Wednesday, September 1, 2010

ஆந்திர பக்தி உலகின் ஒளிவிளக்கு




திவாகர்,
நான விசாகையில் இருந்த போது எனது வீட்டிலேயே எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினேன். நல்ல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். எனது நெருங்கிய இலக்கிய நண்பர் வாகாடி பாண்டுரங்கராவ், பராகோ, கோசனா, முதலியோர் வந்திருந்தனர். வாகாடி சாஹித்ய அகாதமிக்குப் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழிபெயர்த்தவர். என்னுடைய கதைகளைக் கூடத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர்.
இக்கூட்டம் நடந்தது 80களின் ஆரம்பத்தில். அப்போது சினிமாவில் தடம் வைத்திருந்த மிஸ்ரோவும் இருந்தார். (நினைத்தாலே இனிக்கும் படம்) நான் கூட்டம் ஆரம்பிக்கு முன்னர் டி. ஆர். மஹாலிங்கம் பாடிய பாரதி பாடல்களை எல். பி. ரெகார்ட் போட்டுக் காட்டியபோது அக்குரலை எல்லோரும் ரசித்தனர். பின்னர் கூட்டத்தில் கடவுள் பற்றிய சர்ச்சை எழுந்தது. தெலுங்கு எழுத்தாளர்களில் பலர் நாஸ்திகர்கள் என்பது அப்போது தான் தெரிந்தது. ரா வி (ரா. விசுவநாத சாஸ்திரி)யும் (தமிழில் அற்பஜீவி - வாசகர் வட்டம்) அவ்வழி நினைப்பவர்! அதிகமானவர்கள் பிராமணர்கள்! ஆச்சர்யமாக இருந்தது! தெளிவான சிந்தனை!
அவர்கள் சொன்ன அன்றைய கருத்துகளும் கிட்டத்தட்ட உங்கள் நண்பர் பிரம்மாஜி போன்றது தான்!

நரசய்யா
--------------------------------------------------------

இன்றைய தெலுங்கு எழுத்தாளர்களில் பாதிக்கும் மேலோர் நாத்திக சிந்தனை உடையவர்கள் என்ற கண்ணோட்டமாக நான் ‘அடுத்தவீட்டில்’ எழுதிய பதிவுக்கு ஆதரவு தந்து அங்கே பதித்த நரசய்யா அவர்களின் கடிதம் இது. திருமதி டாக்டர் பிரேமா நந்தகுமார் இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதும்போது நான் தெலுங்கு இலக்கிய உலகை இன்னமும் சரியாக அலசவேண்டும் என்றும் ஸ்ரீ ஸுப்ரஸன்னாச்சார்யா போன்றோர் தம் தெலுங்கு இலக்கியத்துக்காக சிறந்த சேவை செய்வதையும் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறு சமீபத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. ஏறத்தாழ நாத்திகவாதமே அல்லாத பக்தி இலக்கிய எழுத்தாளர்களின் சங்கமமான ஒரு தெலுங்கு இலக்கிய கூட்டம். அதுவும் மிகவும் பிரபலமான மகா பெரிசுகள், இவர்கள் தெலுங்குக்கு செய்த சேவை சாதாரணமானதல்ல. இவர்களில் சித்ரகவி ஆத்ரேயா நமது ஆப்தர். அவரது சுயசரிதை புத்தகம் ஒன்று தெலுங்கில் வெளியிடப்படுவதால், அதைப் பெறுவதற்குதான் அடியேனை அழைத்திருந்தார்கள்.

சித்ரகவி ஆத்ரேயா தெலுங்கு பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுகிறவர். மார்கழி மாதத்தில் திருப்பாவை உபன்யாஸமும் செய்வார். விசாகையில் பல்லாண்டு காலம் இருந்த இவர் தற்போது வசிப்பது பெங்களூரில். வயது 77. சிறந்த ஆன்மீகவாதி என்று சொல்லவே தேவையில்லை. கடந்த ஒரு வருடமாக ‘ஆந்திரஜோதி’ தினப்பத்திரிகையில் பிரபலமாக வந்து கொண்டிருக்கிற ‘தர்ம சந்தேக’க் கேள்விகளுக்கு பதில் எழுதுபவர்.

இவருடைய குருநாதரான ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்ய சுவாமி விசாகப்பட்டினத்தில் இருந்துகொண்டு ஆந்திரமக்களுக்கு தெய்வானுக்ரஹத்தை திருப்பாவை மூலமும், ராமாயணம் மூலமும் பெற்றுத் தந்து புகழ்பெற்ற மகான். இன்று ஆந்திராவெங்கும் தமிழ்த் திருப்பாவை மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பான முறையில் பேசப்பட்டு, பாடப்பட்டு புகழ் பெறுகின்றது. அப்படி உபன்யாஸம் செய்து, தமிழிலே பாட்டு பாடி தெலுங்கில் பொருளோடு கதை சொல்லி ஊரெல்லாம பரப்புவது இந்த மகானுடைய சிஷ்யப் பெருமக்களே.. தமிழ்த் தாயின் செல்ல மகளான கோதை பிராட்டியார் ஸ்ரீபாஷ்யம் சுவாமி மூலமாக ஆந்திரமக்களுக்கு அனுக்ரஹம் செய்வதாகவே கூடச் சொல்லலாம்.

ஸ்ரீபாஷ்யம் சுவாமி நமக்கு கொஞ்சம் நெருக்கமாக தெரியவருவதற்குக் காரணம் நம் ஆப்த நண்பர் பெரியவர் திரு சம்பத் அவர்கள்தான். 1994 ஆம் ஆண்டில் நம் தமிழ்ச்சங்கம் மூலமாக ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டன்று புகழ்பெற்ற தெலுங்கர் ஒருவரை கௌரவப்படுத்துவது என்று முடிவெடுக்கையில் சம்பத் அவர்கள் ஸ்ரீபாஷ்யம் பெயரைத்தான் உடனடியாக அறிவித்தார்கள். அந்தப் பெருமையும் நம் சங்கத்துக்குக் கிடைத்தது. ஆனால் அடியேனுக்கு அவர்களின் நெருங்கிய ஆசிகள் கிடைத்தது அவர் இந்த பூமியில் வாழ்ந்த கடைசி கால கட்டத்தில்தான் எனச் சொல்லலாம். ஆனாலும் அவர் எங்களிடம் பேசிய கருத்துகள் எனக்கு ஏனோ உடையவர் ராமாநுஜர் வரலாற்றைத்தான் நினைவுபடுத்தின. சாந்தமான முகம், அருளை வீசும் கண்கள், எப்போதும் வாயில் ராமநாமம் என்று அவரைப் பார்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பரவசமாகவே சொல்வார்கள்.

’திருமலைத் திருடன்’ புத்தகம் எழுதும்போதுதான் சுவாமி அப்பளாசார்யுலு அவர்களின் நெருங்கிய பரிச்சயம் கிடைத்தது. அந்தப் புதினத்தில் ராமானுஜர் பற்றி வர்ணிக்கையில் தயங்காமல் என் மனக்கண் முன் தோன்றியவர் ஸ்ரீமான அப்பளாச்சார்யலு சுவாமிதான் என்பேன். என் கதையில் வரும் ராமானுஜர் அதிகம் பேசுவதில்லை. நடப்பவை அனைத்தையும் நாராயணனுக்கே என விட்டுவிடும் மகான். அப்படியே என் மனக்கண் பதித்ததை புதினத்திலும் கொடுத்துள்ளேன்.

ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமாயண உபன்யாசம் என்பது சாதாரண விஷயமாக ஒதுக்கவே முடியாதுதான். ஏனெனில் தெலுங்கர்கள் மிகச் சிறந்த பக்திமான்கள். ஸ்ரீராமனின் பாதம் பட்டு புண்ணியபூமியாக மாறிவிட்டதாகத்தான் தங்கள் மாநிலத்தை அவர்கள் நினைக்கிறார்கள். தெலுங்குப் பொது மக்களிடையே ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமகாவியப் பேச்சு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதை ஆந்திரர்கள் அனைவருமே ஒப்புக் கொள்வர். ஸ்ரீராமநவமிக்கு முதல் பத்துநாட்களும் ஆந்திரமக்களுக்கு சிறப்புதினங்கள்தான். அவர்தம் ராமாயண சொற்பொழிவு செவிக்கும், மனதுக்கும் இனிய மருந்தாக தித்திக்கும். ஆந்திரத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று ராமநாமத்தை இவர் வாயால் சொல்ல, அத்தனை மக்களும் பக்திப் பரவசத்தில் மூழ்குவதும் இங்கு பல ஆண்டுகளாக வாடிக்கைதான். அவருக்கு மிகப் பெரிய அளவில் அவருடைய ‘ஸகர்ஸ சந்த்ர தர்ஸன’ விழாவை விசாகப்பட்டினத்தில் நடத்தியபோது நகரமே அங்கு திரண்டு வந்ததைப் பார்த்து அதிசயித்தவன். அதே போல திருப்பாவையின் முப்பது பாடல்களுக்கும் சுமார் 700 பக்க அளவில் உரைகள் எழுதியவர், இந்தப் புத்தகம் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் என எல்லா ஜீயர் சுவாமிகளாலும் வேதம் எனப் போற்றப்பட்டுள்ளதால் இன்றளவும் பல தெலுங்கர் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம்.

நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என ஒரு சிறு அவை அடியேனாலும் திரு சம்பத் அவர்களாலும் 2003 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. திரு சித்ரகவி ஆத்ரேயாவும் அதில் ஒரு அங்கத்தினர். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆழ்வார் பிரபந்தங்களையும் அதற்கான விளக்கங்களையும் பெறுவது என்றுதான் இந்த அவை ஆரம்பிக்கப்பட்டது, இந்த அவையை ஸ்ரீபாஷ்யம் சுவாமி அவர்கள் தன் கடைக் காலத்தில் (அவரால் நடமாடமுடியாத நிலை, வயது அப்போது 82), தன் இல்லத்தில், உடையவர் ராமாநுஜர் உதித்த திருநாளில், தான் பிரத்தியேகமாக பூசை செய்யும் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை சுவாமி ஆசீர்வாதம் செய்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது. நம்மாழ்வாரின் தமிழ்ப் பிரபந்தங்களை வாய் நிறையச் சொல்லி விளக்கங்களையும் தெலுங்குமொழியில் அன்று அவரே விவரித்தார். விவரிக்க இயலாத பெருமையும் திருப்தியும் எங்களுக்குக் கிடைத்தது என்றுதான் சொல்லமுடியும்.

இந்த இனிய நிகழ்ச்சிதான் அவருடைய வாழ்நாளின் இறுதி நிகழ்ச்சி கூட.

ராமாநுஜ சரித்திரத்தில், உடையவர் தன் இறுதி உரையாக சீடர்களுக்குச் சொல்வது மிக முக்கியமான கட்டம் ஆகும். வாழ்க்கையில் ஒரு நல்ல வைணவரைக் கண்டாலே போதும், ஒரு மனிதன் பிறந்த பலன் அவனுக்குக் கிடைத்துவிடும் என்பார். எப்போதெல்லாம் ஸ்ரீபாஷ்யம் அவர்கள் என் நினைவில் வருகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு உடையவரின் அந்தக் கடைசி உரைக்கு விளக்கம் கிடைத்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றைக்கு ஆந்திர வைணவ உலகை ஆண்டுகொண்டிருக்கும் ஜீயர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை. அப்படிப்பட்ட மகான் தன் வாழ்க்கையிலும் தனக்கு ஆன்மீக குருவாக வழிகாட்டியதாக ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா புகழாரம் சூட்டியுள்ளார் இந்தப் புத்தகத்தில்.

இந்த விழாவுக்கு சென்றதால் ஸ்ரீபாஷ்யம் எனும் மாபெரும் மகானையும் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டார் ஸ்ரீமான் சிதரகவி ஆத்ரேயா அவர்கள். சிஷ்யரைப் பற்றிதான் எழுதவேண்டுமென நினைத்தது வாஸ்தவம். ஏனோ அவர்தம்குரு அவராகவே வந்துவிட்டார். அப்படி நினைக்கவைத்த சித்ரகவி ஆத்ரேயாவுக்கு நம் நன்றிகளை தாராளமாக தெரிவிப்போமாக.



( புகைப்படத்தில் அமர்ந்திருப்பது ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா, மேலேயுள்ள முதல் புகைப்படத்தில் ஆத்ரேயா அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிடப்படுகின்றது
இடமிருந்து வலம் - ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் மகனான ஸ்ரீனிவாஸாச்சாரியார், சஹ்ருதய சாஹிதி பிரபாகர், புத்தகம் வெளியிடும் பெரியவர் செல்லா சிவசங்கரம், சிதரகவி ஆத்ரேயா, வேதுல சுப்பிரமணிய சாஸ்திரி, எல்.ஆர்.சுவாமி)


.