Thursday, January 7, 2010

ஹைதராபாதும் தெலுங்கானாவும்



ஹைதராபாதும் தெலுங்கானாவும்

(தெலுங்கானாவில் அரசியல் நிலவரம் சம்பந்தப்பட்டவரை நிறைய விஷயங்களை சுருக்கமாகவே தர முயல்கிறேன். குறிப்பாக கம்யூனிச இயக்க வரலாறு மிக விரிவாக வளர்ச்சி பெற்ற இடமாக தெலுங்கானாவில் சுதந்திரப் போராட்ட சமயத்தில் இருந்ததும், சுதந்திரம் அடைந்த பின்னர், காங்கிரஸ் மிகப் பெரிய பலத்துடன் இந்தியாவை ஆண்டுவந்த சமயத்திலும், கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ள செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் தக்கவைத்துக் கொண்டிருப்பதைக் கூட ஏற்கனவே சுருக்கமாகத் தந்துள்ளேன். இதன் பின்னனி மிக மிக நீண்ட வரலாறு கொண்டது.. ஆனால் இதை இங்கே விவாதிக்கப்போவதில்லை).

ஹைதராபாத் நிலவரத்துக்கு வருவோம். கோல்கொண்டா நவாப் தன் அன்பு மனைவி பாக்கியாவுக்காக பரிசளித்த பாக்கியநகரம் என்று ஹைதராபாத்தைக் கட்டியதாக சொல்வர். இப்போதும் கூட இந்த சுந்தரமொழி நாட்டு தொலைக்காட்சிகள் அடிக்கடி பாக்கியநகரம் என்றே ஹைதராபாதைப் பற்றி பேசிக்கொண்டே ஞாபகமூட்டி வருகின்றன. 458 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஹைதராபாத் கடந்த சில நூற்றாண்டுகளாகவே புகழ் பெற்ற நகரம், அதுவும் இரட்டை நகரம் என்ற பெயரில் சிகந்திராபாத் நகரும் சேர்ந்து கொண்டதால் இந்த நகருக்கு சாதாரணமாகவே ஒரு விசேஷம் வருவது கூட இயற்கைதான் நன்றாக வளர்ச்சி அடைந்த நகரம் - எந்த அளவில் என்றால், நவநாகரீகத்தில் உச்சகட்டமாகவும், ஏழ்மையில் பரம தரித்திரமாகவும் இருவேறு கோணங்களில் புகழ் பெற்ற நகரமாகவும் விளங்கியது. ஒருபக்கம் ஆடம்பரமான ஹைதராபாத் இருந்தால் அதே ஹைதராபாதில்தான் உலகத்தின் மொத்த சந்துகளும், ஒருவேளை வயிற்றுக்குக் கூட உணவில்லாத ஏழைகளும் அதிக அளவில் உள்ளனர். புகழ்பெற்ற போலிஸ் நடவடிக்கை 1948 இல் அப்போதைய நிஜாம் மீது இந்திய சர்க்கார் நடத்தியபோது ஏற்பட்ட கலவரத்தில் இறந்துபோன ஏழைக் குடும்பங்கள் (மதபேதமில்லாமல்) ஏராளம். இடம் பெயர்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில். (எழுத்தாளர் அசோகமித்திரன் கூட இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதியிருப்பதாக நினைவு) ஏறத்தாழ 1983 வரை, பழைய ஹைதராபாதில் ஒரு விசித்திரமான விதத்தில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடிக்கும். காரணம் எது, எதற்காக என்று யாருக்குமே தெரியாது. திடீரென ஊரடங்கு உத்தரவு என்பார்கள்.. யாரோ வருவார்கள்.. யாரையோ கத்தியால் குத்துவார்கள்.. ஏன் எதற்கு என்று புரியாமல் கேட்க நாதியில்லாமல் ஊர் அடங்கி காணப்படும். இதெல்லாம் ஓரிரு வாரங்கள்தாம்.. பிறகு நிலைமை வழக்கப்படி சர்வசாதாரணமாகவே இருக்கும். சில மாதங்கள், சமயத்தில் சில வருஷங்கள் கழித்தும் திடீரென பழைய கொடுமை ஆரம்பித்து முடியும்.. இதற்கு காரணம் கூட உள்ளூர் அரசியலும் அந்தந்தக் கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும்தான்.

ஆனால் இந்த நிலை முழுவதுமாக மாற்றப்பட்டது ஒரு அரசியல்வாதியால் அல்ல.. ஒரு சினிமா நடிகரால்.. ஆம்.. மதிப்புக்குரிய தெலுங்கு நடிகர் என். டி. ராமாராவ் ஆட்சிக்குப் பொறுப்பேற்ற நாள் முதல் (1983) இந்த திடீர்க் கலவரங்கள் காணாமல் போனது. மறுபடியும் ஒரு முறை 1990 இல் எழுந்து (இது அப்போது மீண்டும் பெரிதாக எழுந்த தலைவரான முதலமைச்சர் சென்னாரெட்டியை பதவியில் இருந்து விரட்டப் பயன்படுத்தப்பட்டது)) உடனே அடங்கிப் போனாலும் அந்த சமயத்தில் என். டி. ஆர் ஆட்சியில் இல்லை என்பதும் உண்மை. 1985 இலிருந்து தலைநகரத்தின் வளர்ச்சியில் மள மளவென மாற்றங்கள் காணப்பட்டன. தெலுங்கு தேசம், ஆந்திரர்களின் தன்மானம், அவர்கள்தம் உரிமை என்ற பெயரில் என். டி. ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தலைநகரான ஹைதராபாதை மிக வேகமாக பல்வேறு திட்டப்பணிகள் செய்து வளர்த்தார்கள் என்பதில் மாற்றுக்கட்சியினருக்குக் கூட அபிப்பிராய பேதம் கிடையாது. முக்கியமாக தொழில் முன்னேற்றம், பிறகு படிப்படியாக சினிமா படப்பிடிப்புத் தொழில் முன்னேற்றமும், அடுத்த கட்டமாக புறநகர்ப் பகுதியை விரிவுபடுத்தி மென்பொருள்நகரமாகவும் விரிவுபடுத்தி, மற்ற எந்த நகரத்துக்கும் கிடைக்காத வளர்ச்சியை இந்த மாநகருக்குக் கிடைக்கவைத்தார்கள். (அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு அங்கு ஓட்டு விழவில்லை என்பது வேறு விஷயம்). தற்சமயக் கணக்குப்படி சுமார் 30 லட்சம் ஆந்திரர்கள் அதாவது தெலுங்கானா தவிர ஏனைய மாவட்டத்துக்காரர்கள் ஒரு ஹைதராபாத் நகரத்தில் (மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதாவது மகா ஹைதராபாத்) மட்டும் வசித்தும், தொழில் அல்லது வேலை புரிந்தும் வருகிறார்கள். இவர்களின் உழைப்பு பல்வேறு வகையிலும் அந்த நகரத்துக்குக் கிடைத்துக் கொண்டும், அவர்களால் நகரமும், அந்த நகரத்தால் அவர்களும் ஒன்றுக்கொன்று பிரியமுடியாத அளவில் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம்.

ஹைதராபாத் பற்றி எழுதும்போது முக்கியமான விஷயம் சொல்லவேண்டும். இங்குள்ள ஹைதராபாத் வாசிகளுக்கு ஆரம்பத்தில் தெலுங்கு தெரியாது.. எல்லோருமே உருது அல்லது இந்திதான் பேசுவார்கள். இது 1990 வரை இருந்தது. இப்போது அப்படி அல்ல.. 90 சதவீதம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள். உபயம்: குடியேறிய ஆந்திரமக்களும், தொல்லைப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்களும்தான். (நம் அஷாருத்தீனுக்கும் சானியா மிர்சாவுக்கும் இப்போதும் தெலுங்கு நஹி நஹிதான்)

சரி, மறுபடியும் தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். நம் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஒரு குணம். அவர்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இது ஆதிநாளில் இருந்து வந்த ஒரு விளையாட்டுதான். ஆனால் அவர்கள் தங்கள் டெல்லித் தலைவருக்குக் கட்டுப்பட்டவர் போல வெளியே காட்டிக் கொண்டு அதன்படியும் நடந்துவருவார்கள்.பிரும்மானந்தரெட்டி, சஞ்சீவரெட்டி போன்ற பெரிய ரெட்டிகள் ஆண்டுவந்த காலத்தில் சற்று முடங்கிக் கிடந்த தெலுங்கானா போராட்டம் மறுபடியும் 1969 இல் சென்னாரெட்டியால் புதியரத்தம் செலுத்தப்பட்டு, புத்துயிர் ஊட்டி மறுபடியும் மிகப் பெரிதாக மாணவர்கள் மூலம் எழுப்பப்பட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்த சென்னா ரெட்டியார், தெலுங்கான பிரஜா சமிதி என்ற பெயரில் இப்போதுள்ள டி.ஆர்.எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி) போல ஒரு கட்சி ஆரம்பித்தார். மாணவர்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்தார்கள். பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965 இல் மாணவர்கள் தலைமையும், அண்ணாதுரையின் தலைமையும் எப்படி ஒன்று சேர்ந்து நடத்தி வெற்றி கண்டார்களோ, அதே விதத்தில் தெலுங்கானா மாணவர்களும் சென்னாரெட்டியும் ஒன்று சேர்ந்து வெற்றி காண விழைந்தார்கள். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புக்காக மாணவர் பலி அல்லது ‘தியாகம்’ போலவே, தெலுங்கானா போராட்டத்திலும் சுமார் 360 மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் கண்ட வெற்றி இங்கு தெலுங்கானாவில் கிடைக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி ஒரு புதிய முயற்சி மூலமாக தலைவரான சென்னாரெட்டியையே காங்கிரஸுக்கு தங்கள் உறுப்பினர் சகிதம் வந்துவிடுமாறும், அவருக்கே முதலமைச்சர் பதவி என்றும் வலைவிரித்தார். வலையில் சரியாக மாட்டிய அந்த தெலுங்கானா கட்சி உடைந்து சென்னாரெட்டி முதல்வராகி, தான் முதல்வரானதால் தெலுங்கானாவே பயன்பட்டு விட்டது என்றும் நாடெங்கும் அறிவித்தார். இதனால் இன்னொரு குழப்பம், 1972 இல் புதுமாதிரியாக மற்ற பகுதிகளில் இருக்கும் ஆந்திரர்கள் தங்களுக்கு 'தெலுங்கானா' நீங்கலாக தனி ஆந்திரமாநிலம் வேண்டுமென ‘ஜெய் ஆந்திரா’ என்ற இயக்கம் ஒன்றினை புதிதாக அங்குள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஆரம்பித்தார்கள். இது முதலில் மிகப் பெரிய இயக்கம் போல ஆரம்பித்தாலும் நாளடைவில் ஸ்ருதி மங்கித் தேய்ந்து போய்விட்டது. (இந்த இயக்கம் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்தவர்தான் இப்போதை வெங்கையாநாயுடு)

சரி, இப்போது உள்ள இயக்கம் என்ன.. ஏன் வந்தது.. இத்தனை இடைவெளி விட்டு வரவேண்டிய அவசியம் என்ன.. சரி, இப்போதாவது தெலுங்கானா கிடைத்துவிடுமா..

அதையும் ஒரு கை பார்த்து விடுவோமே..


(Map thanks to Mapsofindia.com)

3 comments:

  1. எழுத்தாளர் அசோகமித்திரன் கூட இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதியிருப்பதாக நினைவு!..

    கதை அல்ல, நாவல், பதினெட்டாவது அட்சக்கோடு. ஒரு விதத்தில் அவரது சுயசரிதை, அந்தப் போராட்டங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டிருக்கிறார். :D

    ReplyDelete
  2. வெங்கையா நாயுடு பத்திய செய்தி புதுசு! இப்போத் தான் தெரியும்! நன்றி

    ReplyDelete
  3. நன்றி கீதாம்மா! 'பதினெட்டாவது...'
    அது கேள்விஞானம்தான்.. படிக்கவில்லையாதலால் கதை என்று நினைவு என எழுதியுள்ளேன்.. சந்தர்ப்பம் கிட்டும்போது படிக்கிறேன்..

    திவாகர்

    ReplyDelete