Wednesday, December 9, 2009

ஆ. உஷ்.. காரம்.. ரொம்ப ஜாஸ்தி..

ஆவக்காயையும் ஆந்திராவையும் யாராலும் பிரிக்கமுடியாது. மலரும் மணமும் போல என்று கூட சொல்லலாம். ஆவக்காய் ஊறுகாயும் கோங்குரா பச்சடியும் சுவையும், காரமும் கூடியதுதான். சுவையில் மயங்கி முதலில் அதை உண்ணும் தமிழர்கள் அதன் காரத்தில் பிறகு கண்ணீர் விடுவதை பலமுறை கண்டவன் நான். ஆனாலும் விடாப்பிடியாக அந்த ஊறுகாயை உண்டு சுவைத்தே சாப்பாடை முடிப்பார்கள். ‘படு டேஸ்ட் ஊறுகாய், ஆனால் காரம்தான் அதிகம்,’ என்று தங்களுக்கே உரிய பாணியில் ஒரு குறையையும் சொல்லி வைக்கும் நம் தமிழ் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.


நான் முதன் முதலில் விஜயவாடா நகரில் குடியேறிய சமயம், என் நலம் விரும்பிகள் இந்தக் காரவகையறாவைப் பற்றி எச்சரித்துத்தான் அனுப்பினார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக (அல்லது துரதிருஷ்டவசமாக) இந்த இந்த ஊறுகாயும் பச்சடியும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். ஏன் என்றும் எனக்கே தெரியவில்லைதான். அதுவும் ஆரம்பகாலங்களில் சாப்பாடு ஓட்டல்களில் பக்கத்திலே இருப்பவர்கள் மிகுந்த நிதானமாக முதலில் வெற்று அன்னத்தில் ஊறுகாய் விழுது கலந்து நெய்யுடன் சேர்த்து சாப்பிடும அவர்களைப் பார்க்கும்போதே கண்ணில் நீர் வர ஆரம்பிப்பது போல ஒரு உணர்ச்சி தோன்றும். ஆனால் இவை காலாவட்டத்தில் பழக்கமாகிவிட்டது.

தினமும் மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிசத் துண்டு இல்லாத சாப்பாடு என்பது முடியவே முடியாத செயல் போல நினைப்பர். குறைந்த பட்சம் ஒரே ஒரு துண்டு கறியாவது இருந்தால் போதும். சாப்பாடு கடகடவென இறங்கிவிடும். அதைப் போல ஒரு ஆவக்காய் ஊறுகாய் இருந்தால் முழுச் சாப்பாட்டையும் உண்ணமுடியும் என ஆந்திரமக்களில் பலர் எண்ணுவதுண்டு. அதுவும் உண்மைதான். இந்த ஆவக்காய் ஊறுகாய், இங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உணவுவகைகளுக்குமே தொட்டுக் கொள்ள உபயோகிப்பதும் இங்கு உண்டு. ஆவக்காய் இல்லாத வீடும் ஒரு வீடா என்று நினைக்கும் அளவுக்கு ஆந்திராவில் இந்த ஆவக்காய் மக்கள் மணதில், இல்லையில்லை, நாவில் ஊறியிருக்கிறது. அதிகமான காரம் அந்த மணம், ஊறின சுவையோடு கூடிய இந்த ஊறுகாய் எப்படி வழக்கத்தில் இங்கு வந்தது என்பதே ஒரு புதிர்தான். ஆவக்காய் என்றால் கடுகு எண்ணையில் ஊறின காய் என்று பொருள். மாங்காய், கடுகுப் பொடி, பச்சைக் காரம் மற்றும் தேவைக்கு அதிகமாகவே கடுகு எண்ணெய்.. அல்லது நல்லெண்ணெய், சில நாட்களில் சுவையான ஆவக்காய் தயாராகிவிடும்.
(http://food.sulekha.com/avakkai-pickle-id665-14234-recipe.htm)

பொதுவாக ஆந்திராவில் உணவிலிலேயே காரம் அதிகம் உண்டு. அதற்கேற்றாற்போல பூமியும் கந்தக பூமி. சூடு அதிகம். வெய்யிலும் சூடும் காரமும் எப்படி அதிகமோ மழையும் பனியும் சற்றுக் கூடுதல்தான். உணவில் காரச் சுவை அதிகம்தான் என்றாலும் விஜயவாடாவுக்கே உரித்தான பந்தர் லட்டும், காகிநாடா காஜா என்று சொல்லப்படும் இனிப்பும் கூட மிகவும் சுவையானதுதான். காகிநாடா காஜா என்ற பெயர் ஏன் வந்தது என்று பலரை விசாரித்து விட்டேன். ஆட்காட்டி விரல் அளவிலிருந்து அரை அடி வரை நீளமாக உள்ள இனிப்பு இது. அந்த இனிப்பை விரும்பி சாப்பிடுகிறார்களே தவிர யாருக்குமே சரியான வகையில் பெயர்க் காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘பொனுகோமதி கோட்டையா’ எனும் பிராம்மணர்தான் 1900 ஆம் ஆண்டு வாக்கில் இந்த இனிப்பு வகையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதாகவும், இவர் தெனாலியைச் சேர்ந்தவர் என்றும் பிறகு சிறிய அளவில் காகிநாடாவில் முதல் போட்டு இந்த வகை இனிப்பைப் பெரிய அளவில் வியாபாரம் செய்தார் என்றும் அந்தக் கடைக்காரர்கள் காகிநாடாவில் இன்றும் சொல்லிக் கொள்கிறார்கள். மறைந்த முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கு இந்த காகிநாடா காஜா என்றால் பிராணன் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். (அவர் பிராணன் போய் பல்லாண்டுகள் ஆகியும் காகிநாடா காஜாவின் ஆயுள் நன்றாகவே நீடிக்கிறது) எது எப்படியோ இந்த சர்க்கரைப் பாகு நீர் போல உள்ளே ஊற வைத்து செதுக்கப்பட்ட மைதா வகை இனிப்புகள் ரொம்பவுமே பிரபலம்தான்.

ஆந்திராவில் நிறைய நகரங்கள் எதிரும் புதிருமாக, பழைமையும் புதுமையாகக் காணக்கிடைக்கும். உதாரணமாக விஜயவாடா நகரத்தைப் பார்த்தோமானால் சில விஷயங்கள் தெரியும். (இதைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை கூட எழுதியுள்ளேன்)
விஜயவாடா என்றல்ல, மாநிலத்தின் பல நகரங்களில் இப்படி ஒரு காட்சியைக் காணலாம். ஒரு உதாரணத்துக்குத்தான் விஜயவாடா.

இப்படி எதிரும் புதிருமாகக் காணப்படும் இந்த ஆந்திர நகரங்களில் ஆத்திகமும் நாத்திகமும் கூட சரிசமமான அளவில் உண்டு என்பதைப் போல ஒரு தோற்றம் வரும். சபரிமலையில் வரும் பக்தர்களின் கணக்கு ஒன்று எடுத்தால் மொத்த பக்தர்களில் பாதிப்பேர் ஆந்திராவிலிருந்துதான் ஒவ்வொரு வருஷமும் வருவார்கள். தமிழ்நாட்டு சாமியாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டு சாமியாராக இருந்தாலும், அவர்களுக்கு சிஷ்யகோடிகள் அதிக அளவில் தேவை என்றால், இதோ யாம் உள்ளோம் என்ற அளவில் ஆந்திரத்து பக்தர்கள் முன்னிற்பர். ஏன், விஜயவாடாவில் இன்றைய கனகதுர்கா ஆலயத்துக்கு சபரிமலை விரதம் போல விரதம் இருந்து செவ்வாடை பூண்டு பவானி என்று பெயர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம் வருகிறது. (தற்சமயம் ஐந்து நாட்கள் பவானி விரத முடிப்பு திருவிழாவுக்கு பத்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று ஆலய அதிகாரி டி.வி பேட்டி கொடுத்தார்) ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் கோட்டையாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் ஆந்திராவில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே போல, எவ்வித மத, கடவுள் நம்பிக்கையுமில்லாத நக்சலைட்டுகள் என சொல்லப்படும் மாவோயிஸ்டுகளுக்கும் கூட ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு உண்டு. ராயலசீமா நல்லமலைப் பகுதியும் (ராஜசேகர ரெட்டி விபத்துக்குள்ளான இடம்), தெலுங்கானா பத்ராசலம் அருகே உள்ள காடுகள் மற்றும் விசாகப்பட்டினம் மேற்கே உள்ள வனாந்திரங்கள் எல்லாமே மறைமுகமாக நக்ஸலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பதாக இன்றும் சொல்வர். ஆனால் இவர்களால் பொதுமக்களுக்கு பிரச்னை அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.

ஆவக்காய் ஆந்திரா காரம்தான். ஆனால் உள்ளே புகுந்தால் எத்தனை விஷயங்கள் தெரியவருகிறது.. கண்களில் அப்படியே கண்ணீர் வந்தாலும் அது கூட ஒரு சுகானுபத்தில் வருவதுதானே..

17 comments:

  1. ஆவக்காயில் ஊறின கொண்டைக்கடலையைப் போல் பதிவு! ஆனாலும் ஊறுகாய் என்றால் குஜராத்தியருக்குப் பின் தான் மற்ற மாநிலத்தவர்கள். நம்ம ஊர் அஞ்சறைப்பெட்டி மாதிரி ஏழரைப் பெட்டி வைச்சிருப்பாங்க விதவிதமான ஊறுகாய்களுக்கு. வெல்லம் சேர்த்த, சர்க்கரை சேர்த்த ஊறுகாய்கள் சுவையிலேயே சப்பாத்திகளைச் சாப்பிடலாம், வெறும் பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டே சாப்பிடறவங்களும் உண்டு. :D நல்ல மலரும் நினைவுகள் கொண்ட பதிவு.

    ReplyDelete
  2. arumai arumai. naakku ooruthu.

    vj

    ReplyDelete
  3. கடுகு உபயோகிப்பதை வழக்கத்தில் கொண்டு வந்தவர்கள் குஜராத்திகள்

    அதே போல ஊறுகாயிலும் கார வகைகளும், பச்சை மிளகாயும் அதிகமாக உபயோகிப்பவர்கள் குஜராத்திகள்

    தெலுங்கர்களும் அதிகமாக காரம் உபயோகிப்பர்

    அவர்கள் கோங்கூரா சட்னிக்கு பெயர் வாங்கியவர்கள்

    ஆனால் எனக்குத்தெரிந்து ஆவக்காய் தென்னிந்திய வைணவக் குடும்பகளினால்தான் அதிகம் புழக்கத்துக்கு வந்தது

    எங்கள் குடும்பம் ஆவக்காய் ஊறுகாய் நிபுணர்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  4. பதிவு பசியை கிளப்பிருச்சு. இருங்க, போய் ஆவக்காயும் தயிர் மம்மம்மும் சாப்பிட்டு வரேன்!

    ReplyDelete
  5. கீதாம்மா.. குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு), தொட்டுக்கொள்ள நம்ம ஆவக்காய் மாதிரி ஆகுமா என்று சந்தேகமே.. அத்தோடு அவர்கள் மெயின் உணவு (பல் உடைய கடிக்கும்) வகைகளுக்கு அந்த ஊறுகாய் ஒத்துப்போகும்.. நம் வண்டிக்காரன் சாப்பாட்டுக்கு ஆவக்காய்தான் சரியானது.

    ReplyDelete
  6. குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு)//

    குஜராத்தி ஊறுகாய்கள் சாப்பிட்டதில்லைனு புரியுது. எல்லாமே முக்கியமாய் ஊறுகாய்கள் தித்திப்பு இல்லை, தித்திப்புப் போடும் ஊறுகாய்கள் தனி வகைகள். அறுபது வகைகளுக்கு மேல் குஜராத்தி ஊறுகாய்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  7. >>எனக்குத்தெரிந்து ஆவக்காய் தென்னிந்திய வைணவக் குடும்பகளினால்தான் அதிகம் புழக்கத்துக்கு வந்தது<<

    தமிழ்த்தேனியின் கூற்று உண்மையாக இருக்கலாம். தமிழக வைணவக்குடும்பங்கள் பல கால கட்டங்களில் ஆந்திராவில் குடியேறியதாக பல தகவல்கள் உண்டு. சாத்லூர் என்றொரு கிராமம், குண்டூர் ஜில்லாவில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த வைணவப்பெருமகன், சாத்லூரு கோபாலகிருஷ்ணா என்பவர்தான் சிம்மாசலம் கோயில் தலைமைப் பாடகர் (ஆழ்வார் பாடல்கள்)இவரைப் போல பல குடும்பங்கள் கோயில் சேவைக்காக தமிழகத்திலிருந்து குடி பெயர்ந்ததாக நேரடியாக சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  8. விஜய்
    அதான் ப்ரியா ஆவக்காய் சிங்கப்பூர்ல கிடைக்குதே.. பேரும் ஒத்துப்போறுதில்லே

    ReplyDelete
  9. கவிநயா,
    கண்ல தண்ணீ வந்ததா.. வரல்லைன்னா அது எங்க ஊர் ஊறுகாய் இல்லே

    ReplyDelete
  10. >>>குஜராத்தி ஊறுகாய்கள் சாப்பிட்டதில்லைனு புரியுது. எல்லாமே முக்கியமாய் ஊறுகாய்கள் தித்திப்பு இல்லை, தித்திப்புப் போடும் ஊறுகாய்கள் தனி வகைகள். அறுபது வகைகளுக்கு மேல் குஜராத்தி ஊறுகாய்கள் இருக்கின்றன<<<

    அறுபது வகையா.. !!!!

    ReplyDelete
  11. அருமை, அருமை...

    விஜய்க்கு நாக்கு ஊறுவது போல் எனக்கு ஆகக் கூடாது என்று விஜயவாடவில் ஆர்டர் செய்து ஆவக்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய் எல்லாம் ஐந்து மாதங்களுக்கு வாங்கி வந்துவிட்டேன்.

    எங்க ஆஃபீஸ் ஃபுல்லா என்சாய் பண்றாங்கோ...

    ReplyDelete
  12. சதீஷ்
    காகிநாடா காஜா கூட அங்கே கிடைக்கும்.. நம் அடுத்தவீட்டார் நிறைய பேர் அங்கிருப்பார்களே.. விடுவார்களா?

    ReplyDelete
  13. எதிரும் புதிருமான குணாதிசயங்களை, ஊறுகாய், லட்டு இனிப்பு என்று சொல்லிவிட்டு, ஆந்திராவின் குணாதிசயத்தைச் சொன்ன பொது, வேறு சில விஷயங்களையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இப்போது தெலுங்கானா பிரச்சினை வேறு பற்றிக் கொண்டு எரிகிறதா, சூடும் தாங்கவில்லை.

    கடுமையான உழைப்பாளிகள், எளிமையானவர்கள், மிக நேர்மையானவர்கள் என்று ஒரு பெரும்பகுதி! எண்டமூரி வீரேந்திரநாத் கதைகளில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, மரண ஹோமம்! எளிய மக்கள் தலையில் ஏறிக் காசு மிதிக்கும் கொடூரம், நிஜாம்களுக்கு முன்னாலேயே இருந்ததா, நிஜாம் ஆட்சியில் தான் பெரிதாக வளர்ந்ததா என்பதை அவ்வளவு சுலபமாக எல்லோரும் தெரிந்துகொள்ள முடியாதபடிக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

    'Punch' comment

    ReplyDelete
  16. ஏற்க்கனவே ஆந்திரமாநில உட்தகராறு எங்களை வாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உன் ஆவக்காய், ஆந்திர x குஜராத்தி சண்டையை ஆரம்பிக்காமல் இருந்தால் நல்லது.

    ஆவக்காயும், காஜாவும் அருமை. அடுத்த சந்திப்பில் காஜாவுடன் வரவும்.

    ReplyDelete