Friday, April 13, 2012

திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை
பிரசாதம் என்றால் தமிழில் ஆண்டவனுக்கு அளிக்கப்படும் நிவேதனம் அல்லது தெய்வத்துக்குப் படைக்கப்படும் சோறு அல்லது பதார்த்தங்கள், அருட்கொடை, அருளாசிகள் போன்ற அர்த்தங்கள் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருப்பதி பிரசாதங்கள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் பதித்து இருந்தேன். இந்த கட்டுரை கூட அதையொட்டியே அல்லது அதன் மேல் விவரமாக அமையும்..

பொதுவாக இக்காலத்தில் நம் கோயில்களில் இப்போதெல்லாம் பிரசாதங்கள் விற்பனை மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இது முறையா அல்லது முறையற்றதா என்பதைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கு என படைக்கப்பட்டு அவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டு, அவனின் அருள் கொடையாக நம்பப்பட்டு, அந்தப் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனைக்கு விற்கப்படுகின்றன என்று நினைக்கும்போது சற்று மனம் வருத்தப்படலாம். மந்திராலயம், தர்மஸ்தலா போன்ற ஆலய ஊர்களில் இப்படி பிரசாதங்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை என்பதோடு அங்கு பிரசாதங்கள் மிகத் தாராளமான வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இதில் எம்மூர் திருவாலி திருநகரியும் அடங்கும் என்பது ஒரு சிறிய திருப்தி கூட. சரி, இது இருக்கட்டும்.

பிரசாதம் என்றாலே திருப்பதி, திருப்பதி என்றாலே பெருமாள் தரிசனமும் அதற்கு பின் சீட்டு பெறப்பட்டு அதன் மூலம் வரிசையில் நின்று காசு கொடுத்து வாங்கும் லட்டு, அதுவும் எக்ஸ்ட்ரா லட்டுகள் (கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தாவது) கிடைக்குமா என்ற ஆவல் முதலானவை எழத்தான் எழும்.
முதன் முதலில் இந்த பிரசாதமானது விற்பனை என்ற பெயரில் காசு வாங்கிகொண்டு விற்கப்பட்டது கூட திருமலை திருவேங்கடத்தான் திருக்கோயிலில்தான். 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கோயிலின் பூசை விவகாரங்களை ராமானுச கூடம் என்னும் தென்கலை மடத்தைச் சேர்ந்தவர்கள் கவனித்துக்கொள்ள அதன் வெளிவிவகாரங்கள் அதாவது நிதி விவகாரங்கள், நிலங்களை குத்தகைக்கு விடுத்து அதன் மூலம் வரும் வருமானங்கள், செலவுகள், திருவிழா ஏற்பாடுகள் இவற்றை ‘ஸ்தானத்தார்’ என்று சொல்லப்படும் அலுவலர் குழுவினர் கவனித்துக் கொண்டனர். அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்ட வரையில் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். ஆனால் ஆலயத்தில் நின்ற நிலையிலே எந்நாளும் அருளிக்கொண்டிருக்கும் திருவேங்கடவனுக்குச் சார்த்தப்பட்டு வரும் சுவர்ண ஆபரணங்கள், தங்கக் கிண்ணங்கள், வெள்ளி சாமான்கள் பெருமளவில் சேதமடைந்து கிடந்ததால் அவை அனைத்தையும் மராமத்துப் பணி மூலம் அவைகளை சரிசெய்ய பூசைகளைக் கவனித்து வரும் ராமானுஜ கூட மடாதிபதி வற்புறுத்தினாலும் ஸ்தானத்தார் அதைச் செய்யாது போகவே அன்றைக்கு மடத்தின் அதிபதியாக பொறுப்பேற்றிருந்த கந்தாடை ராமாநுச ஐயங்காருக்கு ஒரு நூதன வழி பிறந்தது.

அதாவது, பூசை செய்வோருக்குப் பங்காக அளிக்கப்படும் பிரசாதங்களை ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு விற்பது எனவும் அப்படி விற்பனை செய்த பணம் மூவாயிரம் சேர்ந்ததும், அந்தப் பணத்தைக் கொண்டு மேற்கண்ட பணிகளைத் தாங்களே செய்துகொள்வதாகவும் ஸ்தானத்தாரிடம் தெரிவித்து விட்டனர்.
இது ஸ்தானத்தாருக்குப் பிடிக்கவில்லை. பிரசாதத்தையாவது விற்பதாவது.. ஆனால் ராமானுஜ ஐயங்கார் அவர்களை ஒரு வார்த்தை ஒப்புதல் கேட்டதோடு சரி, ஒப்புதல் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த நூதன வழியை தன் மடத்தைச் சார்ந்த அர்ச்சகர்களுக்குச் சொல்லி அவர்கள் உதவியோடு அன்று முதல் அவர்களின் பங்காக வரும் பிரசாதங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று பக்தர்களிடமிருந்து தொடங்கி மராமத்துக்காக காசு சேர்க்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஸ்தானத்தாரை மீறி ராமானுச கூடமும் கந்தாடை ராமானுஜ ஐயங்காரும் தன்னிச்சையாக செயல்படுவது பிடிக்காமல் இந்த விவகாரம் விவாதகளமானது.

அப்போது திருமலை கோயில் சாலுவ நரசிம்மராயரின் ஆளுகையில் இருந்தது. சாலுவ நரசிம்மர் திருமலையின் கீழேயே உள்ள சந்திரகிரி கோட்டையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு முழுதும் ஆண்டுகொண்டிருந்த கால கட்டம். இந்த மன்னர்தான் திருமலைக் கோயிலில் எல்லா நிகழ்ச்சிகளையும் முறைப்படுத்தியவர். திருமலை வேங்கடவன் புராணம் எழுத வைத்தவர். பலவகை பிரசாதங்கள் பெரிய அளவில் செய்ய கட்டளையிட்டதோடு அதற்கான நிலங்களையும் தானமாக ஒதுக்கி கல்வெட்டு சாஸனமும் செய்தவர். திருமலை திருவேங்கடவன் புகழ்மாலையாக பாடிய அன்னமய்யா கீர்த்தனைகளுக்கும், அன்னமய்யாவுக்கும் ஆதரவளித்தவர். அவரால் ஒரு கீர்த்தனையின் மூலம் பாடப்பட்டவர். இவரிடம் திருமலை ஸ்தானத்தார் சென்று ராமானுச கூடத்து கந்தாடை ராமானுச ஐயங்காரின் செயல்கள் குறித்து முறையிட்டனர்.

நரசிம்ம ராயர் திருமலைக் கோயிலுக்கு இதற்காக விஜயம் செய்தார். கோயிலில் உள்ள ஆபரணங்களையும் பிற வஸ்துக்களையும் பார்த்தார். விவரம் புரிந்தது. ராமானுஜ ஐயங்காரின் உயரிய குறிக்கோளும், தங்கள் பங்குப் பிரசாதங்களை விற்றாவது மராமத்து வேலையைச் செய்தே தீரவேண்டுமென்ற அவர்களின் தீர்மானமும் ராஜாவுக்கு பிடித்துப் போனது. அரசர் நினைத்தால் அதற்கான செலவைக் கொடுத்து கல்வெட்டும் ஒன்று வடித்திருக்கலாம்தான். ஆனால் இங்கு கந்தாடை ராமானுஜ ஐயங்காரின் உயர்ந்த சேவையின் மதிப்பு அவருக்கே செல்லவேண்டுமென, அரசர் அங்கேயே ஒரு சாஸனமும் (தெலுங்கிலும் தமிழிலும்) எழுதி வைத்தார்.

“இந்த ஆக்ஞை பிரகாரம், திருமலை ஸ்ரீனிவாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாபரணங்களோடு, தங்கம், வெள்ளி வஸ்துக்களையும் மராமத்து செய்து பராமரிக்கும் வேலையை கந்தாடை ராமானுச ஐயங்காரிடம் ஒப்புவிக்கப்படுகிறது.அவர்களின் பங்கு மூலம் கிடைத்த பிரசாத விற்பனையில் கிட்டிய பணத்தைக் கொண்டு இந்த மராமத்து வேலைகளைச் செய்தவுடன் மீதப் பணத்தை ஸ்ரீவாரி பண்டாரத்திடம் (பொக்கிஷ அதிகாரி) ஒப்படைக்கவேண்டும்”

இந்த கட்டளைக் கல்வெட்டு நம் இன்றைய கணக்கில் 1495ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வடிக்கப்பட்டது. இன்னொரு கல்வெட்டு, பிரதி வருடமும் இப்படி பிரசாதம் விற்ற பணத்தினால் மராமத்து செய்ய கந்தாடை ராமானுச ஐய்யங்காருக்கு அனுமதியும் வழங்கப்பட்டதை உறுதி செய்கிறது.. அத்துடன் கந்தாடை ராமானுஜ ஐயங்காருக்கு சொந்தமான மூன்று மடங்களும் வருடத்துக்கு ஆயிரம் பணம் இந்த பிரசாதம் விற்றதன் மூலம் மூவாயிரம் பணம் கொடுக்கலாம் என்றும் அதிலும் போக மீதி இருந்தால் அதைக் கோவில் பொக்கிஷத்தில் வரவு வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அவைகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சாலுவ நரசிம்ம ராயரின் கல்வெட்டு சொல்கிறது. ஆக பிரசாதம் விற்பது முறைப்படி ராஜகட்டளை மூலம் தார்மீகப்படுத்தப்பட்டுவிட்டது.
பிரசாத விநியோகம் என்பது ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாகவே ஒரே சம்பிரதாயத்தில் வந்து சமீபத்தில் அது நீதிமன்றம் மூலம் ஒரு முடிவுக்கும் வரும் நிலையில் உள்ளது. அப்படியே திருப்பதி பிரசாத பங்குதாரர்கள் மிராசுகள் என்றழைக்கப்படும் விதத்தையும் இங்கு குறுப்பிட விரும்புகிறேன்.

கந்தாடை ராமானுஜ ஐயங்கார் தம் காலத்தில் ஆலய அதிகாரிகளிலிருந்து ஆலயத்தைக் காக்கும் காவல்காரன் வரை தம் கையாலேயே கணக்குப் போட்டு சம்பளம் கொடுத்து வந்திருந்தார். இந்த சம்பளம் என்பது இருவகைப் படும். ஒன்று பணமாக வழங்கிவந்தது. வேறு சிலருக்கு பிரசாதத்தில் பங்குகள் கொடுக்கப்பட்டு வந்தன. (தில்லை திருச்சிற்றம்பல ஆலயத்தில் இப்படி பிரசாத பங்குகள் இன்றும் கூட ஆலய தீட்சிதர்களுக்கு உண்டு). யார் யாருக்கு பிரசாதமாக சம்பளம் வழங்கப்படும் என்றும் அவரே நிர்ணயித்தார். ஆலயத்தில் பிரசாதம் செய்வோர், மடைப்பள்ளி வேலையாட்கள், ஆலயத்தைச் சுத்தம் செய்வோர், யானைப்பாகன்கள் என இன்ன பிற வேலைகளைச் செய்வோருக்கு பிரசாதம் வழங்கப்படும் என்றும் அந்தப் பிரசாதத்தை அவர்கள் வெளியே உள்ள பக்தருக்கு விற்று பணமாக்கிக்கொள்ளவும் வகை செய்தார். அதே போல, பெரிய பெரிய ராஜாக்கள், செல்வந்தர்கள் கொடையாக கொடுக்கும் பிரசாதங்கள் ராமானுச மடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மேலும் ஆலய ஸ்தானத்தார்களுக்கு ஒரு பெரிய பங்கு பெற்று அவைகளை விற்றுக்கொள்வர், பிரசாதம் விற்பது என்பது இப்படி நடைமுறைக்கு வந்தது.

இந்த அளவு விகிதம் (ratio) வெகு நேர்த்தியாக கணக்கிடப்பட்டு இன்னின்னாருக்கு இன்னின்ன பங்கு என்ற முறையில் சமீபகாலம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தது. இப்பங்குகள் அவரவர் வம்ச வாரிசுகள் அனுபவிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்தப் பங்குதாரர்களே (ஸ்தானத்தார் தவிர்த்து) காலாகாலத்தில் மிராசுகள் என அழைக்கப்பட்டனர்..

திருப்பதியில் 1979-80 இலிருந்துதான் இலவசப்பிரசாதம் எல்லா பக்தருக்கும் வழங்கவேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த பிரசாத அளவு சட்டப்படியாகவும் சம்பிரதாயம் மீறாமல் இருக்கவேண்டுமே. ஆகையினால் ஸ்தானத்தார் அதாவது திருமலை தேவஸ்தானத்துக்கு உண்டான பங்குகள் அனைத்தும் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

திரு பி.வி.ஆர்.கே. பிரசாத் என்னும் செயல் அதிகாரிதான் இதை செயல்படுத்தினார். முதலில் சின்ன அளவில் (கடலை உருண்டை அளவில்) லட்டுகள் செய்யப்பட்டு அவை பிரசாதமாக இலவசமாக தரிசனம் முடிந்த பக்தர் ஒவ்வொருவருக்கும் தலா ஒன்று என அளிக்கப்பட்டது. ஆனால் இவை போதவில்லை.. எல்லா பக்தர்களுக்கும் லட்டு இலவசமாக அளிப்பது கடினமாக இருந்தது. ஆகையினால் தேவஸ்தான அதிகாரிகள் மற்ற பிரசாத பங்குதாரர்களையும் தங்கள் பங்குகளை வெளியே விற்காமல் தேவஸ்தானத்துக்கே விற்று விட ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அது செயல்பாட்டில் வருவது பெரும் சிக்கலாகப் போனது. இதன் மத்தியில் ஆட்சிக்கு வந்த நடிகர் என். டி. ராமராவ் 1987 ஆம் ஆண்டு இந்த மிராசு பங்குதாரர் முறையையும், அந்த பிரசாத பங்குகள் விற்பனையையும் முற்றிலும் ஒரு அரசு ஆணை மூலம் தடை போட்டார். ஆனால் இதை எதிர்த்து பிரசாத பங்கு மிராசுதார்கள் நீதிமன்றங்களை அணுகினார்கள்..

காலத்தின் கோலம் பாருங்கள்! ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.பி. 1495 ஆம் ஆண்டு பிரசாத விற்பனைக்கு ஆதரவாக அந்த மாநிலத்து ராஜா கல் சாஸனம் மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் ஐந்நூறாவது ஆண்டு முடிந்தவுடன் இன்னொரு உத்தரவு சரியாக 1996 ஆம் ஆண்டு இன்றைய சுப்ரீம் கோர்ட், (ஜஸ்டிஸ் ராமசாமி) இந்த பிரசாத பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்தாவிட்டாலும் ஒரு ஒழுங்குமுறையோடு, வாழும் பங்குதாரர்களுக்கு இரு சில உரிமையுடன் விட்டுக்கொடுத்து, அதே சமயம் அவர்கள் வம்சத்தாருக்கு பிரசாதத்தில் இனி எந்த உரிமையும் இல்லையெனவும், சிறிது காலம் கழித்து இந்த பிரசாத பங்கு விற்பனையை முற்றிலுமாக நிறுத்தப்பட வழி வகை செய்யும் சரித்திரப்புகழ்மிக்கதீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் தற்சமயம் பங்குகள் பெறும் மக்கள் இனி தம் வம்சத்தார் மூலம் அந்தப் பங்குகளை நீட்டிக்கமுடியாது. இதை மிராசுதார்கள் சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் இந்த முடிவான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறுபடியும் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்கள். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது என்றாலும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விதித்த தீர்ப்புக்கு எதுவும் தடையில்லாததால் பிரசாத பங்குகள் விற்பனைகள் இனி நிச்சயமான முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே படுகிறது.

அதே சமயத்தில் இப்போதெல்லாம் இந்த இலவச சின்ன லட்டு பிரசாதம் செய்முறை மிகக்கடினமான அளவில் இருந்ததால் இந்த சின்ன லட்டு தவிர்க்கப்பட்டு தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, எள்ளுப்பொடி சாதம், சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரிக்கப்பட்டு தொன்னையில் பிரசாதமாக எல்லோருக்கும் எந்த நேரமானாலும் தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்றது.


ஏற்கனவே என்னென்ன பிரசாதங்கள் திருப்பதியில் திருவேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன என்று வேறொரு பதிவில் எழுதினோம். ஆனாலும் திருவேங்கடவனுக்கு அன்று முதல் இன்று முதற்கொண்டு ஒரே ஒரு பிரசாதம் மட்டுமே அவன் திரு உருவச்சிலை முன்னே காணப்படும் ’குலசேகரப்படி’ தாண்டி செல்லும் உரிமை பெற்றது. அது நாம் மிகவும் பிரியமாக உண்ணும் வெண்பொங்கல்தான். கி.பி. 966 இலிருந்து இவ்வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். பொங்கல் அளவு இரண்டு படி (அதாவது நான்கு நாளி அல்லது நாழி) அதை தினமும் புதிய பானையில் வடித்து, அதை இரண்டாக உடைத்து, மேல் பாகத்தைத் தூர எறிந்து, பொங்கலுடன் உள்ள கீழ்ப்பாக ஓடு மட்டும் உள்ளே பிரசாதமாகப் போகும். ஏனைய பிரசாதங்கள் எல்லாம் குலசேகரப்படிக்கு முன்பேயே வைக்கப்பட்டு அவருக்கு நிவேதனம் செய்யப்படும். இப்போது மிகப் பிரமாதமாகப் போற்றப்படும் லட்டு உட்பட அனைத்துப் பிரசாதங்களுக்கும் இதே நிலைதான். ஏறத்தாழ 1050 வருடங்களாக இதே சம்பிரதாயம் கட்டாயமாக்கப்பட்டு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

திருமலைக் கோயிலில் சில சமயம் இப்படிப்பட்ட பொங்கல் நிறைந்த கீழ்ப்பகுதி ஓடுகள் அபூர்வமாக மற்ற பக்தர்களுக்குக் கிடைக்கும் (அர்ச்சகர் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில்) 1980 களில் அடியேனே ஒரு அதிகாலை நேரத்தில் இப்படி ஒரு அர்ச்சகர் (எங்கள் பாலு சித்தப்பாவுக்கு மிகவும் தெரிந்தவர்) மூலம் இந்த அரிய பிரசாதத்தை பெற்றுக் கொண்டதும் அதை ருசித்துச் சாப்பிட்டதும் நன்றாகவே நினைவு இருக்கிறது என்றாலும் அந்த அரிய பொங்கல் பிரசாதம் வாங்கியது. காசுக்கா அல்லது இலவசமாகவா என்பது மட்டும் நினைவில் இல்லை.

படங்கள் உதவி: திருமதி சுபாஷிணி ட்ரெம்மல்
இந்தப் பதிவு மரபு விக்கியிலும் பதிக்கப்பட்டுள்ளது இங்கே

12 comments:

  1. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    நன்றி

    ReplyDelete
  2. கந்தாடை ராமானுஜ அய்யங்கார் என்பது, உடையவரா இல்லை அவர் வம்சத்தில் வந்த ஒருவரா ? சிதம்பரத்தில் மட்டும் அல்ல , அனைத்துக் கோவில்களிலும் பிரசாதத்தில் பங்கு உரிமை பெற்றவர்கள் உண்டு, அதற்க்கு 'சுதந்திரம்' என்று குறிப்பிடுவார்கள். எண்பதுகளில் வழங்கப்பட்ட அந்த சிறிய இலவச லட்டுவின் ருசியே அலாதி. நீங்கள் குறிப்பிட்ட மற்ற , சாத வகை பிரசாதங்களினால் அந்த பிரசாதம் வழங்கும் இடத்தின் சுத்தம் குறைகிறது என்பது என் தாழ்மையான கருத்து. அரிய பொங்கலை பிரசாதமாகப் பெற்ற நீங்கள் பாக்கியசாலி. யானைக்கு போடும் நாமத்திற்க்கே வழக்குக்குப் போனவர்கள் அல்லவா நம் ஆட்கள் , இந்த வழக்கின் தீர்ப்பு அனைவருக்கும் ஏற்புடையதாக அந்த வேங்கடவன் அருளட்டும்.
    ஷோபா

    ReplyDelete
    Replies
    1. ஷோபா!
      கந்தாடை ராமானுஜ ஐயங்கார் உடையவர் இல்லை. இவர் தென்கலை சம்பிரதாய மடாதிபதி. ஆனால் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மிகச் சில ஜீயர்களில் ஒருவர். இவர் தலைமையில் திருமலை கோவில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக சொல்வர். அத்துடன் மாதம் ஒரு பிரம்மோத்சவம் என்று ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருமலையில் நடத்தவும் இவரே காரணம்.
      2. ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரசாத பங்குகள் உண்டு.
      3. திருமலையில் பிரசாத விஷேசம் என்னவென்றால் இங்குள்ள நூற்றுக்க்கணக்கான கல்வெட்டுகள் பிரசாதக் கொடை ஒன்றை மட்டுமே பேசுகின்றன. அத்தனை கல்வெட்டுகளும் நகல் எடுக்கப்பட்டு புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு சமயம் பிரசாதத்துக்கான ரசீது கூட ஒரு கல்வெட்டாக அப்போதைய ஸ்தானத்தார் வழங்கியுள்ளனர்.
      வழக்கின் தீர்ப்பு எல்லோருக்கும் சாதகமாக அமையும் என்பதே என் நம்பிக்கையும் கூட.

      Delete
    2. நன்றி திவாகர் , திருமலை ஒழுகு புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா? மணிப்ப்ரவாளத்தில் தான் உள்ளதா அல்லது தமிழும் உள்ளதா ?

      Delete
    3. திருமலை ஒழுகு தி.தி.தே நூலகத்தில் தேடணும். (பொதுவாக ஒழுகு போன்றவைகளை சரித்திர ஆதாரமாக எடுப்பதில் சங்கடங்கள் உள்ளன) ஆனால் தி. தி. தே எல்லாப் பழைய குறிப்புகளையும் பதிவெடுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்த முறை திருப்பதி செல்லும்போது, கீழ் திருப்பதியில் பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் உள்ள தி. தே நூலகம் சென்று பாருங்கள். மிக விஸ்தாரமான அளவில் கட்டியுள்ளார்கள்.

      Delete
  3. லட்டுக்குப் பின்னால் இவ்வளவு நடந்திருக்கிறதா...அடக் கடவுளே உன்னிடம் வெண்பொங்கலைக் காட்டிவிட்டு லட்டையா விற்பனை சொல்கிறார்கள்!
    பரவாயில்லை, அந்த வேங்கடவன் நம் திவாகர் சார் வழியாக உண்மையை அறிந்து கொள்ள வைத்துவிட்டான்...
    இனி திருப்பதின்னா பொங்கல்தான்...

    எவ்வளவு வரலாற்றுச் செய்திகள்...சார் புத்தாண்டு வெகு சிறப்பா ஆரம்பிச்சிருக்கு இனி அடுத்த வீட்டுலயும் அடிக்கடி ப்ரசாதம் கிடைக்கும்னு சொல்லுங்க.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Satheesh! லட்டு பிரசாதம் கொஞ்சம் உம்மாச்சிக்கும் காமிப்பாங்க.. ஆனா பொங்கல் தவிர்த்து எல்லாப் பிரசாதங்களுமே 'படியாய்க் கிடக்கும் குலசேகர ஆழ்வாரை'த் தாண்டாது. ஆனால் கோயிலில் இருந்து எது பெற்றுக்கொண்டாலும் அது பிரசாதம்தானே! கீழே அலர்மேல் மங்கை கோயில் லட்டு பிரசாதம் கூட மிகச் சுவையாக இருக்கும். அடுத்த முறை போகும்போது அதையும் முயற்சி செய்யுங்கள்.

      Delete
  4. கோவில் வரலாற்றில் இவ்வளவு அறியக் கொடுத்திருக்கிறார்களே.

    என்ன ஒரு நெறிமுறை.
    ஸ்ரீரங்கம் கந்தாடை மரபும், திருமலை கந்தாடை பரம்பரையும் ஒன்றா.
    லட்டு பிரசாதம் பற்றின விவரங்கள் அருமை . இறைவன் நல்ல தீர்ப்பு கிடைக்க வழி செய்வார்.
    மிகவும் நன்றி திவாகர்.

    ReplyDelete
    Replies
    1. கந்தாடை குடும்பப்பெயர். ஸ்ரீரங்கமும் திருப்பதியும் ஒன்றுதான். உடையவர் ஒழுங்குமுறையில் இரு கோயில்களுமே உள்ளன.

      Delete
  5. போனோமா, பார்த்தோமா, லட்டு சாப்பிட்டோமா, என்று திருப்பதி சென்று வரும் எங்களுக்கு,அதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்று எடுத்து கூறிய உனக்கு, என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன். மிக நல்ல அறிய தகவல்கள். வாழ்க நீ! வாழ்கௌன் தொண்டு.

    ReplyDelete