Wednesday, December 23, 2009

மார்கழியில் ஆந்திரம் மாறும் விந்தை

மார்கழி மாதம் மிதமான பனியோடு சில்லென்று ஆரம்பித்து விட்டது. மார்கழியோடு மனம் குளிர திருப்பாவையும் கேட்க ஆரம்பித்துவிட்டோம். தமிழகத்தில் எப்படியோ. ஆனால் ஆந்திரத் திருநாட்டில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிக்கிறது. பாரதி ஒருவேளை இங்கு வந்தால் 'அடடே! தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர்’ என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே!!.. என்று மீசையை முறுக்கிக்கொள்வான். (பிறகு அவனுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்.. 'இது தந்தைநாடான தமிழ்நாடல்ல தலைவா..சுந்தரத்தெலுங்கு என்று சொன்னாயே.. அந்தத் தெலுங்கு நாடு' என.)

ஹைதராபாத், செகந்திராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, குண்டூர், கர்நூல், காளஹஸ்தி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் (திருப்பதி கேட்கவே வேண்டாம்-திருமலையிலோ முப்பது நாளும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் தமிழோசைதான்) இன்னும் எத்தனையோ நகரங்களில் சாயங்கால வேளையில் பனியில் நனைந்துகொண்டே ஆங்காங்கே கூட்டங்கள் அமர்ந்திருக்க, ஒரு பெரியவர் அல்லது பெண்மணியார் தமிழில் திருப்பாவைப் பாடி அதற்கு தெலுங்கில் விரிவுரையும் விளக்கவுரையும் கதையாகச் சொல்கின்றார்கள். தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும்போது 'ழ' ‘ற’ 'ள' நாக்கில் சரியாகப் பிறளாது (நம்மூரில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? - என யாரும் கேட்கவேண்டாம்) ஆனாலும் அவர்களின் மழலையின்பத் தமிழ்ப் பேச்சு காதில் இன்பத் தேனாய் விழுகிறது. சொல்பவரும் கேட்பவர்களும் அத்தனைபேரும் தெலுங்கர்களே. நம்மை விட பக்தியாய் மிகவும் ஊன்றிப்போய் கேட்கிறார்கள்.

இந்த பக்தி இயக்கம் (அப்படித்தான் சொல்லவேண்டும்) கடந்த முப்பது வருடங்களாகவே ஆந்திராவில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு வைணவப்பெரியவர். பெயர் – ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு. பரமபதம் அடைந்து சில வருடங்களாகிறது. பழுத்த வைணவப்பழம். தெலுங்கு மற்றும் வடமொழியில் மன்னர். காசி பல்கலைக்கழகம் அவர்களாகவே இவரிடத்தில் வந்து 'மஹோபாத்தியாய' பட்டத்தைக் கொடுத்து விழா எடுத்தார்கள். இவர்தான் ஆந்திரத்தில் திருப்பாவை - முப்பது பாடல்களையும் முப்பது நாட்கள் உபன்யாஸமாக தெலுங்கு மக்களிடையே பரப்பிய மகான். இவரால் கற்பிக்கப்பட்ட எத்தனையோ பண்டிதர்கள் இன்று ஊரெங்கும் திருப்பாவை தமிழ்பரப்பி வருகிறார்கள். இவருடைய சிஷ்ய பரம்பரை ஆந்திராவெங்கும் பரவி இருக்கிறார்கள். ஆந்திராவில் வைணவப் பெரியவர்களான சின்ன ஜீயரும், ஸ்ரீமன் ராமானுஜ ஜீயரும் அப்பாளாச்சார்யுலுவிடம் பயின்றவர்கள்தான். சின்ன ஜீயர் வெகு அழகாக தமிழ் பேசுவார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திருப்பாவையால் தமிழ் ஆந்திராவெங்கும் பரவுகிறது என்று கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாருங்கள்.

உடையவர் ஸ்ரீராமானுஜர் செய்த மிகப் பெரிய சமுதாயப் புரட்சி என்பது சாதிகளை ஒன்று சேர்த்ததுதான். அவர் செய்த அந்த மாபெரும் சேவை சொந்த வீடான தமிழகத்தில் தற்சமயம் எப்படி இருக்கின்றதோ அறியேன்.. ஆனால் அடுத்த வீடான ஆந்திரத்தில் மட்டும் மிகப் பெரிய வெற்றியாக ஆண்டாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர் மூவரும் கலந்த ஒரு ஜாதி இங்கே ஆந்திரத்தில் ஸ்ரீவைணவ சேவை செய்து வருகிறது. இந்த மூன்று ஜாதிகளும் கலந்ததால் அவர்கள் த்ரைவர்ணிகா என்றே அழைக்கப்படுகிறார்கள். எல்லோருமே நல்ல செல்வந்தர்களோ என்றுதான் நினைக்கத் தோன்றும் ஏனெனில் இந்தக் குழுமத்தார் நகைக்கடைகளை ஆந்திராவெங்கும் நிறுவி வணிகம் செய்து வருகின்றனர். இந்த த்ரைவர்ணிகர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் (ஆந்திர மாநிலத்தில்) அவர்களுக்கென தனிப்பட்ட விதத்தில் வழிபாட்டு மண்டபம் அமைத்துக் கொள்வர். அத்தனை மண்டபங்களும் ராமானுஜரின் பெயரில்தான் அழைக்கப்படும். இங்கு இவர்கள் வழிபடும் தெய்வங்கள் ராமானுஜர், நம்மாழ்வார், ஆண்டாள், மேலும் வழிபாட்டு மொழி தமிழ். அதாவது திவ்யப்பிரபந்தமும் ஆண்டாள் பாசுரங்கள் மட்டுமே. வேறு வகையில் இவர்களுக்கு தமிழ் மொழி சுத்தமாக வராது. தமிழில் சென்று சாதாரணமாக இவர்களிடம் பேசினாலும் புரியாது. ஆனால் ‘சிற்றஞ்சிறுகாலே’ என்று தமிழில் ஆரம்பித்தாலே போதும், உடனே ‘வந்துன்னை சேவித்து உன் பொத்தாமரை’ என்று மற்ற வரிகளைப் பாடத் தொடங்கி விடுகின்றனர். இவர்களுக்கு (ற்றா. ழ, போன்ற வார்த்தைகள் வராது)
இவர்களுக்கெல்லாம் பரமாச்சாரியராக விளங்கியவர் ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்யலு,

அவர் பரமபதம் சேர்ந்தபின்பு ஜீயர் பெருமக்களையே தங்கள் குலகுருவாக ஆக்கிக் கொண்டார்கள். ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலுவின் திருமகளான திருவேங்கலம்மா அவர்களும் தமிழில் அதுவும் வைணவத் தமிழ்ப் பாடல்களில் நல்ல பாண்டித்யம் உள்ளவர்தான். இவரைப் போலவே நூற்றுக்கணக்கான ஆச்சாரியர்கள் ஆந்திராவெங்கும் இந்த மார்கழி மாதத்தில் கோதைத்தமிழின் பெருமையைப் பேசச் தொடங்கி விடுவார்கள். இவர்கள் பேசும் மார்கழிக் கூட்டங்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் தொடங்கும். பொதுமக்கள் ஏராளமாக வந்து இவர்கள் தமிழ்ப் பாடல் பாடுவதையும் அதன் விளக்கங்களையும் சுவையாக கேட்பார்கள். இந்த ஆண்டாள் என்ன மாயம் செய்தாளோ இத்தனை அழகாக பாடியிருக்கிறாள் என்று ஆன்மீக உள்ளங்கள் ஆழ்ந்து வியக்கும் வகையில் இந்த ஆச்சாரியார்கள் விளக்கங்களை கதை போல சொல்வார்கள். கேட்டு வியக்க இரு செவிகள் என்ன, ஓராயிரம் செவி கூட போதாதோ என்று ஓரொரு சமயம் தோன்றும்.அவர்கள் தெலுங்கு விளக்கம் - உங்களுக்காக நம் அழகிய தமிழிலே:




அவள் காத்திருக்கிறாள்..தோட்டத்திலே.. அதுவும் குளக்கரைப் படித்துறையிலே - குளத்தில் மலர்ந்த அல்லி மலர்கள் விரிந்து அவள் கண்களோடு தன்னை ஒப்புநோக்கிப் பெருமை அடையும் அந்த இரவு நேரத்தில் அவள் காத்திருக்கிறாள்

எப்படியும் கண்ணன் வருவான்,- அவன் சொல்லிவிட்டான், இரவு ஆரம்பிக்கும்போது வந்துவிடுவேன் என்று..- அவன் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுபவன்தான்.. - இன்று வரை அப்படி காப்பாற்றிக் கொண்டிருப்பவன்தான்.. அவனை நம்பு மனமே.. பொறுமை வேண்டும்.. காதலுக்குப் பொறுமைதான் தோழன்.. ஆகவே சற்றுப் பொறுத்திரு.. இரவு வந்துவிட்டதே என்று ஏன் பரபரக்கிறாய்?.. அவன் வருவேன் என்று வாக்குக் கொடுக்கும்போது நீ நம்பித்தான் ஆகவேண்டும் மனமே.. பொறுத்திருக்கத்தான் வேண்டும்.. ஆனால் எத்தனை நேரம்தான் காத்திருப்பது.. என்ன பெரிய நேரம்.. அப்படி தாமதம் ஆனால் ஆகட்டுமே.. நேரம் கடந்து போனால் என்ன.. போகட்டுமே.. வருவேன் என்று சொன்னவன் வராமல் போய்விடுவானா..

வருவான்.. எனக்காக வருவான்.. வந்துதான் ஆக வேண்டும்.. என்னை ஏமாற்றமாட்டான் அந்த செந்தாமரைக் கண் கொண்ட என் கண்ணன்.. இந்த இரவு இப்படி வீணாகப் போகின்றதே என்று ஏன் மனமே கிடந்து அல்லாடுகிறாய்.. தவிக்காதே.. வந்துவிடுவான்.. காலை வருவதற்குள் வந்துவிடுவான்.. அட.. அதோ பார் .. பின்னால் அவன் காலடி ஓசை கேட்கிறதே.. என் கண்ணன் வந்துவிட்டான்.. என் மன்னன் தான் .. அவனே தான்.. அவனை அணு அணுவாய் ரசிப்பவளாயிற்றே.. அவன் காலடி ஓசையை கண்டுகொள்ளமுடியாதா.. கள்ளன்.. எத்தனை மெல்லமாக வருகிறான்.. வரட்டும்.. அவனே வந்து தன் கள்ள முகத்தைக் காண்பிக்கட்டுமே.. நான் ஒன்றும் அவனுக்காகவே காத்திருக்கவில்லை என்பதை எப்படி உணர்த்துவதாம்.. அவனாகவே தெரிந்து கொள்ளட்டுமே.. நாமாக அவனை ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்?... இரவெல்லாம் முடிந்து உதய காலத்தில் அல்லவா வந்துள்ளான்..

கண்ணன் வந்தான்.. மங்கை தனக்காக தன்னந்தனியே தலையைக் குனிந்து காலுக்கு முட்டுக்கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.. தான் வந்ததை அறியவில்லையோ.. மெல்ல அடியெடுத்து மங்கை பின்னே சத்தமில்லாமல் அமர்ந்து தன் கைகளை முன்னே நீட்டி அவள் கண்களை மூடினான்.

தன் கைகளால் பொய்க்கோபத்தோடு அவன் கைகளை விலக்கினாள். குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்த்தி தலைக்கு மேல் தெரிந்த தலைவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் என்னதான் மாயம் செய்ததோ.. அங்கே கோபம் அகல மங்கை மயங்கி வெட்கம் சேர தன் அகல விரிந்த கண்களை மெல்ல மூடினாள். அவனும் மதி மயங்கிப் போய் அந்த அழகு முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் அகல விரிந்தன. மங்கையின் அல்லிமலருக்கொத்த கண்கள் மெல்ல மூட, கண்ணனின் செந்தாமரைக் கண்கள் மிகப் பெரிதாகி அவளை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிவிட்டது.

"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்"

(ஆண்டாளின் 14ஆவது பாவைப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு திருவேங்கல அம்மையார் தெலுங்கினில் சொன்னது, செங்கழுநீர் - செந்தாமரை மலர் உதய காலத்தில் விரியும், ஆம்பல் மலர் இரவு நேரத்தில் விரிந்து காலையில் விரிவு சிறிது சிறிதாகக் குறையும்)

20 comments:

  1. அடடா.அருமை.
    அதென்னவோ ஆந்திரா தேசத்துப் பக்தி அருமைதான்.பெருமாளிடம் வெறியாகப் பிடித்த பக்தி.
    அந்தக் கோதாவரிதான் அவர்களுக்கு அதைக் கொடுத்தாளோ.
    இல்லை கிருஷ்ணா தான் கொடுத்தானோ.
    உடையவர் பெருமையும், உங்கள் புழக்கடைத் தோட்டமும்,கண்ணனும் அவனுடைய மங்கையும்
    அவர்கள் காதலும் விவரிக்கப் பட்ட தமிழ், அழகு.

    ReplyDelete
  2. மிக அருமை.

    ஆந்திரத் தெருவெங்கும் திருப்பாவை இசைக்கும் செய்தி கேட்டு, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

    திருவேங்கல அம்மையாரின் விளக்கத்தினைத் தமிழில் வழங்கியது, காதலும் பக்தியும் கலந்த காவியம்.

    ReplyDelete
  3. ஆந்திரா என்ற உடனேயே, தற்சமயம் செய்திகளில் ஓடிக் கொண்டிருக்கும் வன்முறைப் போராட்டங்கள், அதற்கு முன்னால், தெலுங்கு சினிமா, ஹைடெக் ஹைதராபாத் என்று மட்டுமே ஆந்திராவுக்கு வெளியே தெரியும். ஆனால், உழைப்பு, வீரம், பக்தி, எளிமை, நம்பிக்கை, கலையை ரசிப்பது இப்படி எதை எடுத்துக் கொண்டாலுமே எல்லாவற்றிலுமே அதீதம் தான் என்பதை நேரடியாகவே பல தருணங்களில் பார்த்திருக்கிறேன்.

    வைணவம் வடக்கே நாமம் சொல்லும் பக்தி இயக்கமாகப் பரவிற்று. அங்கேயும் பேதங்கள், நாமங்கள் சொல்லும்போது, வழிபடும்போது வருவதில்லை. இங்கே தமிழகத்தில் கொஞ்சசம் சுருதி கம்மிதான். சிறிதுகாலம் முன் வரைக்கும் வடகலை தென்கலை பேதங்களே பெரிதுபடுத்தப்பட்டுப் பெருமாளும், எம்பெருமானாரும் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். இருந்த சின்னச் சின்ன பேதங்களை, ஊத்தி விடுவதற்கென்றே ஒரு தரப்பும் இருந்தது. இப்போது அது கை சலித்துப் போன பிறகு, தென்கலை வடகலை பேதங்களை பார்ப்பதற்கும் யாருமில்லை.

    ஆனாலும், உடையவர் ஏற்படுத்தி விட்டுப் போன நியமனங்களை அப்படியே கைக்கொள்வார் இங்கே யாருமில்லை. அங்கே ஒன்று இங்கே ஒன்றுமாக, மார்கழி பிறந்தால் பஜனை சத்தம் தெருவில் கேட்கும். நாமம் சொல்வதற்குக் கூடக் கூச்சப்படும் நிலை, உள்ளுறைப் பொருளை விளங்கும்படி சொல்லித் தருவார் யாருமில்லாத நிலை தான் கண்ணுக்குத் தெரிகிறது. காலக்ஷேபம் என்று வைணவத்துக்கே உரிய தனிப்பழக்கமான, நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டுப் பொழுதுபோக்குதல் என்பதுமே க்ஷீணித்துக்கொண்டு வருகிறது.

    பழைய முறைகள் எல்லாம் நலிந்து வரும் அதே நேரம், இளைய தலைமுறை, அதுவும் வெளிநாடுகளுக்கு ஜீவனத்துக்காகப் போன இளைஞர்கள் புது நம்பிக்கையாகத் தளிர்த்து வருகிறார்கள். அருகுபோல் வேரோடிக் கிடக்கும் சத்சம்ப்ரதாயத்தைத் தான், உடையவர் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார், எந்நாளும் குறைவில்லை என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவேங்கல அம்மையாரின் விளக்கம் மிக அழகு. இயன்றால் இன்னும் அளியுங்கள். நன்றி.

    ReplyDelete
  5. திருவேங்கலம்மா பெயரை விட்டுவிட்டுப் பின்னூட்டம் இட்டு விட்டேன். அம்மாவின்
    மற்ற உரைகளையும் முடிந்தால் இங்கே அளியுங்கள்.

    ReplyDelete
  6. Maargazhi gets a lustrous glow with your esoteric literary contribution.I've for one enjoy your writings since 2007.Good start "Maargazhi Naathan"(Dhivakar):-)

    ReplyDelete
  7. >>>அதென்னவோ ஆந்திரா தேசத்துப் பக்தி அருமைதான்.பெருமாளிடம் வெறியாகப் பிடித்த பக்தி.
    அந்தக் கோதாவரிதான் அவர்களுக்கு அதைக் கொடுத்தாளோ.
    இல்லை கிருஷ்ணா தான் கொடுத்தானோ.
    உடையவர் பெருமையும், உங்கள் புழக்கடைத் தோட்டமும்,கண்ணனும் அவனுடைய மங்கையும்
    அவர்கள் காதலும்>>>>>

    வல்லிம்மா! இதைப் பற்றி டாக்டர் பிரேமா நந்தகுமார் எழுதிய தனிமடலில், ஆந்திரர்கள்தான் இன்னமும் பாரம்பரிய பக்தியை மறக்காமல் இருப்பதாகவ் பாராட்டியுள்ளார்கள். திருவேங்கலம்மா சமீபத்தில் சிலநாட்கள் இவர்கள் வீட்டில் (ஸ்ரீரங்கத்தில்) தங்கியதைக் குறிப்பிட்ட பிரேமா அவர்கள், தனக்கு ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு எழுதிய திருப்பாவை விளக்க தெலுங்கு உரைகள் அதிகம் பயனளிப்பதாகவும் குறிப்பிட்டிருப்பதை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  8. அண்ணா கண்ணன்,
    நம் திருப்பாவையை இப்படி தெலுங்கரைப் போலவே அழகாக தமிழில் சொல்வது அதிகமாக இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நடைபெறுவதில்லை.
    ஆந்திராவில் தியாகையாவின் கீர்த்தனைகளுக்கு தமிழர் செய்துவரு தொண்டு போல அத்தனை பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம். அது நம் திருப்பாவைக்கு நம் தமிழகத்தில் ஆகக்கூடாது..

    தங்கள் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  9. கவிநயா,
    இது நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்டது. இவர்கள் நம்மாழ்வார் பற்றி சொல்ல கேட்கவேண்டும். அவ்வளவு அருமையாக இருக்கும்.

    திருவேங்கல அம்மையார் போன்றவர்கள் ஆந்திரத்தில் அவதரித்திருப்பது ஆந்திரர்கள் செய்த தவப்பயன்..

    ReplyDelete
  10. >>>பழைய முறைகள் எல்லாம் நலிந்து வரும் அதே நேரம், இளைய தலைமுறை, அதுவும் வெளிநாடுகளுக்கு ஜீவனத்துக்காகப் போன இளைஞர்கள் புது நம்பிக்கையாகத் தளிர்த்து வருகிறார்கள். அருகுபோல் வேரோடிக் கிடக்கும் சத்சம்ப்ரதாயத்தைத் தான், உடையவர் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார், எந்நாளும் குறைவில்லை என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருக்கிறது<<<

    இந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது கிருஷ்ணமூர்த்தி ஐயா!

    ReplyDelete
  11. கண்ணன் நடராசன் said...
    Maargazhi gets a lustrous glow with your esoteric literary contribution.I've for one enjoy your writings since 2007.Good start "Maargazhi Naathan"(Dhivakar):-)

    எனக்கு வேணும்.. இப்படியெல்லாம் இனி எழுதமாட்டேன் (:-

    சென்ற ஞாயிறன்று கலைஞரின் கூட்டத்தில் உங்கள் தந்தையாரின் அருமையான் உரையைக் கேட்டேன். அவரிடமும் பேச சந்தர்ப்பமும் கிடைத்தது. உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

    ReplyDelete
  12. அருமையான விளக்கம் அளித்திருக்கிறார் திருவேங்கலம்மா அவர்கள். இந்தப் பாசுரங்கள் அனைத்துமே அஹோபிலம் சென்ற போது ஆங்காங்கே ஒவ்வொரு நரசிம்மர் கோயிலிலும் கற்பிப்பதைக் காண முடிந்தது. இப்போவும் தினமும் மாலையிலே திருமலை பக்தி சானலிலே பார்க்கமுடியும். விளக்கங்களோடு கற்பித்து கொண்டிருந்தார்கள். இப்போத் தமிழ்நாட்டிலே கோதையைப் பரப்புவது குறைந்துதான் போயிருக்கு. இணையத்தில் பார்க்கும் அளவுக்குக் கூட மற்ற இடங்களில் காணோம். எல்லாம் மெகா சீரியல்கள் செய்த வேலை! :(

    ReplyDelete
  13. கீதாம்மா!

    தெலுங்கிலே பக்தி சானல் என்று நான்கைந்து சானல்கள் இருக்கின்றன. தமிழில் அப்படி இருக்கிறதா என்று தெரியாது. தி.தி.தே சானல் தமிழிலும் அவ்வப்போது குரல் கொடுக்கும் என்பதை அறிவேன். மெகா சீரியல் விடுத்து அந்தச் சமயத்தில் நல்ல தமிழ்ப் பாடல்களைப் புகுத்தும் காலம் தமிழகத்தில் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  14. ஆந்திரா மட்டுமல்ல, கர்நாடகத்தின் மைசூர் பகுதியிலும் மார்கழியில் தமிழில் திருப்பாவை பாடி சேவிக்கும் மரபு உள்ளது. இந்த தெய்வீக இணைப்பு பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி திவாகர் ஐயா.

    தமிழ்நாட்டில் தமிழில் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்று கூக்குரல் இடும் வெறியர்கள் இத்தகைய விஷயங்களைப் பற்றி அறிவதில்லை. அறிந்து கொள்ள முயல்வதும் இல்லை.

    மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம் என்ற எனது பழைய பதிவு ஒன்றிலும் இது பற்றி எழுதியிருக்கிறேன்.

    ஆண்டாள் வழிபாடு வடஇந்திய வைஷ்ணவர்களிடம் கூட பிரபலம். வங்காளம், ம.பி, உ.பி மாநிலங்களில் கூட ’கோதா’ (godha) என்ற பெயரைப் பெண்களுக்கு வைக்கிறார்கள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பெயர் தான் அது.

    ReplyDelete
  15. உங்கள் அனுமதியுடன் கட் அண்ட் பேஸ்ட் (உங்கள் பதிவிலிருந்துதான்)

    "தமிழ் வழிபாடு தழைக்கட்டும், இந்து ஆன்மிகம் செழிக்கட்டும்! தேவாரமும், திவ்வியப் பிரபந்தமும் தெய்வத் தமிழ்ப் பாடல்களும், வேத மந்திரங்களின், சம்ஸ்கிருத சுலோகங்களின் ஒத்திசையோடு சேர்ந்து ஒலிக்கட்டும்! ஆதி முனிவர்களின் மொழி முதல் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் மொழிகள் வரை, உலக மொழிகள் அனைத்திலும் இந்து ஆன்மிகக் கருத்துக்கள் வெள்ளமெனப் பாயட்டும்!" - ஜடாயு.

    ReplyDelete
  16. திவாகர் மிக அருமை. திருவேங்கலம்மாவின் மற்ற விளக்கங்களையும் பதியுங்களேன் . நான் சிறுமியாக இருந்த போது, மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் கோவில்களில் நடக்கும் , அதில் சிறுவர் சிறுமியர்களுக்கு போட்டியும் உண்டு. மதுரையில் ராஜம்மாள் சுந்தரராஜன் இதை அருமையாக நடத்தி கொண்டிருந்தார் , இப்போது உள்ளதா என்று தெரியவில்லை, இருந்தால் குழந்தைகள் கற்க ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  17. Thanks for your comments Shobha! Yes..In school days I too participated in the competitions and got silver coin from Paramachariyaar at Old Mambalam Sankarmutt.

    ReplyDelete
  18. Interesting people Raji. If you happen to see TTD Channel you can view and hear these noble souls talking about Azhwars in Telugu during 1.30 and 2 noon.

    ReplyDelete