Friday, September 28, 2012

தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, மனிதம்

2. தெலுங்கு இலக்கிய உலகின் பாரதி - குருஜாடா அப்பாராவ்


1892 இல் குருஜாடா ‘கன்யாசுல்கம்’ எனும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இந்த நாடகம் ஏறத்தாழ 8 மணிநேர அளவுக்கான நாடகம் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் விஜயநகர ராஜாவின் முன்னிலையில்
அரங்கேற்றப்பட்டது. நாடகத்தைப் பற்றி அறிந்தோமானால், நம்மால் அக்கால
கட்டத்தில் நமது சமூகங்கள் எப்படியிருந்தன என்பது நன்றாகத் தெரியும்.
சமூகக் கட்டமைப்பு, சாத்திரங்களைக் காட்டி பயமுறுத்துதல், நிலச்சுவான்
தார்களின் காமக் கிழத்திகளும், காம விளையாட்டுகளும், தீண்டாமையும்
எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தன என்பதும்
தெரியும். அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குதல், ஒருவர் மீதான பகைமையை
தம் சுயநலத்துக்காகத் தூண்டுதல், உழைப்பாளிகளின் வயிற்றெரிச்சலை
சம்பாதித்துக் கொள்வது, தீண்டாமை போன்ற சமூகத்தின் அத்தனை
கெடுதல்களையும் குருஜாடா தைரியமாக எழுதி தவறுகளை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்தார்.

குருஜாடாவுக்கு பெண் விடுதலை, விதவா விவாகம், பெண்கள் கல்வி கற்று
முன்னேறுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதே போல தாசிகளின் வாழ்க்கையும் மேம்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் இருந்தது. இவை இவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கவேண்டும். இந்த வேட்கை அவர் எழுதிய கன்யாசுல்கம் நாடகத்தில் மட்டுமல்ல, பல சிறுகதைகளிலும், கவிதைகளிலும் தென்பட்டது.

கன்யாசுல்கம் நாடகம் சமூக அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு கோர்வையான உரையாடல் தொகுப்பு என்றுதான் சொல்லவேண்டும். அக்ரஹாரத்தில் அன்றைய காலத்திலிருந்த அவலங்களை வெளிச்சமாக்கிய கதைத் தொகுப்புதான் இது.

அக்னிஹோத்ரவதானிலு எனும் பிராம்மணர் குடும்பத்தை மையமாக வைத்து
சித்தரித்தாலும், ஊரில் உள்ள பிற சமுதாயத் தவறுகளையும், சாஸ்திரங்களைக் காட்டி தன் சொந்தங்களைத் தாமே அழித்துக் கொள்வதையும் விவரமாகக் காட்டும் நாடகம்.

அக்னிஹோத்ரம் தன் இளைய பெண் சுப்பம்மாவை காசு பெற்றுக்கொண்டு ஒரு கிழவருக்குக் கலியாணம் செய்து கொடுக்க முன்வருகிறார். அந்த சிறு பெண் இன்னமும் பூப்படையாத சிறு பெண். ஏற்கனவே இப்படித்தான் தன் முதல் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்து, மருமகனையும் சாவுக்குப் பலிகொடுத்து விதவையாகத் தன் வீட்டிலேயே வைத்துப் போஷித்து வருபவர். இந்த சிறு பெண்ணை இரண்டாம் தாரமாக மணக்க முன்வரும் கிழவர் வீட்டிலும் இதே போல ஒரு சூழ்நிலைதான். அந்தக் கிழவருக்கு ஒரு வளர்ப்பு மகனாக கிரியீசன் என்பவன் இளைஞன், நாலும் தெரிந்தவன், இவன் ஒரு சமயத்தில் மிக நல்லவனாகவும் சில சமயங்களில் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.

கிரியீசனுக்கும் ஊரில் உள்ள தாசியான மதுரவாணிக்கும் ’சிநேகிதம்’ உண்டு.
அதனால் சில முறைகள் ஊரில் இகழ்ச்சிகளுக்கும் ஆளாகிறான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மதுரவாணி தர்மநியாயம் தெரிந்தவள். அதர்மச் செயலுக்குத் துணை போகமாட்டாள். அப்படி யாராவது போனாலும் அவர்களை தைரியமாகக் கண்டிப்பவள் கூட. மதுரவாணிதான் முதன் முதலாக பூப்ப்டையாத பெண்ணை கிரியீசன் வளர்ப்புத்தந்தை காசு கொடுத்து மணம் செய்வதை எதிர்த்தவள். இந்த எதிர்ப்பில் கிரியீசனும் கலந்து கொள்கிறான். இது சிறிது சிறிதாக இரண்டு வீட்டிலும் இந்த எதிர்ப்பு பரவிப் பெரிதாகி ஊரையே ஒரு கலக்கு கலக்குகிறது.

மாப்பிள்ளைப் பேச்சைக் கேட்டு நீதி செய்கிறேன் பேர்வழி என அந்த அழகான
மதுரவாணியையும் கிரியீசனையும் பிரிக்க முன்வருகிறார் அந்த ஊர் கர்ணம்
ராமப்ப பந்துலு. அதற்கு விலையாக அந்தப் பந்துலு வேறு வழியில்லாமல்
மதுரவாணி வீட்டிலேயே இருக்க நேரிடுவது தனிக்க்கதை (ஏற்கனவே சொன்னேனே, மதுரவாணி தர்மநியாயம் தெரிந்த தாசி என்று!).

நாடகம் முழுவதும் சமூகத்தின் அவலங்களை நையாண்டியாகப் பேசப்படுவதால்நாடகத்தில் எங்குமே அலுப்புத் தட்டாது. குருஜாடாவுக்கு பாமரர்களின் மனநிலையையும், நடுத்தரவர்க்கத்தாரில் மனநிலையும் நன்றாகத் தெரிந்துவைத்துக் கொண்டு அவர்கள் மனதில் தம் கருத்துகள் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் உரையாடலை எழுதியுள்ளார். அதனாலேயே பல ஆண்டுகள் இந்த நாடகம் ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கேறியது, 1909 ஆம் ஆண்டில் குருஜாட உடல்நிலை காரணமாக நீண்டநாள் ஓய்வாக உதகமண்டலத்தில் தங்கியிருந்த காலத்தில் இந்த கன்யாசுல்கம் நாடகத்தை மேலும் பொலிவு பெறச் செய்தார். நகைச்சுவையை மேலும் மெருகுபடுத்தப்பட்டதால் அவரது நாடகம்
நூறாண்டைக் கடந்தும் இன்னமும் பாமர மக்களிடையே பேசப்படுகிறது.

கன்யாசுல்கம் 1955 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது.
தாசி மதுரவாணியாக சாவித்திரியும், கிரியீசமாக என்.டி.ராமாரவும்
நடித்தனர் (above still). இந்தப் படம் வெற்றிப் படமாக இருந்ததால் இந்தக் கதையும்
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைக்க வழி வகுத்தது.

Pictures courtesy Google Images




குருஜாடா சிறுகதைகள் பற்றிய விவரம் பார்ப்போம்.



1 comment:

  1. நல்லவேளையாக குருஜாடா அவர்கள் கட்சியோ இயக்கமோ ஆரம்பிக்க வில்லை. இலக்கியத்தோடு நிறுத்திக்கொண்டார். இல்லையேல் அங்கும் ஓர் திராவிடர் கழகம் போல் ஒன்று உருவாயிருக்குமா?

    இவரைப்போல் ஆந்திர உலகின் மனிதர்கள் பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete