Wednesday, December 23, 2009

மார்கழியில் ஆந்திரம் மாறும் விந்தை

மார்கழி மாதம் மிதமான பனியோடு சில்லென்று ஆரம்பித்து விட்டது. மார்கழியோடு மனம் குளிர திருப்பாவையும் கேட்க ஆரம்பித்துவிட்டோம். தமிழகத்தில் எப்படியோ. ஆனால் ஆந்திரத் திருநாட்டில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிக்கிறது. பாரதி ஒருவேளை இங்கு வந்தால் 'அடடே! தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர்’ என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே!!.. என்று மீசையை முறுக்கிக்கொள்வான். (பிறகு அவனுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்.. 'இது தந்தைநாடான தமிழ்நாடல்ல தலைவா..சுந்தரத்தெலுங்கு என்று சொன்னாயே.. அந்தத் தெலுங்கு நாடு' என.)

ஹைதராபாத், செகந்திராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, குண்டூர், கர்நூல், காளஹஸ்தி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் (திருப்பதி கேட்கவே வேண்டாம்-திருமலையிலோ முப்பது நாளும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் தமிழோசைதான்) இன்னும் எத்தனையோ நகரங்களில் சாயங்கால வேளையில் பனியில் நனைந்துகொண்டே ஆங்காங்கே கூட்டங்கள் அமர்ந்திருக்க, ஒரு பெரியவர் அல்லது பெண்மணியார் தமிழில் திருப்பாவைப் பாடி அதற்கு தெலுங்கில் விரிவுரையும் விளக்கவுரையும் கதையாகச் சொல்கின்றார்கள். தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும்போது 'ழ' ‘ற’ 'ள' நாக்கில் சரியாகப் பிறளாது (நம்மூரில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? - என யாரும் கேட்கவேண்டாம்) ஆனாலும் அவர்களின் மழலையின்பத் தமிழ்ப் பேச்சு காதில் இன்பத் தேனாய் விழுகிறது. சொல்பவரும் கேட்பவர்களும் அத்தனைபேரும் தெலுங்கர்களே. நம்மை விட பக்தியாய் மிகவும் ஊன்றிப்போய் கேட்கிறார்கள்.

இந்த பக்தி இயக்கம் (அப்படித்தான் சொல்லவேண்டும்) கடந்த முப்பது வருடங்களாகவே ஆந்திராவில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு வைணவப்பெரியவர். பெயர் – ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு. பரமபதம் அடைந்து சில வருடங்களாகிறது. பழுத்த வைணவப்பழம். தெலுங்கு மற்றும் வடமொழியில் மன்னர். காசி பல்கலைக்கழகம் அவர்களாகவே இவரிடத்தில் வந்து 'மஹோபாத்தியாய' பட்டத்தைக் கொடுத்து விழா எடுத்தார்கள். இவர்தான் ஆந்திரத்தில் திருப்பாவை - முப்பது பாடல்களையும் முப்பது நாட்கள் உபன்யாஸமாக தெலுங்கு மக்களிடையே பரப்பிய மகான். இவரால் கற்பிக்கப்பட்ட எத்தனையோ பண்டிதர்கள் இன்று ஊரெங்கும் திருப்பாவை தமிழ்பரப்பி வருகிறார்கள். இவருடைய சிஷ்ய பரம்பரை ஆந்திராவெங்கும் பரவி இருக்கிறார்கள். ஆந்திராவில் வைணவப் பெரியவர்களான சின்ன ஜீயரும், ஸ்ரீமன் ராமானுஜ ஜீயரும் அப்பாளாச்சார்யுலுவிடம் பயின்றவர்கள்தான். சின்ன ஜீயர் வெகு அழகாக தமிழ் பேசுவார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திருப்பாவையால் தமிழ் ஆந்திராவெங்கும் பரவுகிறது என்று கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாருங்கள்.

உடையவர் ஸ்ரீராமானுஜர் செய்த மிகப் பெரிய சமுதாயப் புரட்சி என்பது சாதிகளை ஒன்று சேர்த்ததுதான். அவர் செய்த அந்த மாபெரும் சேவை சொந்த வீடான தமிழகத்தில் தற்சமயம் எப்படி இருக்கின்றதோ அறியேன்.. ஆனால் அடுத்த வீடான ஆந்திரத்தில் மட்டும் மிகப் பெரிய வெற்றியாக ஆண்டாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர் மூவரும் கலந்த ஒரு ஜாதி இங்கே ஆந்திரத்தில் ஸ்ரீவைணவ சேவை செய்து வருகிறது. இந்த மூன்று ஜாதிகளும் கலந்ததால் அவர்கள் த்ரைவர்ணிகா என்றே அழைக்கப்படுகிறார்கள். எல்லோருமே நல்ல செல்வந்தர்களோ என்றுதான் நினைக்கத் தோன்றும் ஏனெனில் இந்தக் குழுமத்தார் நகைக்கடைகளை ஆந்திராவெங்கும் நிறுவி வணிகம் செய்து வருகின்றனர். இந்த த்ரைவர்ணிகர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் (ஆந்திர மாநிலத்தில்) அவர்களுக்கென தனிப்பட்ட விதத்தில் வழிபாட்டு மண்டபம் அமைத்துக் கொள்வர். அத்தனை மண்டபங்களும் ராமானுஜரின் பெயரில்தான் அழைக்கப்படும். இங்கு இவர்கள் வழிபடும் தெய்வங்கள் ராமானுஜர், நம்மாழ்வார், ஆண்டாள், மேலும் வழிபாட்டு மொழி தமிழ். அதாவது திவ்யப்பிரபந்தமும் ஆண்டாள் பாசுரங்கள் மட்டுமே. வேறு வகையில் இவர்களுக்கு தமிழ் மொழி சுத்தமாக வராது. தமிழில் சென்று சாதாரணமாக இவர்களிடம் பேசினாலும் புரியாது. ஆனால் ‘சிற்றஞ்சிறுகாலே’ என்று தமிழில் ஆரம்பித்தாலே போதும், உடனே ‘வந்துன்னை சேவித்து உன் பொத்தாமரை’ என்று மற்ற வரிகளைப் பாடத் தொடங்கி விடுகின்றனர். இவர்களுக்கு (ற்றா. ழ, போன்ற வார்த்தைகள் வராது)
இவர்களுக்கெல்லாம் பரமாச்சாரியராக விளங்கியவர் ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்யலு,

அவர் பரமபதம் சேர்ந்தபின்பு ஜீயர் பெருமக்களையே தங்கள் குலகுருவாக ஆக்கிக் கொண்டார்கள். ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலுவின் திருமகளான திருவேங்கலம்மா அவர்களும் தமிழில் அதுவும் வைணவத் தமிழ்ப் பாடல்களில் நல்ல பாண்டித்யம் உள்ளவர்தான். இவரைப் போலவே நூற்றுக்கணக்கான ஆச்சாரியர்கள் ஆந்திராவெங்கும் இந்த மார்கழி மாதத்தில் கோதைத்தமிழின் பெருமையைப் பேசச் தொடங்கி விடுவார்கள். இவர்கள் பேசும் மார்கழிக் கூட்டங்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் தொடங்கும். பொதுமக்கள் ஏராளமாக வந்து இவர்கள் தமிழ்ப் பாடல் பாடுவதையும் அதன் விளக்கங்களையும் சுவையாக கேட்பார்கள். இந்த ஆண்டாள் என்ன மாயம் செய்தாளோ இத்தனை அழகாக பாடியிருக்கிறாள் என்று ஆன்மீக உள்ளங்கள் ஆழ்ந்து வியக்கும் வகையில் இந்த ஆச்சாரியார்கள் விளக்கங்களை கதை போல சொல்வார்கள். கேட்டு வியக்க இரு செவிகள் என்ன, ஓராயிரம் செவி கூட போதாதோ என்று ஓரொரு சமயம் தோன்றும்.அவர்கள் தெலுங்கு விளக்கம் - உங்களுக்காக நம் அழகிய தமிழிலே:




அவள் காத்திருக்கிறாள்..தோட்டத்திலே.. அதுவும் குளக்கரைப் படித்துறையிலே - குளத்தில் மலர்ந்த அல்லி மலர்கள் விரிந்து அவள் கண்களோடு தன்னை ஒப்புநோக்கிப் பெருமை அடையும் அந்த இரவு நேரத்தில் அவள் காத்திருக்கிறாள்

எப்படியும் கண்ணன் வருவான்,- அவன் சொல்லிவிட்டான், இரவு ஆரம்பிக்கும்போது வந்துவிடுவேன் என்று..- அவன் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுபவன்தான்.. - இன்று வரை அப்படி காப்பாற்றிக் கொண்டிருப்பவன்தான்.. அவனை நம்பு மனமே.. பொறுமை வேண்டும்.. காதலுக்குப் பொறுமைதான் தோழன்.. ஆகவே சற்றுப் பொறுத்திரு.. இரவு வந்துவிட்டதே என்று ஏன் பரபரக்கிறாய்?.. அவன் வருவேன் என்று வாக்குக் கொடுக்கும்போது நீ நம்பித்தான் ஆகவேண்டும் மனமே.. பொறுத்திருக்கத்தான் வேண்டும்.. ஆனால் எத்தனை நேரம்தான் காத்திருப்பது.. என்ன பெரிய நேரம்.. அப்படி தாமதம் ஆனால் ஆகட்டுமே.. நேரம் கடந்து போனால் என்ன.. போகட்டுமே.. வருவேன் என்று சொன்னவன் வராமல் போய்விடுவானா..

வருவான்.. எனக்காக வருவான்.. வந்துதான் ஆக வேண்டும்.. என்னை ஏமாற்றமாட்டான் அந்த செந்தாமரைக் கண் கொண்ட என் கண்ணன்.. இந்த இரவு இப்படி வீணாகப் போகின்றதே என்று ஏன் மனமே கிடந்து அல்லாடுகிறாய்.. தவிக்காதே.. வந்துவிடுவான்.. காலை வருவதற்குள் வந்துவிடுவான்.. அட.. அதோ பார் .. பின்னால் அவன் காலடி ஓசை கேட்கிறதே.. என் கண்ணன் வந்துவிட்டான்.. என் மன்னன் தான் .. அவனே தான்.. அவனை அணு அணுவாய் ரசிப்பவளாயிற்றே.. அவன் காலடி ஓசையை கண்டுகொள்ளமுடியாதா.. கள்ளன்.. எத்தனை மெல்லமாக வருகிறான்.. வரட்டும்.. அவனே வந்து தன் கள்ள முகத்தைக் காண்பிக்கட்டுமே.. நான் ஒன்றும் அவனுக்காகவே காத்திருக்கவில்லை என்பதை எப்படி உணர்த்துவதாம்.. அவனாகவே தெரிந்து கொள்ளட்டுமே.. நாமாக அவனை ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்?... இரவெல்லாம் முடிந்து உதய காலத்தில் அல்லவா வந்துள்ளான்..

கண்ணன் வந்தான்.. மங்கை தனக்காக தன்னந்தனியே தலையைக் குனிந்து காலுக்கு முட்டுக்கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.. தான் வந்ததை அறியவில்லையோ.. மெல்ல அடியெடுத்து மங்கை பின்னே சத்தமில்லாமல் அமர்ந்து தன் கைகளை முன்னே நீட்டி அவள் கண்களை மூடினான்.

தன் கைகளால் பொய்க்கோபத்தோடு அவன் கைகளை விலக்கினாள். குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்த்தி தலைக்கு மேல் தெரிந்த தலைவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் என்னதான் மாயம் செய்ததோ.. அங்கே கோபம் அகல மங்கை மயங்கி வெட்கம் சேர தன் அகல விரிந்த கண்களை மெல்ல மூடினாள். அவனும் மதி மயங்கிப் போய் அந்த அழகு முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் அகல விரிந்தன. மங்கையின் அல்லிமலருக்கொத்த கண்கள் மெல்ல மூட, கண்ணனின் செந்தாமரைக் கண்கள் மிகப் பெரிதாகி அவளை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிவிட்டது.

"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்"

(ஆண்டாளின் 14ஆவது பாவைப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு திருவேங்கல அம்மையார் தெலுங்கினில் சொன்னது, செங்கழுநீர் - செந்தாமரை மலர் உதய காலத்தில் விரியும், ஆம்பல் மலர் இரவு நேரத்தில் விரிந்து காலையில் விரிவு சிறிது சிறிதாகக் குறையும்)

Wednesday, December 9, 2009

ஆ. உஷ்.. காரம்.. ரொம்ப ஜாஸ்தி..

ஆவக்காயையும் ஆந்திராவையும் யாராலும் பிரிக்கமுடியாது. மலரும் மணமும் போல என்று கூட சொல்லலாம். ஆவக்காய் ஊறுகாயும் கோங்குரா பச்சடியும் சுவையும், காரமும் கூடியதுதான். சுவையில் மயங்கி முதலில் அதை உண்ணும் தமிழர்கள் அதன் காரத்தில் பிறகு கண்ணீர் விடுவதை பலமுறை கண்டவன் நான். ஆனாலும் விடாப்பிடியாக அந்த ஊறுகாயை உண்டு சுவைத்தே சாப்பாடை முடிப்பார்கள். ‘படு டேஸ்ட் ஊறுகாய், ஆனால் காரம்தான் அதிகம்,’ என்று தங்களுக்கே உரிய பாணியில் ஒரு குறையையும் சொல்லி வைக்கும் நம் தமிழ் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.


நான் முதன் முதலில் விஜயவாடா நகரில் குடியேறிய சமயம், என் நலம் விரும்பிகள் இந்தக் காரவகையறாவைப் பற்றி எச்சரித்துத்தான் அனுப்பினார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக (அல்லது துரதிருஷ்டவசமாக) இந்த இந்த ஊறுகாயும் பச்சடியும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். ஏன் என்றும் எனக்கே தெரியவில்லைதான். அதுவும் ஆரம்பகாலங்களில் சாப்பாடு ஓட்டல்களில் பக்கத்திலே இருப்பவர்கள் மிகுந்த நிதானமாக முதலில் வெற்று அன்னத்தில் ஊறுகாய் விழுது கலந்து நெய்யுடன் சேர்த்து சாப்பிடும அவர்களைப் பார்க்கும்போதே கண்ணில் நீர் வர ஆரம்பிப்பது போல ஒரு உணர்ச்சி தோன்றும். ஆனால் இவை காலாவட்டத்தில் பழக்கமாகிவிட்டது.

தினமும் மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிசத் துண்டு இல்லாத சாப்பாடு என்பது முடியவே முடியாத செயல் போல நினைப்பர். குறைந்த பட்சம் ஒரே ஒரு துண்டு கறியாவது இருந்தால் போதும். சாப்பாடு கடகடவென இறங்கிவிடும். அதைப் போல ஒரு ஆவக்காய் ஊறுகாய் இருந்தால் முழுச் சாப்பாட்டையும் உண்ணமுடியும் என ஆந்திரமக்களில் பலர் எண்ணுவதுண்டு. அதுவும் உண்மைதான். இந்த ஆவக்காய் ஊறுகாய், இங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உணவுவகைகளுக்குமே தொட்டுக் கொள்ள உபயோகிப்பதும் இங்கு உண்டு. ஆவக்காய் இல்லாத வீடும் ஒரு வீடா என்று நினைக்கும் அளவுக்கு ஆந்திராவில் இந்த ஆவக்காய் மக்கள் மணதில், இல்லையில்லை, நாவில் ஊறியிருக்கிறது. அதிகமான காரம் அந்த மணம், ஊறின சுவையோடு கூடிய இந்த ஊறுகாய் எப்படி வழக்கத்தில் இங்கு வந்தது என்பதே ஒரு புதிர்தான். ஆவக்காய் என்றால் கடுகு எண்ணையில் ஊறின காய் என்று பொருள். மாங்காய், கடுகுப் பொடி, பச்சைக் காரம் மற்றும் தேவைக்கு அதிகமாகவே கடுகு எண்ணெய்.. அல்லது நல்லெண்ணெய், சில நாட்களில் சுவையான ஆவக்காய் தயாராகிவிடும்.
(http://food.sulekha.com/avakkai-pickle-id665-14234-recipe.htm)

பொதுவாக ஆந்திராவில் உணவிலிலேயே காரம் அதிகம் உண்டு. அதற்கேற்றாற்போல பூமியும் கந்தக பூமி. சூடு அதிகம். வெய்யிலும் சூடும் காரமும் எப்படி அதிகமோ மழையும் பனியும் சற்றுக் கூடுதல்தான். உணவில் காரச் சுவை அதிகம்தான் என்றாலும் விஜயவாடாவுக்கே உரித்தான பந்தர் லட்டும், காகிநாடா காஜா என்று சொல்லப்படும் இனிப்பும் கூட மிகவும் சுவையானதுதான். காகிநாடா காஜா என்ற பெயர் ஏன் வந்தது என்று பலரை விசாரித்து விட்டேன். ஆட்காட்டி விரல் அளவிலிருந்து அரை அடி வரை நீளமாக உள்ள இனிப்பு இது. அந்த இனிப்பை விரும்பி சாப்பிடுகிறார்களே தவிர யாருக்குமே சரியான வகையில் பெயர்க் காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘பொனுகோமதி கோட்டையா’ எனும் பிராம்மணர்தான் 1900 ஆம் ஆண்டு வாக்கில் இந்த இனிப்பு வகையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதாகவும், இவர் தெனாலியைச் சேர்ந்தவர் என்றும் பிறகு சிறிய அளவில் காகிநாடாவில் முதல் போட்டு இந்த வகை இனிப்பைப் பெரிய அளவில் வியாபாரம் செய்தார் என்றும் அந்தக் கடைக்காரர்கள் காகிநாடாவில் இன்றும் சொல்லிக் கொள்கிறார்கள். மறைந்த முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கு இந்த காகிநாடா காஜா என்றால் பிராணன் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். (அவர் பிராணன் போய் பல்லாண்டுகள் ஆகியும் காகிநாடா காஜாவின் ஆயுள் நன்றாகவே நீடிக்கிறது) எது எப்படியோ இந்த சர்க்கரைப் பாகு நீர் போல உள்ளே ஊற வைத்து செதுக்கப்பட்ட மைதா வகை இனிப்புகள் ரொம்பவுமே பிரபலம்தான்.

ஆந்திராவில் நிறைய நகரங்கள் எதிரும் புதிருமாக, பழைமையும் புதுமையாகக் காணக்கிடைக்கும். உதாரணமாக விஜயவாடா நகரத்தைப் பார்த்தோமானால் சில விஷயங்கள் தெரியும். (இதைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை கூட எழுதியுள்ளேன்)
விஜயவாடா என்றல்ல, மாநிலத்தின் பல நகரங்களில் இப்படி ஒரு காட்சியைக் காணலாம். ஒரு உதாரணத்துக்குத்தான் விஜயவாடா.

இப்படி எதிரும் புதிருமாகக் காணப்படும் இந்த ஆந்திர நகரங்களில் ஆத்திகமும் நாத்திகமும் கூட சரிசமமான அளவில் உண்டு என்பதைப் போல ஒரு தோற்றம் வரும். சபரிமலையில் வரும் பக்தர்களின் கணக்கு ஒன்று எடுத்தால் மொத்த பக்தர்களில் பாதிப்பேர் ஆந்திராவிலிருந்துதான் ஒவ்வொரு வருஷமும் வருவார்கள். தமிழ்நாட்டு சாமியாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டு சாமியாராக இருந்தாலும், அவர்களுக்கு சிஷ்யகோடிகள் அதிக அளவில் தேவை என்றால், இதோ யாம் உள்ளோம் என்ற அளவில் ஆந்திரத்து பக்தர்கள் முன்னிற்பர். ஏன், விஜயவாடாவில் இன்றைய கனகதுர்கா ஆலயத்துக்கு சபரிமலை விரதம் போல விரதம் இருந்து செவ்வாடை பூண்டு பவானி என்று பெயர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம் வருகிறது. (தற்சமயம் ஐந்து நாட்கள் பவானி விரத முடிப்பு திருவிழாவுக்கு பத்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று ஆலய அதிகாரி டி.வி பேட்டி கொடுத்தார்) ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் கோட்டையாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் ஆந்திராவில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே போல, எவ்வித மத, கடவுள் நம்பிக்கையுமில்லாத நக்சலைட்டுகள் என சொல்லப்படும் மாவோயிஸ்டுகளுக்கும் கூட ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு உண்டு. ராயலசீமா நல்லமலைப் பகுதியும் (ராஜசேகர ரெட்டி விபத்துக்குள்ளான இடம்), தெலுங்கானா பத்ராசலம் அருகே உள்ள காடுகள் மற்றும் விசாகப்பட்டினம் மேற்கே உள்ள வனாந்திரங்கள் எல்லாமே மறைமுகமாக நக்ஸலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பதாக இன்றும் சொல்வர். ஆனால் இவர்களால் பொதுமக்களுக்கு பிரச்னை அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.

ஆவக்காய் ஆந்திரா காரம்தான். ஆனால் உள்ளே புகுந்தால் எத்தனை விஷயங்கள் தெரியவருகிறது.. கண்களில் அப்படியே கண்ணீர் வந்தாலும் அது கூட ஒரு சுகானுபத்தில் வருவதுதானே..