Monday, February 25, 2019

அடுத்த வீட்டில் வம்சதாரா

அடுத்த வீட்டில் வம்சதாரா


உண்மையாக சொல்லப்போனால் என்னுடைய வம்சதாரா புதினமே அடுத்த வீட்டுச் சொந்தம்தான். வட ஆந்திரப் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் மொழிப் புதினம் தமிழில் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு சொந்த வீட்டுப் பெண்ணாக சமீபத்தில் தெலுங்கு மொழி மூலம் தன் பிறந்த இடமான விசாகப்பட்டினத்தில் வம்சதாரா அறிமுகம் செய்யப்பட்டாள். எழுத்தாளர் பெரியவர் சுஜாதா இன்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆனந்தவிகடனில் 2004 ஆம் ஆண்டு வம்சதாரா பற்றி எழுதும்போது திவாகர் இதை தெலுங்கிலும் மொழிபெயர்க்கவேண்டும் என்று முத்தாய்ப்பு வைத்தவராயிற்றே!!

என் மனைவி சஷிகலா ’வம்சதாரா’ மொழிப் பெயர்ப்பினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னமேயே சாதாரணமாக முடித்திருந்தாலும் திருத்தங்கள் திருத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. காரணம் தெலுங்கு வாசகர்கள் ஒரு சரித்திர புதினத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் ஏராளமாக இருந்தது. இதுநாள் வரை தெலுங்கு இலக்கிய உலகில் தெலுங்கு மண்ணில் நடந்த சரித்திரக் கதை என்ற ஒன்று புதின வடிவில் வெளிவராமல் இருந்தது. ஒரு சில தெலுங்கு புலமையாளர்களிடம் வம்சதாரா கதையினை அப்படியே கொடுத்துப் படிக்க செய்தோம். படித்தார்களா என்பதே தெரியவில்லை. மிகக் கனமான அந்த ஃபைலை நீண்டநாட்கள் தன் வசம் வைத்திருந்து திருப்பிக் கொடுக்கும்போது ‘ஆஹா.. நன்றாக இருக்கிறது’ என்கிற சான்றிதழாகப் ஏதோ நல்ல வார்த்தை பேசிக் கொடுத்தார்கள். பதிப்பாளர்கள் கிடைப்பார்களா எனத் தெரியாமல் இருந்தது.  இது என்னுடைய அவநம்பிக்கையை இன்னும் பெரிதாக்கியது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில்தான் விசாகப்பட்டினம் ’ஸஹ்ருதய ஸாஹிதி’ என்கிற இலக்கிய ஆர்வலர்கள் குழுமம் என்னை என் தமிழ் புத்தகங்கள் குறித்து பேச அழைத்திருந்தார்கள். அந்த இடத்தில்தால் திருவாளர் டாக்டர் வேணு அவர்களைச் சந்தித்தேன். திரு வேணு மிக உன்னத நாடக் எழுத்தாளர்,  கவிஞர். சிறுகதை எழுத்தாளர். ஆந்திர பல்கலைக்கழக கல்லூரியை நிர்வகித்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர். அவரிடம் எதேச்சையாக வம்சதாரா குறித்துப் பேசும்போது அந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்படாத நிலையில் அப்படியே இருக்கிறது என்றும் சொன்னோம். ‘நான் ஒரு முறை படிக்கத் தரமுடியுமா’ எனக் கேட்டார். மிகப் பெரிய ஃபைல் வடிவத்தில் இருந்த வம்சதாராவை என் வீட்டுக்கே வந்து எடுத்துச் சென்றார். டில்லி செல்வதாகவும் இருபது நாட்களில் படித்துவிட்டு தன் கருத்தைச் சொல்வதாகவும் எடுத்துச் செல்லும்போது சாதாரணமாகத்தான் நினைத்தோம். சரிதான் என்று தலையசைத்து  வழியனுப்பிவைத்தோம் கூட.

ஆனால் திரும்பி வந்தவர் சும்மா விடவில்லை. இந்தக் கதையை உடனடியாக ஸஹ்ருதய ஸாஹிதி அமைப்பின் அடுத்த கூட்டத்தில் பேச இருப்பதாகவும் நீங்கள் இருவரும் அங்கு வரவேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை அங்கே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாங்களும் சென்றோம்.


ஆச்சரியம்தான். இப்படி ஒரு அழகான ஆழமான சரித்திரக் கதையை தான் இதுவரை படிக்கவில்லையென்றும் தெலுங்கு இலக்கிய உலகில் இந்தப் புத்தகம் பதிக்கப்பட்டு வாசகர்வசம் கொண்டுவரப்பட்டால் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் சொல்லிவிட்டு கதையை, அதுவும் முழுக் கதையை சபைக்கு விவரித்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். வம்சதாராவை, வினயனியை, மணிவாணனை மறக்க முடியாத நிலை ஏற்பட்டதை விவரித்தார் வட ஆந்திரத்தின் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மிகப் பெரிய நிகழ்வை மிகப் பெருமையாக எழுதப்பட்டதை விவரித்தார். அவர் புகழுரையில் மதி மயங்கிப் போனோம்தான்.

ஆனால் இந்தப் புகழுரை எல்லாம் மாயையாகத்தான் தோன்றியது. அவர் பாராட்டுதலுக்கு நன்றிதான். ஆனால் இந்தப் புத்தகம் வெளியாக வேண்டுமானால் அங்குள்ள தெலுங்கு புத்தகப் பதிப்பாளர்கள்தான் முன்வரவேண்டும். ஏறத்தாழ 560 பக்கங்கள் கொண்ட வம்சதாராவை பதிப்பிக்க தெலுங்கு பத்திரிகை உலகில் முக்கியமானவர்களை ஏற்கனவே தொடர்பு கொண்ட போதே அவர்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்டோம். பணம் முதலீடு நான் செய்யும் பட்சத்தில் அவர்கள் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார்கள். அப்படித்தான் எல்லா எழுத்தாளர்களும் செய்கிறார்கள். அத்துடன் விநியோகத்தையும் விற்பனையும் நாம்தான் செய்து கொள்ளவேண்டும்.

எழுதுவதே எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் செய்தோம். தமிழிலே எனக்கு இந்தப் புத்தகம் முடிப்பதற்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆராய்ச்சிக்காக நான் சென்ற இடங்கள் எத்தனையோ.. விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் பேருந்திலும் டிரெயினிலும் திடீர் திடீரென ஓடியிருக்கிறேன். வடக்கே ஸ்ரீகாகுளம் பகுதியில் வம்சதாரா நதியோரம் சென்றுவந்தால் தெற்கே கோதாவரி நதிக்கரையோரம் சைக்கிளில் கூட சென்றிருக்கிறேன். எத்தனையோ கல்வெட்டுகள், புத்தகங்கள் விவரங்கள் எத்தனையோ சான்றோர்களுடன் கலந்துரையாடல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் திருவருள் கிடைத்ததால் வம்சதாரா வெளிப்பட்டாள். தமிழ்நாட்டில் நர்மதா பதிப்பகம் என்னை ஆதரித்தது. தமிழ் வாசகர்கள் மத்தியில் இந்தப் புத்தகத்தை நேர்த்தியாக எடுத்துச் சென்றார்கள். ஆனால் தெலுங்கில் நிலைமையே வேறு, புத்தகத்தை நாமே நம் செலவில் பதிப்பித்து அதை வாசகர்களிடம் கொண்டு சென்று விற்கவேண்டிய கட்டாய நிலை உருவானது.

ஆனால் இறைவன் அருளால் வம்சதாராவுக்கு நல்ல காலம் வந்தது. சென்னை பழனியப்பா பிரதர்ஸ் திரு செல்லப்பன் அவர்கள் வம்சதாரா தெலுங்குப் புத்தகத்தைப் பதிப்பிக்க முன்வந்தார். ஆனால் இந்தப் புத்தகம் தெலுங்கு மொழி என்பதால் அனைத்துப் பொறுப்புகளையும் என்னிடமே விட்டுவிட்டார். புத்தக உருவாக்கத்தின் பிரதியைக் கொடுத்தால் அப்படியே ஒன்றும் மாற்றாமல் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார். தவறு ஏதேனும் வந்தால் என் பொறுப்பு என்றும் சொல்லியதால் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.பிழை திருத்தல் முடிந்ததும்  ஏறத்தாழ நான்கு மாதங்கள், இந்த உருவாக்கத்தில் கழிந்தன. பிறகுதான் புத்தகம் வெளிவந்தது.

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துக்கு வம்சதாரா முதல் தெலுங்குப் புத்தகம் என்கிற பெருமை ஏற்படுகின்ற அதே சமயத்தில், தெலுங்கு இலக்கிய உலகில் முதன் முதலாக தங்களது சொந்தப் பிரதேசத்தில், அதுவும் வட ஆந்திரப் பகுதியில் நிகழ்ந்த பழங்கால நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டதால், தெலுங்கு மொழியில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சரித்திர நாவல் என்கிற பெருமையும் பெறுகிறது.

மறுபடியும் ஸஹ்ருதய ஸாஹிதி இந்த முறை பெரிய அளவில் வம்சதாராவை அறிமுகப்படுத்த முன்வந்தார்கள். விழாவையும் முன்னின்று நடத்தினார்கள். டாக்டர் வேணு புத்தகத்தை இந்த முறையும் சிறப்பித்துப் பேசினார். தெலுங்கு சான்றோர்கள் பலர் வந்திருந்து வாழ்த்தினார்கள். தங்கள் பகுதியின் பழங்காலம் சிறப்பிக்கப்பட்டு எழுதியிருப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி அவர்கள் வருகை மூலமாக வெளிப்பட்டது.

அருமை நண்பர் திரு பாலாஜி (ஸ்ரீராம் ப்ராபர்டீஸ், விசாகப்பட்டினம்), பெரிய அளவில் வம்சதாராவை பலரும் படிக்க ஏதுவாக உதவி செய்ய முன்வந்தது மறக்க முடியாதது.

ஆக வம்சதாரா மிகப் பலமாக தன் காலை ஊன்றி சொந்த ஊர் சென்றது மனதுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அடுத்து விஜயவாடாவிலிருந்து அழைப்பு வந்துள்ளது. கலைகளையும் இலக்கியங்களையும் ஆதிகாலம் தொட்டு ஆதரித்து வரும் ஆந்திரத் தலைநகரில் கூடிய விரைவில் வம்சதாரா அடியெடுத்து வைக்க இருக்கிறாள்.


இந்தச் சமயத்தில் என்னுடைய நன்றிகளை ஸஹ்ருதய ஸாஹிதி தலைவர் திருவாளர் சேகரமந்த்ரி பிரபாகர், திரு வேணு, திரு எல்.ஆர் சுவாமி, திரு பாலமோகன் தாஸ் ஆகியோருக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். டாக்டர் வேணு இந்தப் புத்தகம் எப்படியும் வெளியிடப்படவேண்டும் என்று உறுதியாக நின்றிருந்தால்தான் வம்சதாராவுக்கு வழி பிறந்தது. அதே சமயத்தில் திரு பிரபாகரின் உதவி மிகப் பெரியது. அன்பின் வலிமையை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். கனகமகாலக்ஷ்மியின் கருணைதான் என்று சொல்லவேண்டும்.

தெலுங்கு இலக்கிய உலகின் முதல் சரித்திரக் கதையாக வலம் வரும் வம்சதாரா தெலுங்கு பேசும் அனைவர் இல்லத்திலும் கால் பதிய வேண்டும் என்பது என் அவா.

                        *****************

* மேலே படத்தில் - டாக்டர் வேணு, பேராசிரியர் பாலமோகன் தாஸ் (மேனாள் துணைவேந்தர், நாகார்ஜுனா பல்கலைக்கழகம், திரு ராஜேந்திரன் (தலைவர்,வம்சதாரா பேப்பர் ஆலை, ஸ்ரீகாகுளம், பேராசிரியர் வேதுல ஸுப்ரமணியம் மேநாள் தெலுங்குப் பிரிவு தலைவர், ஆந்திர பல்கலைக்கழகம், திரு சேகரமந்த்ரி பிரபாகரம் தலைவர், ஸஹ்ருதய ஸாஹிதி, பேராசிரியர் ராகவேந்திரன், பீமிலி ஆஸ்ரமம். (மேடையை அலங்கரித்த சான்றோர்கள்)


3 comments:

  1. அன்புள்ள திவாகர்,

    ஒரு எழுத்தாளன் தனது படைப்பை எவ்வளவு நெருக்கமாக நேசிக்கிறான் என்பதையும் அதை வெளிக்கொணர எத்தனை வகையான முயற்சிகள் மேற்கொள்கிறான் என்பதையும் உங்கள் மூலம் உலகு தெரிந்து கொள்கிறது.
    வாழ்த்துகள், பாராட்டுகள்!

    வணக்கத்துடன்

    அனந்த் (அனந்தநாராயணன்)

    ReplyDelete
  2. Sir, I wish to buy the Telugu translation of your novel Vamsadhara and Tevaram by Sakshikala garu. Please provide your contact details: your email id or phone number. Thank you.

    ReplyDelete