியே காட்டிக் கொண்டு அதன்படியும் நடந்துவருவார்கள்.பிரும்மானந்தரெட்டி, சஞ்சீவரெட்டி போன்ற பெரிய ரெட்டிகள் ஆண்டுவந்த காலத்தில் சற்று முடங்கிக் கிடந்த தெலுங்கானா போராட்டம் மறுபடியும் 1969 இல் சென்னாரெட்டியால் புதியரத்தம் செலுத்தப்பட்டு, புத்துயிர் ஊட்டி மறுபடியும் மிகப் பெரிதாக மாணவர்கள் மூலம் எழுப்பப்பட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்த சென்னா ரெட்டியார், தெலுங்கான பிரஜா சமிதி என்ற பெயரில் இப்போதுள்ள டி.ஆர்.எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி) போல ஒரு கட்சி ஆரம்பித்தார். மாணவர்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்தார்கள். பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965 இல் மாணவர்கள் தலைமையும், அண்ணாதுரையின் தலைமையும் எப்படி ஒன்று சேர்ந்து நடத்தி வெற்றி கண்டார்களோ, அதே விதத்தில் தெலுங்கானா மாணவர்களும் சென்னாரெட்டியும் ஒன்று சேர்ந்து வெற்றி காண விழைந்தார்கள். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புக்காக மாணவர் பலி அல்லது ‘தியாகம்’ போலவே, தெலுங்கானா போராட்டத்திலும் சுமார் 360 மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் கண்ட வெற்றி இங்கு தெலுங்கானாவில் கிடைக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி ஒரு புதிய முயற்சி மூலமாக தலைவரான சென்னாரெட்டியையே காங்கிரஸுக்கு தங்கள் உறுப்பினர் சகிதம் வந்துவிடுமாறும், அவருக்கே முதலமைச்சர் பதவி என்றும் வலைவிரித்தார். வலையில் சரியாக மாட்டிய அந்த தெலுங்கானா கட்சி உடைந்து சென்னாரெட்டி முதல்வராகி, தான் முதல்வரானதால் தெலுங்கானாவே பயன்பட்டு விட்டது என்றும் நாடெங்கும் அறிவித்தார். இதனால் இன்னொரு குழப்பம், 1972 இல் புதுமாதிரியாக மற்ற பகுதிகளில் இருக்கும் ஆந்திரர்கள் தங்களுக்கு 'தெலுங்கானா' நீங்கலாக தனி ஆந்திரமாநிலம் வேண்டுமென ‘ஜெய் ஆந்திரா’ என்ற இயக்கம் ஒன்றினை புதிதாக அங்குள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஆரம்பித்தார்கள். இது முதலில் மிகப் பெரிய இயக்கம் போல ஆரம்பித்தாலும் நாளடைவில் ஸ்ருதி மங்கித் தேய்ந்து போய்விட்டது. (இந்த இயக்கம் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்தவர்தான் இப்போதை வெங்கையாநாயுடு)

சரி, இப்போது உள்ள இயக்கம் என்ன.. ஏன் வந்தது.. இத்தனை இடைவெளி விட்டு வரவேண்டிய அவசியம் என்ன.. சரி, இப்போதாவது தெலுங்கானா கிடைத்துவிடுமா..

அதையும் ஒரு கை பார்த்து விடுவோமே..


(Map thanks to Mapsofindia.com)

Wednesday, January 6, 2010

WIFE, HUSBAND AND DIVORCE


TELANGANA - PART 2

WIFE - HUSBAND & DIVORCE

தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. என்று கேட்டால் ‘இது அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லிவிட்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற வார்த்தையை உதாரணமாக வைக்கிறார்கள். அது என்ன?

“தெலுங்கானா ஆந்திரா இணப்பு என்பது கணவன் மனைவி திருமணத்தைப் போன்றது. இதில் இன்னொரு சௌகரியம் என்னவென்றால் ஒருவேளை நாளடைவில் இருவர் மனமும் ஒத்துப்போகவில்லை என்றால் ‘விவாகரத்து’ வேண்டுமானாலும் இவர்கள் கேட்டுப்பெறலாம்”.

இது நமது நேரு மாமாவின் பொன்னான வார்த்தை. அப்படியே திருமணம், கணவன் மனைவி என்றாலும் திருமணத்தை வாழ்த்துபவர்கள் நம் இந்தியக் கலாச்சாரத்தில் எப்படி வாழ்த்துவார்கள்.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என முழு நம்பிக்கையோடு வாழ்த்துவார்கள். ஐரோப்பிய கலாசாரம்தான் திருமண விஷயங்களில் சற்று பாதுகாப்பான எச்சரிக்கையாக இருக்கும். அதனால் அங்கு உள்ள அரசாங்கங்கள் இதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையாகவே, திருமணம் பதிவு செய்வதற்கு முன்பேயே ஒருவேளை இது பிற்காலத்தில் விவாகரத்தானால் என்னென்ன செய்யலாம் என்கிற மனோபாவத்தில் யோசித்து அதற்காக ஒரு பாதுகாப்புச் சட்டம் வைத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் நேரு மேற்கத்திய பாணியைப் பின்பற்றி மேலோட்டமாகவே நம்பிக்கையில்லாமல் வாழ்த்தினார் என்றுதான் சொல்லவேண்டும்.

தெலுங்கானா ஆதியிலிருந்தே ஆந்திராவுடன் சேர மறுப்பு தெரிவித்துவந்தது. காரணம் தன் தனித் தன்மையை இழக்க நேரிடுமோ என்ற பயமும், ஆந்திராவின் கொள்ளைச் செல்வமும் தங்களுக்குக்குப் பயன் தரமுடியாதவகையில் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இருவரும் மணமுடித்துச் சேருவதால் அப்படி ஒன்றும் பயனில்லை என்றே கருதினர்.

ஆனால் 1950 களில் தெலுங்கானாவில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஆந்திரத் தெலுங்கர்கள் காங்கிரஸில் செல்வாக்காகவும், கட்சிக்குத் தூண்களாகவும் செயல்பட்டு வந்த காலகட்டம். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையில் வெற்றி பெற்ற ‘மாவீரர்’கள். மொழிவாரிமாநில ஆணையம் தெலுங்கானா பகுதியும் (சுமார் ஒன்பது மாவட்டங்கள் ஹைதராபாத் உள்பட) ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்படவேண்டும் என்று கருதியபோது, அப்போதைய தெலுங்கானா முதல்வர் பி.ராமகிருஷ்ணராவ் சிறிய சலசலப்பு செய்ததோடு ஒரு சாதாரணமான எதிர்ப்பைக் காண்பித்து சில பல ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டதால் இணைப்பை ஒப்புக் கொண்டார்.

தெலுங்கானா நினைத்திருந்தால் அப்போதே ஏனைய இந்தி பேசும் தனித்து மாநிலங்கள் போல தனக்கும் ஒரு மாநிலம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அல்லது இன்றைய விதர்பா, சட்டிஸ்கரின் தென் பகுதிகள் இவைகளை தன்னுடம் சேர்த்துக் கொண்டு மேலும் பெரிய மாநிலமாக தன்னை உருவாக்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்ப்பை இழந்துவிட்டது அப்போது என்றே சொல்லவேண்டும். அங்கே அப்படி நினைத்துச் செயல்படும் அளவுக்கு தலைமை அப்போது இல்லை என்பதே பெரிய குறைபாடு.

தெலுங்கானாதான் ஆதி தெலுங்கு பேசும் நாடு என்று அந்த இருப்பிடங்களைச் சேர்ந்தவர் பெருமை பேசுகின்றனர். தெலுங்கானாதான் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெலுங்கு நாடு என்றும், ராமர் வனவாசத்தில் கோதாவரி வட கரையில் (பத்ராசலத்துக்கு மேற்கே 22 கி.மீ) பர்ணசாலை வைத்துக் கொண்டு, சீதா தேவியுடனும், தம்பி லக்குவனுடனும் சில ஆண்டுகள் தங்கி இருந்தார் என்றும் சொல்வர். ஆனால் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த பிரதேசம் முழுமையும் நிஜாம் ஆளுமையில் இருந்தததும், பத்ராசலம் கோயில் கட்டி அதனால் சிறைப்பட்ட கோபன்னா எனும் இராமதாசர் கதையில் தெரியும். நிஜாம் ஆட்சியில் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு தெலுங்கானாவின் எல்லாப்பகுதியையும் ‘காவு’ கொடுத்துவிட்டு, அவர்கள் சம்மதத்துடன் கோல்கொண்டா, ஹைதராபாதை மட்டும் ஆண்டுகொண்டிருந்தவர்கள், அதையும் 1948 இல் போலிஸ் நடவடிக்கை மூலம் பறிகொடுத்துவிட்டார்கள். இந்தப்பகுதியை மீட்டு இந்திய அரசு தெலுங்கானாவின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து ஹைதராபாத் மாநிலம் என்று பேர் வழங்கியது. 1951 இல் குடியரசு பிரகடனப்படுத்திய நேரத்தில் தெலுங்கானாவின் முதலமைச்சராக வி.கே. மேனன் எனும் மலையாள ஐ.சி.எஸ் ஆபீசரை இந்திய அரசாங்கம் முதல் அமைச்சராக நியமித்து 1952 இல் தேர்தல் நடத்தி பி. ராமகிருஷ்ணராவை தெலுங்கானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சராக்கியது. ஆனால் இவையெல்லாம் ஆந்திர அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் (அந்தக் காலத்தில்) முன்பு நீடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


(படம் உதவி: கூகிளார்)

பொதுவாகவே ஹைதராபாதை விடுத்து ஏனைய தெலுங்கானா பகுதிகளைப் பார்த்தோமானால், தக்ஷிணப் பீடபூமியும், மலைவளங்களும் சூழ்ந்தபிரதேசமாகவே தெலுங்கானா காணப்படும். அதிக விவசாய நிலங்கள் ஆந்திரக் கடற்கரை மாநிலங்களைப் போல கிடையவே கிடையாது. மலைவளமும் கனிவளமும் எங்கே கிடைத்தாலும் அல்லது இருந்தாலும் அவை இந்தியா முழுமைக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற இயற்கைச் செல்வம். இந்த வளங்களைத் தன்னுள் கொண்டுள்ளதனால் ஒரு சில பகுதிகள் (சிங்கரேணி சுரங்கப் பகுதிகள், சில பேப்பர் மில்கள்) தவிர தெலுங்கானா இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்பது வாஸ்தவமே. ஏனைய இடங்களில் பெறவேண்டிய அத்தனை வளர்ச்சிகளுமே ஹைதராபாத் நகரம் ஒன்றே பெற்றுவிட்டதால் ஏனைய மாவட்டத் தலைவர்கள் ஒன்றுமே செய்யமுடியாத நிலையும் அங்கு ஏற்பட்டது.

முக்கியமாக மக்களின் கல்வி அறிவு வளர்ச்சி தெலுங்கானாவில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை. இருக்கும் கல்வி அறிவு பெற்றோரில் கூட கணிசமானோர் முதலாளிகளின் அடக்குமுறையை ஏற்கமுடியாமல் கம்யூனிச இயக்கங்களில் சேர்ந்து, வசிக்கும் இடத்தின் வளர்ச்சியை மேலும் குறைக்கவே செய்தனர். கம்யூனிசம் இன்னமும் கூட கம்மம், பத்ராசலம், பெல்லம்பள்ளி போன்ற மலைக் காடு உள்ள பகுதிகளில் ஏராளமான செல்வாக்கு பெற்றும் பாராளுமன்றத்தில் படிப்படியாக குறைந்துவரும் கம்யூனிச கட்சிகளின் எண்ணிக்கையை தக்கவைக்கும் வகையில் பிரதிநிதிகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த கம்யூனிச பிரதிநிதிகள் இந்தக் கால அரசியல்வாதிகளோடு பழகினாலும், சம்பாதிக்கத் தெரியாததாலும், (ஊழலும் கிடையாது) மக்களுக்கு ஒருவேளை சாப்பாடு கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்ற கொள்கையில் வேலையாட்களாகவே பயிற்றுவித்து, அந்த மாபெரும் ஜனங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் வகையில் சுதந்திரத்தின்போது எப்படி இருந்தோமே அப்படியே அவர்களை வைத்திருப்பதிலும் நிகரில்லாதவர்கள். பெரிய முதலாளிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்வதில் மிக மிகத் தயங்குவார்கள்.

அதே சமயத்தில் ஆந்திரா எல்லாவகையிலும் முன்னேறியது.. நல்ல விளைநிலங்கள், தண்ணீர் வளம், மின்சார உற்பத்தியில் தடையில்லாமை, கல்வி நிறுவனங்கள், மருத்துவம், சாலை வளர்ச்சி, கிராம வளர்ச்சி என எல்லா முன்னேற்றமும் கண்டாலும் ஊழலிலும் மிகவும் தொழில்முறை நேர்த்தியாக எங்கெங்கும் எவ்வெதிலும் முன்னேறிய சமுதாயமாக மாறிவிட்டார்கள்.

1956 இல் சென்னையிலிருந்து மொழிவாரி மாகாணமாகப் பிரிந்து சென்ற ஆந்திர மக்கள், தெலுங்கானாவைக் கூட்டித் தம்மோடு வைத்துக் கொண்டு, தம் தலைநகரமான ஹைதராபாத் மிக மேன்மையான நிலையில் முன்னேற மிகக் கடுமையாக உழைத்தவர்கள், தங்கள் முதலீடுகளையும் தாராளமாகவே தலைநகரில் வாரி இறைத்தார்கள்.

சரி, இதைப் பற்றி மேலும் பார்ப்போம்..

Tuesday, January 5, 2010

ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ

ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ?




ஆந்திர ஐக்கியவாதி
: நாம் ஒரு தாய் மக்கள்.. ஒரே பாஷை.. நாம் ஒன்றாகவே இருக்கவேண்டும் தம்பி, நமக்குள் பிரிவினை வேண்டாம்.. நானும் நீயும் அண்ணன் தம்பி.. தெலுகு தல்லி Bபிட்டலு மனமு! சொல்வதைக் கேள்!.



தெலுங்கானா: ஏற்கனவே உருது இருந்தாலும் தெலுங்கு அதிகம் பேசப்படுவதால் நாம் ஒரே மொழி என்று வேண்டுமானால் ஒருவகையில் பொருந்தும்.. ஆனால் ஒரு தாய் மக்கள் என்று சொல்லாதே.. 1956 க்கு முன் உன் தாய் வேறு.. என் தாய் வேறு.. ஏதோ விதி வசத்தால், முட்டாள்தனமாக ஒன்றானோம்.. இப்போது பிரித்துக் கொள்கிறோம். போ.. போ.. இங்கிருந்து போய்விடு.. எம் நாட்டை எமக்குக் கொடு.. நீ உன் நாட்டில் போய் சௌக்கியமாக இருந்துகொள்.. யார் வேண்டாமென்பது..



ஐக்கிய ஆந்திரா: ஐயோ, கொடுமை.. இதை யாரேனும் கேட்பது கிடையாதா.. நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கலாமென்றுதானே அன்று மொழிவாரியாக இணைந்தோம். இந்த ஐதராபாத்தை இவ்வளவு பெரிய புகழ்பெற்ற நகரமாக ஆக்கியிருக்கிறோம்.. கிளிண்டன் வந்தது யாரால்.. ஷம்சாபாத் ஏர்போர்ட் வந்தது யாரால்.. ஹைதராபாத் நகரத்தையே ஒரு பெரிய கம்ப்யூடர் மென்பொருள் சிடி என்று உலகமெல்லாம் புகழவைத்தோமே, யாரால்.. இந்தியாவின் ‘மருந்து மாத்திரைகளின் தலைநகரம் ஹைதராபாத்’ என்று பேசவைத்தோமே.. எல்லாம் ஆந்திரப் பெருமக்களாலல்லவோ.. இப்போது திடீரென தெலுங்கானா கேட்டால் எப்படி கொடுப்பது.. முடியாது.. முடியாது.. தனித் தெலுங்கானா இல்லை.. இல்லை.. அதெல்லாம் கொடுக்கவும் முடியாது.. நான் அண்ணன், நீ தம்பி, நான் மூத்தவன் சொல்வதைக் கேள் தம்பி, பிரிவினை பேசாதே..



தெலுங்கானா: நீயெல்லாம் ஒரு அண்ணனா? இதையெல்லாம் உங்களை செய்யச் சொல்லி யார் கேட்டது.. இதோ பார்! இந்தியாவில் எந்த ஒரு பெரு நகரமும் இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது இயற்கையான முறையால்தான். அங்கே சென்னையைப் பார்.. நீங்கள் வந்ததிலிருந்து இன்னமும் பெரிய நகரமாக மாறிவிட்டது.. பெங்களூரைப் பார்.. எப்படிப்பட்ட வளர்ச்சி.. அதைப் போலத்தான் ‘எங்கள்’ ஹைதராபாத் நகரமும்! நாங்கள் கடந்த ஐம்பது வருடங்களாக தெலுங்கானா தனியாக வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம்.. சென்னா ரெட்டியிலிருந்து கே சி ஆர் வரை தெலுங்கானா வுக்காக போராடிய தலைவர்கள் பட்டியல் இருக்கிறது. ஐம்பது வருட போராட்டம் என்று தெரிந்தும், இந்த ஹைதராபத்தில் தொடர்ந்து உங்கள் ஆந்திரர்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்கத்தானே.. இது வரை எத்தனை கோடி லாபம் பார்த்துவிட்டீர்களோ.. இனியும் எங்கள் தெலுங்கானா தல்லி (தாய்) பொறுக்கமாட்டாள். நாட்டைக் கொடுத்துவிட்டு உன் ஊர்ப்பக்கம் ஓடு..



ஐக்கிய ஆந்திரா: ஹா! இது அடுக்குமா.. அநியாயமாக அன்று மெட்ராசில் சண்டை போட்டு பிரிவினை வாங்கி ஒன்றாக வாழலாமே என்று வந்தோமே.. இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து கேட்கத்தானா.. தம்பி, நான் சொல்வதைக் கேள்.. எங்களை விலக்காதே.. நானும் நீயும் ஒரே ரத்தம்.. இரண்டு பேருக்கும் பொதுவானது ஹைதராபாத். நாம் ஒன்றாகவே இருப்போம்..



தெலுங்கானா: நீ எப்படி வேஷம் போட்டாலும் சரி! நீங்கள் எல்லோருமே சினிமாக் கும்பல்தானே.. உங்கள் நடிகர்கள் படத்தைப் பார்க்க கண்ணில் ரத்தம் வடிய எங்கள் தெலுங்கானா மக்கள் எவ்வளவு அழுதிருக்கிறோம்.. எங்கள் செல்வத்தையெல்லாம் இழந்தோமே.. இனியும் உங்கள் சகாப்தம் வேண்டாம்..



ஐக்கிய ஆந்திரா: ஐய்யோ.. இப்போது அடிமடியில் கை வைத்துவிட்டாயே தம்பி!.. சினிமாக்காரர்கள் அதிகம் ஹைதராபத்தில் வசிக்கிறார்கள்.. அவர்களெல்லாம் துரத்தி அடித்தால் எங்கே என்று போவார்கள்..



சினிமாக்காரர்கள் (அழுதுகொண்டே) : வேறெங்கு போவதாம்? மறுபடியும் மெட்ராசே கதி.. எங்களை இன்னும் அங்கே அரவணைப்போர் அதிகம்.. எங்களை வேண்டாமென்றால் நாங்கள் அங்கேயே போய்விடுகிறோம்.. ரொம்ப நல்லவங்க அவங்க..



ஐக்கிய ஆந்திரா: பார்த்தாயா.. எப்படி அரண்டுபோய்விட்டார்கள் இவர்கள்.. இந்த முகத்தைப் பார்த்தாலாவது உன் முடிவை மாற்றிக் கொள் தம்பி!



தெலுங்கானா: ஐய்யோ தெலுங்கானா தல்லி! இவர்கள் நாடகத்தை சற்று நிறுத்தச் சொல்லேன்.. இவர்கள் அழுதாலும் சரி, கெஞ்சினாலும் சரி.. நாங்கள் தெலுங்கானா அடைந்தே தீருவோம்.. ஹைதராபாத் எங்கள் தலைநகரம்.. ஜெய் தெலுங்கானா..



மேலே கண்டவை எல்லாமே மிக மிக வாஸ்தவமாக தற்சமயம் ஆந்திர தேசத்தில் அடித்துக் கொண்டு பேசிக்கொள்ளப்படுபவை.. ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப் பிரதேசமாக மாறி ஏகமாக கூச்சல் போட்டுக் கொள்கிறார்கள். ஏறத்தாழ பத்து தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இப்போதெல்லாம் வயிறு முட்ட முட்ட சாப்பாடு.. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா.. எம் எல் ஏ வெல்லாம் கூண்டோடு ராஜினாமா.. அமைச்சர்கள் கூட வேலை செய்யமாட்டோம், என்று கோஷம்.. மாணவ மணிகளோ ஏகத்துக்கு உண்ணாவிரதம் இருந்து சாகும் கொடுமைகள் ஆங்காங்கே.. ஒரு போலிஸ் பெரிய பெண் அதிகாரி தெலுங்கானாவுக்கு ஜே என்று ராஜினாமா செய்து களத்தில் குதித்து விட்டார். இன்று ஆந்திரத்தின் எந்த மூலையில் போனாலும், இந்த தெலுங்கானா பிரிவினைதான் பேசப்படுகின்றது என்ற அளவுக்கு இது மக்கள் பிரச்சினையாக எல்லோரும் சேர்ந்து ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கு நடைமுறையில் பார்த்தோமானால் ஹைதராபாதிலேயே, தெலுங்கானா-ஆந்திரா என்று அரசாங்க அலுவலகத்திலும் பிரிவினை வந்துவிட்டது. ஆட்சியும் சரியாக நடத்த விடவில்லை.. தொழில் முடங்கிக் கிடக்கிறது. கல்விக் கூடங்கள் போராட்டக்களமாக மாறிப் போய்விட்டன..



சரி!.. ஒருவேளை தெலுங்கானா வந்தால் ஆந்திரர்கள் என்ன செய்வார்கள். ஏன் ஹைதராபாத்தை அவ்வளவு விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறார்கள். அதெல்லாம் சரி, தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. ஏன் தெலுங்கானா கேட்கிறார்கள். இதையெல்லாம் சற்று ஆராயலாமா..