Saturday, November 27, 2010

விசாகேஸ்வரா.. மயில்வேலவனே .. முருகா.. சுப்ரமணியா

முருகன் தமிழ்க்கடவுள் என்பதை சங்ககாலம் முதலே நாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டு வருகிறோம். செந்திலாண்டவனே குமரிக்கண்டத்தின் கண்கண்ட தெய்வம் என சில ஆய்வாளர்களும் சொல்லி வருகின்றனர். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் அது முருகன் என்ற முதன்மையிலிருந்துதான் ஆரம்பமானது என்பதாக பெருமையோடு சொல்லும் முருகபக்தர்கள் அநேகர். தமிழன் எங்கெல்லாம் காடு மலை க்டந்தும் கடல்கடந்தும் சென்றாலும் முருகனை தன் நெஞ்சத்துள் மட்டுமல்லாமல் வெளியேயும் அவனுக்கு கோயில் அமைத்து காலம் காலமாக வழிபடுவது புதிய செய்தியுமல்ல. முருகனே முழுமுதற்கடவுள், அவனே தாயாய், தந்தையாய், மாமனாய், வேறு பல ரூப விகற்பதாய், கூறறியதாய் மாறி மாறி உலகெங்கும் ஆட்சி செய்து வருவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் விலாவாரியாக நமக்கு விவரிக்கும். முருகன் என்ற ஒரு சொல்லில் உலகில் அசையும் அசையா அத்தனையுமே அடக்கம் என்பதாக திருப்புகழ் பாடும் பாசுரங்களை எத்தனையோ சித்தர்கள் தமிழில் எழுதி வைத்திருக்கின்றனர். முருகா என்று ஓதுவார்முன் வல்வினையும் வருத்தும் கிரகமும் எதிர்தான் நிற்குமோ என்று நாம் நிதமும் முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறோம். உலகத்தின் ஓங்காரமந்திரமாக ஓம் எனும் பிரவணத்தைக் கொடுத்து தந்தைக்கே குருவாய் உருமாறி அந்த ஓங்காரமந்திரத்துள் உலகத்தையே அருளாட்சி செய்த முருகனை போற்றாத புராணங்களே இல்லை எனச் சொல்லிவிடலாம். காளிதாசனை மிகவும் கவர்ந்தவள் காளி என்றால் அந்தக் காளியின் புத்திரன் முருகனோ அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டதால் அல்லவோ குமாரசம்பவம் எனும் அருமையான காவியம் நம்க்குக் கிடைத்தது.

வடநாடுகளில் குமாரசுவாமி எனவும் ஸ்கந்தன் எனவும் ஷண்முகம் எனவும், கார்த்திகேயன் எனவும் மனதார பக்தர்களால் ஓதப்படும் முருகனை நாம் முருகா என்று ஓதும்போது கிடைக்கும் இன்பமே தனிதான். முருகநாமம் நம் தமிழருக்கு என்றுமே ஆனந்தம் தரக்கூடியதுதான். நாம் முருகா என்று சொல்லிவிட்டு மனதில் அவனை ஒரு கணம் நினைத்து அதையும் உள்ளுக்குள் உணரும் தருணம் ஏற்படும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை ஏது,,

அப்படிப்பட்ட முருகனை இந்த ஆந்திரதேசமும் நிச்சயமாக கவர்ந்திருக்கவேண்டும்தான். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார். விஜயவாடா இந்திரகிலாத்திரி மலையில்தான் தனிக்கோயில் கொண்ட முருகனை அடியேன் முதன் முதலாக சந்தித்தேன்.. (1978) என் மகிழ்ச்சியில் அவனைத் தமிழ்க்கடலாக பார்த்ததால் அந்தக் கோயில் மலைப்பாறையில் ‘அருள்மிகு வள்ளி தெய்வயானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம்’ என வெள்ளைப் பெயிண்டால் தமிழில் எழுதவைத்தது. அதனால் எழுந்த சில பரபரப்புகள் அதன் பிறகு நடந்த கோலத்தையும், தகராறுகளையும் ஏற்கனவே ஒரு பதிவில் (வம்சதாராவில்) எழுதி இருக்கிறேன். முருகன் அவன் திருவுருவைப் பார்க்கும்போதே உள்ளம் சிலிர்சிலிர்க்கும். அவன் அப்படித்தான். அதுவும் உரிமையோடு அவனை சொந்தம் கொண்டாடுவோரை அவன் எப்போதும் கைவிடுவதே இல்லை என்பதை அங்கு நேரிலேயே அனுபவித்தேன்.

ஆனால் முருகனின் ஆந்திரதேசத்து வரலாறு மிக மிகப் பழையானது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட பஞ்சாராமம் (வேங்கியில் ஐந்து இடங்களில் சிவனுக்காக எடுக்கப்பட்ட கற்கோயில்) திருக்கோயில்களில் முருகனுக்கு சிறப்பிடம் உண்டு. சாமல்கோட் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிவஸ்தலம் குமாரராமம் திருக்கோயில் என்றே இன்னமும் அழைக்கப்படுவது மிகவும் விசேஷன். ஏனைய நான்கு திருக்கோயில்களில் குமரனுக்கு தனி சந்நிதி உண்டு. இவை கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கழித்து முதல் கலிங்கப் போரில் கலந்துகொண்ட விக்கிரம சோழன் 1100 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கீழைக்கோடியில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோயிலில் ஒரு சந்நிதி புதிதாக சேர்க்கவைத்து அங்கு முருகனை பிரதிஷ்டை செய்வித்ததாக ஒட்டக்கூத்தர் பாடல் மூலம் தெரியவரும். அந்த முருகன் கையில் ஒரு கொம்புடன் ஔவைக்கு தரிசனம் தந்தவிதமான கோலத்துடன் (சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தமிழ் மூதாட்டியை ஒரு கலக்கு கலக்கிய அந்த சுட்டிப் பையன் போலவே) இருக்கிறான். மேகங்கள் மேலே மூடிக்கொண்டிருக்கும் ஒரு அழகான பகல் பொழுதில் சின்ன சின்ன மழைத்துளிகள் மேலே பட பட அதை அப்படியே தலைமேல ஆனந்தமாக வாங்கிகொண்டே அந்த அழகனை அப்படியே மனதுக்குள்ளே படம் பிடித்துக்கொண்டதை மறக்கமுடியாதுதான்.

இரண்டாம் கலிங்கப்போர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததை நம் தீந்தமிழ் கலிங்கத்துப் பரணி ஒன்றே பறை சாட்டினாலும் அந்தப் படையை வெற்றிகரமாக முடித்து விட்டு குலோத்துங்க அரசன் கட்டளையின் பேரில் இன்றைய விசாகப்பட்டினத்துப் பிராந்தியத்தே கடலருகே முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித்ததாகவும், விசாகை நட்சிரத்துக்கு உரியவனான முருகனுக்கு விசாகேஸ்வரன் என நாமமிட்டதாகவும் எத்தனையோ செய்திகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

இங்குள்ள கடலோரப்பகுதிகள் சற்று விசித்திரமானவை. கடல் அரிப்புகள் ஒருகாலத்தில் மிக அதிகமான அளவில் நிலத்தை அழித்து ஊருக்குள் நீர் புகுந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை இங்குள்ள நில அமைப்பைக் கொண்டே எத்தனையோ அறிஞர்கள் கட்டுரை வடித்துள்ளனர். காலவட்டத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அப்போதைய கடலோரக் கோயில், முருகனுக்காக தமிழரசனால் எழுப்பப்பட்ட கற்கோயில் கடல் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரு நரசய்யா போன்ற கடல்சார்அறிஞர்கள் கூட கூறி வருகிறார்கள். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இந்தக் கடல்சார் கழகத்தில் ஒரு பேராசிரியர் கங்காதர் என்று பெயர், அவருக்கு நிச்சயமான நம்பிக்கை, இந்த விசாகேஸ்வரர் கோயில் கடல் கொண்ட கோயில்தான், எப்படியும் மீட்டு விடுவோம் என்று அவ்வப்போது சபைகளில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவருபவர். திரு கங்காதரரின் முயற்சியால் இந்திய கடற்படையில் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு ஒரு சில வாரங்கள் கூட இந்தத் தேடல் முயற்சி செய்யப்பட்டது.

கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டர் சுரேஷ்குமார் மிகச் சிறந்த ஆழ்கடல் வீரர். தமிழர். அவர் இந்தக் குழுவில் மிக ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். அதுவும் நம் தமிழ்க்கடவுள் முருகன் அவன் கோயிலுக்காக தேடுகிறோம் என்பதில் அவருக்கு படு உற்சாகமாம். சமீபத்தில் சுரேஷ் குமாரை எதேச்சையாகப் பார்த்துப் பேசியபோதுதான் அவரும் கலந்துகொண்டது எனக்குத் தெரியவந்தது. ஆனால் ’இலக்கு’ இல்லாமல் தேடியதால் முயற்சி வீணானது சார்.. என்றார்.

ஆனாலும் விசாகப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயரைக் கொண்ட இந்த நகரில் நிச்சயமாக விசாகேஸ்வரனின் கோயில் இருந்ததுதான் காரணப்பெயர் என்கின்றனர் நகரத்துப் பெரிசுகள்.
என்றாலும் ஒருநாள் விசாகேஸ்வரன் நிச்சயம் நம் மீது கருணை காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான் என்று நம்புபவர்களும் நிறைய உண்டு.

அந்த விசாகேஸ்வரன் வராவிட்டால் என்ன, இல்லை அவன் இங்கு நகரத்துக்கு வரும் வரை என்னைப் பாருங்கள் என்று இன்னொரு முருகன் இங்கே நகர மக்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறான். சங்கரமடம் அமைந்த வளாகத்தில் தனியே தனக்கென ஒரு கோயில் அமைத்துக் கொண்டு மயில் வாகனனாகக் காட்சி தருபவன். ம்யிலோடும் வேலும் சேரும்போது அவனுடைய காட்சி கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிமையாக இருப்பதால் அவனுக்கு ‘மயில்வேலவன்’ எனப் பெயர் சூட்டி அந்தப் பெயரிலேயே அவனைப் பூசை செய்து வருகிறேன். மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். செவ்வாய் நாயகனான மயில்வேலவனுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் நடக்கும் அபிஷேகங்கள் முன்னூறைத் தாண்டிவிடுகின்றன. அப்படியும் எனக்கும் அவனுக்கும் உள்ள உறவே தனி.. ’உன்னையன்றி எனக்கு யார் முருகா’ என்று ’சோப்’ போட்டுக் கொண்டே போவதால் ஒருவேளை அவன் மயங்கி விட்டதைப் போல காட்சி தந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள உள்ளார்ந்த இணைப்பை வர்ணிக்க முடியாதுதான். அவனுக்கு நிகர் அவன் ஒருவனேதான் அல்லவோ.. நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,, அதுவும் அருணையார் சொல்லித் தந்ததுதான். எப்போதும் எந்தச் சமயத்திலும் அவன் நாமம எம் நாவில் உணர்வோடு இருக்க அவன் அருள் புரிய வேண்டும்.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

Thursday, November 4, 2010

November One

நவம்பர் ஒன்று என்பது இது நாள் வரை ஆந்திர தேசத்தில் மிகப் பிரபலமாக இருந்ததுதான். ஆனால் எப்போது தெலுங்கானா கோஷம் வலுப்பெற்றதோ, அந்த நவம்பர் ஒன்று இன்று வலுவிழந்துகொண்டே வருகிறது.

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் இந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் அதிகாரபூர்வமாக செயல்பட ஆரம்பித்தன. தமிழ்நாடு ‘மெட்ராஸ் மாநிலம்’ எனும் பெயரில் மிகப் பெரிய மாநிலமாக உண்மையான திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொஞ்சம் ஒரியா என ஆறு மொழிகளும் பேசப்படும் திராவிட நிலமாக இருந்து வந்ததைப் பொறுக்காமல், அவரவர்களுக்கு, அவரவர் மொழிகளுக்கு அவரவர் நிலம் தேவை என்று பிரிக்கப்பட்ட நாள்.

1953/56 வரை நம் மாநிலம் உண்மையான திராவிட தேசமாக இருந்து வந்தது எவ்வளவு தூரம் நம் இளைய தலைமுறைக்குத் தெரியும் என்பது கண்டிபிடிப்பது சற்று கஷ்டம்தான். ஒரு கால கட்டத்தில் தெலுங்கும் தமிழும் கோலோச்சி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டு காதல் பாட்டு பாடிக் கொண்டு இன்பமாய் பவனி வந்த நகரம்தான் சென்னை என்பது கூட தெரியுமோ தெரியாதோ.

ஆனாலும் யார் கண் பட்டதோ.. அல்லது தெலுங்கருக்கே தாங்கள் படும் இன்பம் கசந்ததோ என்னவோ, மொழி வாரியாகப் பிரித்துத் தா என்று கோஷம் போட்டு, ஒரு சிலர் உயிர்த்தியாகம் (நம் ஊரில் எல்லாம் உயிர்களின் விலை ரொம்ப சீப்) செய்து, ராஜாஜிக்கு அந்தச் சமயத்தில் எதிராக இருந்த ஸ்ரீமான் நேரு தான் நேராக மூதறிஞருடன் மோதாமல் காமராஜர் மூலமாக மோதி ஒப்புதல் அளித்து, எப்படியோ ஒரு கமிட்டி போட்டு, அந்தக் கமிட்டி மூலம மொழி வாரி மாநிலங்கள் என்று வாங்கியும் விட்டார்கள். ஐம்பத்திநான்கு ஆண்டுகள் ஓடியே விட்டன (கூடவே என் வயதோடு).

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையோ, விவசாய உற்பத்தி வளர்ச்சியோ இந்த மொழிவாரி மாநிலங்கள் மெட்ராஸ் மாநிலத்திலிருந்து பிரிந்ததனால் எந்த சிறு அளவும் பாதிக்கவில்லை என்பது மிகப் பெரிய உண்மைதான். ஆனால் ஆந்திராவின் நிலைமை அப்படி அல்ல. என்று பிரிந்தார்களோ, அன்றிலிருந்து அவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான்.

ஆந்திரா நீர்வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட பகுதி, இயற்கை அழகு கொஞ்சும் பிரதேசங்கள் இங்கு அதிகம். பொதுவாகவே மக்களில் பலர் அன்புக்கு அடிமை கொள்பவர்கள். இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிப் போய் வாழ்பவர்கள்.

ஆந்திராவை மூன்று பகுதிகாளாக எப்போதுமே பார்த்துப் பழகிவிட்டவர்கள் ஆந்திரர்கள். ராயலசீமா என தென் மேற்கு ஆந்திராவையும், கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்த்து, கடற்கரை ஆந்திரா எனவும் வடக்குப் பகுதியை தெலுங்கானா என்றும் எப்போதும் பேசி வருபவர்கள், இந்தப் பேச்சு நாளடைவில் இன்னொரு மிகப் பெரிய பிரிவினைக்கு வழி வகுக்கும் எனத் தெரியாமல் காலத்தைக் கழித்து விட்டவர்கள்.

இன்னும் இரண்டு மாதங்கள்தாம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலுங்கானாவுக்காக நிச்சயம் சாதகமாகத்தான் பரிந்துரைக்கும்.. எப்போது சிதம்பரனார் சென்ற ஆண்டுக் கடைசியில் தெலுங்கானா வரும், என்று முதலில் அறிவித்து வாபஸ் வாங்கினாரோ, அப்போதே மத்திய அரசு தெலுங்கானாவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிந்த ரகசியம்தான்.

ஆந்திரர்கள் அதாவது கடற்கரை மற்றும் ராயலசீமா மக்கள் மட்டும் எல்லோரும் ஒன்றாய்தான் இருக்கவேண்டும் என்று வெளியே பேசினாலும் பிரிவு உறுதி என்பதில் மட்டும் நிச்சயமாகத்தான் இருக்கிறார்கள். வெளியே அப்படி பிரிவு பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது, தெலுங்கானா பிரிந்துபோனால் பிரியட்டும், ஆனால் ஹைதராபாத் நிச்சயமாக எங்களுக்கும் தேவை என்பதிலும் கவனமாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

மொழிவாரி மாநிலம் என்ற கோஷத்தில் பெறப்பட்ட தேசம் இரண்டாகப் போவது ஏறத்தாழ நிச்சயமாக்கப்பட்டதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஹைதராபாத் விஷயம் கொஞ்சம் சாதகமாக அமையப் பேசித் தீர்த்துக் கொண்டால் இன்னமும் நலம் என்றே இரு தரப்பினரும் நினைக்கிறார்கள். ஆக ஒரே மொழி பேசும் மாநிலம் இரண்டாகப் போகிறது. இது ஒருவிதத்தில் வேதனைக்குரியதுதான். பிரிவு என்ற சொல்லே வேதனைதான்.

பிரிவு என மனதால் முடிவெடுக்கும்போது, வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த வருடம் நவம்பர் ஒன்றாம் நாளைக் கொண்டாடவே கூடாது என்று தெலுங்கானாக் காரர்கள் நிர்ப்பந்திக்க, ஏனைய ஆந்திரர்கள் இதைப் பற்றி எதிர்த்துப் பேசாமல் இருக்க, அரசாங்கம் மட்டும் ஏனோ தானோ என்று அந்த ஒன்றாம் நாளைக் கொண்டாடியது. ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நவம்பர் ஒன்று என்றால் இந்த மாநிலமே கலகலக்கும். அரசாங்க விழாவில் ஆளும் தலைவர்கள் ஆடம்பரமாக வார்த்தைகளை அள்ளி வீச ஒரு வாய்ப்பாகக் கருதுவர். இப்போது இவையெல்லாம் மிஸ்ஸிங்.

உத்தமர் காந்தியின் உத்தம சீடர் பொட்டி ஸ்ரீராமுலு. இவர் சொந்த வாழ்க்கை பெரும் சோகக்கதை. குழந்தை பிறந்தவுடனே மனைவி இறந்துவிட்டாள். பிறந்த குழந்தையும் கொஞ்சநாள் வாழ்வை முடித்துக் கொண்டு தாயோடு வானுலகில் சேர்ந்துகொண்டது. ஆனாலும் மனம் தளராதவர் தன் வாழ்க்கையை தேசத்துக்காகவே அர்ப்பணித்து காந்தியுடன் தன்னை சேர்த்துக் கொண்டவர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். ஒருமுறை காந்தியுடன் 29 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் இவர். காந்தியே இவரைப் போல பத்து பேர் சேர்ந்தால் சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடும் என்று புகழ்ந்ததாக ‘டைம்’ பத்திரிகை சொல்கிறது. அப்படிப்பட்டவர் காந்தி இறந்தபின் ஆந்திரம் தனியாகச் செல்லவேண்டும் எனக் கேட்டது ஏன் என்பது புரியாத புதிர். கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத் திருநாட்டில் இப்படி மொழிவாரி மாநிலங்களாக நாட்டைக் கூறு போட அவர் மறுபடியும் உண்ணாவிரதம் இருந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இன்றுவரை இல்லைதான். அதுவும் பிடிவாதமாக பிரிந்து போகும் ஆந்திரத்துக்கு சென்னையை தலைநகராக்க வேண்டும் எனக் கேட்டவிதமும் அதற்காக சென்னையில் அவர் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னுயிரைத் துறந்ததும் சற்று வேதனை தரக்கூடியதுதான்.

பொட்டி ஸ்ரீராமுலு இப்படி தன் உயிரைத் தியாகம் செய்து பெற்ற ஆந்திரத்தில் தற்சமயம் அந்த மகாமனிதருக்கே அவ்வளவு மரியாதைத் தரப்படுவதுமில்லை என்பதும் பெரிய சோகம்தான். ஹைதராபாதில் அவர் சிலைக்கு மாலையிட வேண்டுமென்றால் நிச்சயம் போலிஸ் பெடாலியனோடுதான் போகவேண்டும். மொழிவாரி மாநிலமாகப் பிரிந்திருக்க வேண்டாமோ என்றுதான் சரித்திரம் தெரிந்த பலரும் பேசுகின்றனர்.

இப்போதெல்லாம் இங்கு இருக்கும் பெரிசுகள் கொஞ்சம் வேதாந்தமாக மாறிவிட்டனர். இவர்கள் அந்தக் காலத்திலேயே மெட்ராஸ் மாநிலத்திலேயே எவ்வளவு அந்தஸ்த்தோடு இருந்தனர் என்பதை பட்டியல் போட்டுப் பேச ஆரம்பித்து விட்டனர். மெட்ராஸ் பிரிந்ததால் நஷ்டம் நமக்குத்தான் என்பதையும் அடித்துக் கூற ஆரம்பித்து விட்டனர். தெலுங்கும் தமிழும் கலந்து இருந்தால்தான் என்ன, குடி முழுகியா போய்விடும்.. இப்போதும் சென்னனயிலும் கோவையிலும் தெலுங்குக் காரர்கள் நன்றாக வாழவில்லையா.. அவர்களைப் போல நாமும் இல்லாமல் போய்விட்டோமே.. என்ன பெரிய மொழிவாரி மாநிலம்.. ஹைதராபாதில் இப்போதும் உருதுவுக்குதான் முதல் மரியாதை.. தெலுங்கும் ஹிந்தியும் தெலுங்கானா வட மாவட்டங்களில் கலந்து ஆட்சி செய்யவில்லையா.. எல்லோரும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்..

எது எப்படி ஆனாலும் மறுபடியும் தமிழ்நாட்டோடு சேரமுடியாது என்ற நிதர்சமும் இவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் சில வயது கடந்த பெரிசுகள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே ‘அந்தக் காலத்திலே..’ என்று ஆரம்பிப்பார்களே, அதைப் போலத்தான் இதுவும் ஒரு அங்கலாய்ப்பாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்..

தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால் 60 வருடங்களுக்குப் பிறகுதான் பிரிவினை என்ற ஒன்று எவ்வளவு தவறு என்பதே பலருக்கு உறைக்கிறது. இது பிற்காலத்தவருக்குப் பாடமாக அமையுமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த வருடம் நவம்பர் ஒன்று என்பதை எப்படி எந்தவிதமாக கொண்டாடப்படும்.. என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்..