Tuesday, September 4, 2012

ஐந்தாண்டு கால திட்டம்

அடுத்த வீட்டில் ஒரு அடுத்த நாட்டுக்கார டாக்டர் சந்துரு வந்து போனதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.

டாக்டர் சந்துருவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். தமிழார்வம் மிக்க இந்த டாக்டர் மலேயாவைச் சேர்ந்தவர். தன் இல்லத்தில் மிக அதிக அளவில் தமிழ்ப் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளவர். ஒவ்வொருமுறை இந்தியப் பயணத்தின் முடிவில் இவருடன் ஒரு மூட்டைக் கட்டு தமிழ்ப்புத்தகங்களும் கூடச் செல்லும். இருதய சிகிச்சை நிபுணர் என்ற வகையில் மலேயா மன்னருக்கும், அந்த நாட்டு பிரதமருக்கும் பல்லாண்டுகளாக தனிமருத்துவராக இருந்தவர், தற்போது கேடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் போதகர். சென்னை எழுத்தாள நண்பர் அனுஷா வெங்கடேஷ் இவரை எனக்கு அறிமுகப்படுத்தும்போதே வம்சதாரா பிரியர் என்று அறிமுகப்படுத்திதான் எழுதினார். அதன் பிறகு அவரும் நானும் சில மெயில்கள் பறிமாறிக்கொண்டதோடு சரி. என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தனிமடல் எழுதுவார்.

டாக்டர் சந்துருவிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் தன் ஒவ்வொரு தமிழகப் பயணத்தின் போதும், சென்னையில் தான் விரும்பும் நபர்களிடம் நேரில் சென்று அவர்களோடு உரையாடி அவர்களது அனுபவங்களைத் தெரிந்துகொள்வது. இப்படி அவர் பல எழுத்தாளர்களை சந்தித்துள்ளார். கர்நாடக சங்கீத ரசிகர் என்பதால் இசைமேதைகளை சந்திப்பதும் இவரது லிஸ்டில் அடங்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து இந்த முறை சென்னைப் பயணத்தின்போது விசாகப்பட்டினம் வந்து அடியேனை சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது  ஆஹா.. வாருங்கள்.. விசாகப்பட்டினம் விருந்தினர்களுக்கு சொர்க்கம் போலத்தான் (இங்கேயே இருப்பவர்களுக்கு நரகமா எனக் கேட்கவேண்டாம் இருந்து பார்த்தால் தெரியும்) என்று அழைப்பு விடுத்தேன்.

இவர் இங்கு வந்ததுமே சொல்லிவிட்டார். ‘சார்.. எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும், உங்களோடு பேசவேண்டும் உங்கள் புத்தகத்தைப் பற்றி விவாதிக்கவேண்டும், வம்சதாரா பிறந்து வளர்ந்த கதையை உங்கள் வாயால் கேட்கவேண்டும் அவ்வளவுதான். வேறு ஒன்றும் விசேஷமில்லை’. எத்தனைதான் உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிக எளிய முறையில் இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது.


வேடிக்கை என்னவென்றால் நான் வம்சதாராவைப் பற்றிப் பேசியதை விட ஒரு இருதய சிகிச்சை நிபுணரின் மருத்துவ அறிவுரைகளை அவர் வாயால் பெற வைத்ததுதான் விசேஷம். முப்பதாயிரம் நோயாளிகளை (எந்த நோய் இருந்தாலும் நோயாளிதானே) பார்த்த கை, அதுவே நம்மிடம் தேடி வந்துள்ளது என்பதால் சும்மா விட்டுவிட முடியுமா.. தமிழ்ச்சங்கத்தில் அன்று கூடியிருந்தோரிடம் ஒரு சில நிமிஷங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசவைத்தேன். என்னுடன் இருந்த நான்கு நாட்களும் ஒரு மனிதன் தன் உடல்நலத்தை எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தை ஒரு மாணவனுக்கு ஆசிரியர் சொல்வது போல பகிர்ந்து கொண்டார். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக அழகாக எடுத்துரைத்தார். உங்களுக்காக அவரால் சொல்லப்பட்ட சில விஷயங்களை கீழே தருகிறேன்.

ஐந்தாண்டு கால திட்டம் என்பதைப் போல ஒவ்வொரு மனிதனும் அடுத்த ஐந்தாண்டு காலம் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த ஐந்து ஆண்டு காலத்துக்கு எப்படியெல்லாம் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதில் திட்டமிட்டு அதன்படி செய்லபடவேண்டும். அந்த ஐந்தாண்டு கடந்த பிறகு அடுத்த ஐந்தாண்டு திட்டம்..

புற்றுநோய் என்பது திடீரென வருவது அல்ல.. உடம்பில் உள்ள நல்ல செல்களின் பலம் குறைகின்றபோது தீய செல்கள் பலம் பெறுகின்றன. இது முடிவில் மரணத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆகையினால் நல்ல செல்கள் எப்போதும் பலமாக வைத்திருக்கும் வழியைப் பேண வேண்டும்.

வெளிநாடுகளில் காண்பது போல இந்தியர்கள் யாரும் ஆரோக்கியத்துக்குத் தனிமுக்கியத்துவம் தருவதில்லை. பெரும்பாலானோர் சுகாதாரம் பற்றிய தெளிவும், உடற்பயிற்சியைக் கடைபிடிப்பது பற்றியும் இன்னமும் பழைமையான ஞானத்திலேயே உள்ளனர். அரசாங்கமும் இதைப் பற்றி அதிகமாக கவலைப் படுவதில்லை என்பது வருத்தமானது. மலேசிய டாலர் ஒன்று செலுத்தினால் பெரிய டாக்டர் கன்ஸல்டன்சியிலிருந்து பரிசோதனைகள் முதற்கொண்டு மலேசியாவில் அனைத்தையும் பெறலாம். இந்தியாவில் இப்படி இல்லை.

டாக்டர் கைராசி என்பது எல்லாம் பழையகாலத்துப் போக்குதான். இப்போது எந்த நோயானாலும் அதை தீர்க்கமாக ஆராயவும் என்ன மருந்து கொடுத்தால் அது போகும் என்பதற்கான பொது மருந்து வகைகளும் உலகமெங்கும் வந்துள்ளன. ஆகையினால் எந்த டாக்டருமே ஒரே அளவில்தான், ஒரே மருந்தின் நம்பிக்கையில்தான் கொடுக்கிறார்கள். இங்கே கைராசி எங்கே செல்லும்?

அரிசியைக் குறைத்து உணவை உட்கொள்ளுதல் எப்போதுமே நல்லது. இன்றைய நிலையில் அரிசி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

மூன்று வேளையாக இங்கு நாளும் உணவு உண்கிறோம். மூன்று வேளைக்குத் தேவையான உணவை ஆறு வேளைக்கு மாற்றிக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது.

கொய்யாப்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம் இவைகள் மிக மிக மலிவானதும், எளிதில் எங்கேயும் கிடைக்ககூடியதும் ஆகும். ஆனால் இந்த மூன்று பழங்களில் உள்ள ஊட்டச்சத்தும், வைடமின்களும் வேறு எந்தப் பழங்களிலுமே இல்லை. அதே சமயம் இப்பழங்களை உண்ணும்போது, காயாக இல்லாமலும், பழமாக ஆகாமலும் இருக்கும் நிலையில் எல்லோருமே உண்பது மிக நல்லது. பழுத்த பழமாக உண்பது நீரிழிவு நோயுள்ளோருக்கு (வாழை) நல்லதல்ல. பழங்களை முக்கிய உணவாக தினப்படி வழக்கமாக்கிக் கொள்ளவும்.

இன்றைய சூழ்நிலையில் நோய், (முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆஸ்த்மா) நம்மைத் தாக்குவதைத் தடுக்க முடியாது. ஆனால் இவைகளை நமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நம்மால் நிச்சயமாக முடியும்.

நான் அவர் சொல்லியவைகளில் கொஞ்சம்தான் இங்கே சொல்லியிருக்கிறேன். ஆனால் இவை மிகவும் பொதுவான நிலையில் நாம் தெளிவாகத் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு இவையெல்லாம் தெரியும்தான். ஆனாலும் கடைபிடிப்பதில்லை எனும்போது நம் டாக்டர் சந்துரு போன்றவர்கள் சொல்வதால் அதன் முக்கியத்துவம் அதிகமாகிக் கடைபிடிக்கத் தொடங்குவோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சரியானதுதான் என்றாலும் இன்று உலகம் உள்ள சூழ்நிலையில், உலக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நோய்கள் வந்தாலும் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே புத்திசாலித்தனமாகும்.

இன்றைய விஞ்ஞானம் ஏகப்பட்ட ஆரோக்கிய வசதிகளைக் கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஒன்றே நாம் செய்யக்கூடியதாகும் என்கிறார் டாக்டர் சந்துரு. நோய்கள் என்பதெல்லாம் விதி விட்ட வழி, பூர்வஜென்ம பாவங்கள் என நினைப்பதை விட்டு அதற்குப் பரிகாரமாகக் கிடைத்த  இறைத்தன்மைதான் இன்றைய விஞ்ஞானம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள்வேண்டும் என்று அழகாகச் சொன்னார்.

இந்தப் பதிவை முடிக்குமுன் திருமதி சந்துருவைப் பற்றி எழுதாமல் போனால் பெண்பாவம் என்னை சும்மா விடாது. திருமதி சித்ரா சந்துரு என்னுடைய ‘திருமலைத் திருடன்நாவலை தன் கையோடு இங்கே கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல் அதை எடுத்து வைத்துக் கொண்டு, ’நாவலாசிரியர் கண்ணெதிரேயே அவர் நாவலைப் படிக்கிறேன்’ என்ற செய்தியை எஸ் எம் எஸ் மூலமாக தன்னுடைய சிநேகிதிகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ‘சார்.. இன்னும் 150 பக்கம்தான்.. இதோ 100 பக்கம்தான்என்று ஸ்கோர் சொல்லிக் கொண்டிருந்த அந்த அப்பாவித்தனம் எனக்குப் பிடித்திருந்தது. அதே போல அவருக்கும் இங்கே சிம்ஹாத்ரி சிம்ஹவதித் தாயாரும், கனகமகாலக்ஷ்மியும் மிகவும் பிடித்து விட்டது என்பதையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
படங்கள்: 1. விசாகப்பட்டினம் கைலாசகிரியில் சிவ-பார்வதி சமேதர்
         2. வைசாக்-பீமிலி கடலோரப் பாதை
          3. நானும் டாக்டர் ச்ந்துருவும்.

4 comments:

  1. //திருமதி சித்ரா சந்துரு என்னுடைய ‘திருமலைத் திருடன்’ நாவலை தன் கையோடு இங்கே கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல் அதை எடுத்து வைத்துக் கொண்டு, ’நாவலாசிரியர் கண்ணெதிரேயே அவர் நாவலைப் படிக்கிறேன்’ என்ற செய்தியை எஸ் எம் எஸ் மூலமாக தன்னுடைய சிநேகிதிகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்./
    :-)))))

    ReplyDelete
  2. அன்பின் திவாகர்ஜி,

    நல்ல நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பதிவு. மிகவும் நெகிழ்வாக உள்ளது. வாழ்க்கையில் நல்ல நட்பை சம்பாதிப்பது பெரிய வரம். வாழ்த்துக்கள். டாக்டர் கொடுத்த மருத்துவ ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை புகைப்படம் தெளிவாக இல்லையே.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  3. Thank you sir,
    very useful advise.
    Good to know.
    Best Regards,
    Srinivasan.

    ReplyDelete
  4. good news. as u rightly,
    v know the above . but don't follow. shall v foloow from now onwards????.

    ReplyDelete