’மற்றவர் துயரத்தை உணர்ந்து வருந்துபவன், அந்தத் துயரத்தைப் போக எவன் உதவி புரிகிறானோ அவனே வைணவன்’ என உடையவர் பற்றிய வரலாற்றில் உடையவர் சொல்லியதாக வரும்.
ஒருமுறை ஆந்திரத்து ராமானுஜர் என்று அடியேன் அன்புடன் அழைக்கும் (தற்சமயம் வைகுண்டவாசி) ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இப்போதும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
“நான் சின்ன வயதில் என்னை ஸ்ரீவைணவன் என்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேனே தவிர ஒரு பிராம்மண குலத்தில் பிறந்தவனாக நினைத்துப் பார்க்கக் கூட இல்லை.”
ஆந்திரத்தைப் பொறுத்தவரை அந்த உத்தமர் சொன்னது மிகப் பொருத்தமானதுதான். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஜாதிப்பிரிவினைகளே அல்லாத தனிக் குழுமமாகத்தான் தங்களை சமூகத்துக்கு இங்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஜாதி என்பதே ஒவ்வொருவர் செய்யும் தொழிலால வந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அது ஒரு பிரிவினையை சமூகத்தில் கொண்டுவந்ததும், அந்த ஜாதிப்பிரிவினை சமூகத்தையே நாசமாக்கிக் கொண்டிருப்பதையுமே காலம் காலமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் சொல்லப்போனால் இப்படிப்பட்ட காலத்தில் ஆந்திரத்தில் புரட்சிகரமாக இங்கு ஒரு ஜாதிக்கலவையே ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரு பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஜாதிக்கலவையில் மூன்று முக்கிய சாதிகள், பிராம்மணர், வைசியர், சத்திரியர் இந்த மூவரும் கலந்து ஸ்ரீவைஷ்ணவராகி, தங்களை த்ரைவர்க்கம் என்றே அழைத்துக் கொண்டனர். இவர்கள் எல்லோருமே நம் தமிழகத்தில் சாதிகள் ஒழிய பாடுபட்ட ஸ்ரீ ராமானுஜர் அடி தொட்டி வழி படுபவர்கள், அவரது பெயரில் ராமானுஜ கூடம் நிறுவி அங்கு திராவிட வேதமான நம்மாழ்வார் பாடல்களையும், ஆண்டாளின் தீந்தமிழ்ப் பாடல்களையும் தினசரி பாராயணம் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு தாய்மொழி தெலுங்கானாலும், தெய்வமொழி என்னவோ தமிழ்தான்.
ஒருமுறை எனக்கும் பெரியவர் சம்பத்துக்கும் இங்குள்ள ராமானுஜகூடத்தில் வைகாசி விசாகத் திருநாளன்று நம்மாழ்வார் விழாவில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அங்கு பூஜை செய்யும் அழகு, ஆழ்வார் பாடல்களை நிதானமாகப் பாடும் பாங்கு (இப்போதெல்லாம் தமிழகத்தில் பெருமாள் கோயில்களில் அவசரம் அவசரமாக ஆழ்வார் பாசுரங்கள் சொல்லப்படும் வேகம் பார்க்கவேண்டுமே!) இவைகளையெல்லாம் கேட்டபோதும், நம் கொஞ்சுதமிழ் அவர்கள் வாயால் பாடப்படும் போதும் எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தி விட்டனர். அவர்கள் வீட்டு பெண்’மணி’கள் ஆண்டாள் திருப்பாவை மிக அழகாக பாடுவார்கள். கோதையின் தீந்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும் அவர்களுக்கு மனப்பாடம். அதனால் ஒவ்வொரு மார்கழியன்றும் ஒருநாள் அவர்களைக் கூப்பிட்டு தமிழ்மன்றத்தில் தமிழ்பாட அழைப்பதும் உண்டு.
சரி, ஸ்ரீவைஷ்ணவம் ஆந்திரத்துக்கு எப்போது வந்திருக்கும்?. நிச்சயம் ராமானுஜருக்கும் முந்தையகாலத்தில்தான் தமிழகத்திலிருந்து இங்கு வந்தது என்றே சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏராளமான வைஷ்ணவக்குடும்பங்கள் இங்கு குடியேறியதாக திரு பி.சேஷகிரிராவ் தனது ‘ஆந்திரா சமூக சரித்திரம்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஸ்ரீவிஷ்ணு பரப்பிரம்ம தத்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆழ்வார்களால் ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாசுரங்கள் பாடப்பட்டாலும், வைணவம் மதநெறியில் கொண்டுசெல்லப்பட்டது என்பது ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டின் கடைசியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பித்திலும்தான் என்று சொல்லலாம். அந்தச் சமயத்தில் தோன்றிய நாதமுனிகள் வைணவமதத்தை மக்களிடையே கொண்டுசென்ற மிகப் பெரிய ஆச்சாரியார். அவரின் சீடர்கள்தான் திராவிடமெங்கும் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வைஷ்ணவமதத்தை ஆங்காங்கே விதைத்தவர்கள். (இப்படிப் பட்ட வைஷ்ணவர்களைப் பற்றிய தகவல் இன்றைய பாபட்லாவில் (குண்டூர் அருகே) கிடைத்த கல்வெட்டின் மூலம் தெரிகின்றது – AR No.322 of 1899 and AR no.298C mentioning in sanscrit that four vaishnava Brahmins fetched water. The period is 1023 AD) இந்த விதைதான் அடுத்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு உடையவர் ராமானுஜர் இந்த இடங்களில் வந்தபோதெல்லாம் வைஷ்ணவம் மரமாக வளர்க்கப்பட பெரிதும் உதவியது. முதலில் ஆங்காங்கே கட்டப்பட்ட பெருமாள் கோவில்களில் சேவைக்காக வந்தவர்கள் இவர்கள் என பொன்னூரில் (இதுவும் குண்டூர் அருகே உள்ள இடம்) உள்ள இன்னொரு கல்வெட்டு சொல்கின்றது. ஆக ஆந்திர வைஷ்ணவம் என்பதின் வேர் அதன் அடுத்த வீடான தமிழகம்தான்.

இந்த குண்டூர் மாவட்டத்தில்தான் கிருஷ்ணை நதி தென்கரையில் உண்டவல்லி குகைக் கோயில் உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த இந்த உண்டவல்லி குகைக் கோயில் மிகப்பழையதுதான் என்றாலும் காலம் காலமாக் அங்கு இருந்த ராஜாக்கள் புதிப்பித்துக் கொண்டோ அல்லது புதிதாக சேர்த்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். நரசிம்ம சுவாமி கோயில்கள் நிறைந்த இடம் கூட இதுதான். விஷ்ணு மூர்த்தி ஆதிசேடன் மீது சயனகோலத்தில் வைகுண்டத்தில் இருந்த காட்சியை அப்படியே சிற்பிகள் அற்புதமான முறையில் செதுக்கி வைத்துள்ளனர். விஷ்ணுவின் இரண்டு வேறுபட்ட முக்கிய அவதாரங்களான வாமன, திருவிக்கிரம சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.


பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு ஆந்திர வைணவத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பதினைந்தாம் நூற்றாண்டில் மிகபெரிய வளர்ச்சியை விஜயநகர ராஜாவான செல்லப்ப நரசிம்மன் மூலமாக கண்ட பிராந்தியம் கூட இதுதான். பிறகு வந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன்னை வைஷ்ணவராகவே உலகுக்கு அறிவித்துக் கொண்டு, வைஷ்ணவ வரலாறாக தெலுங்கில் ‘ஆ முக்த மால்யதா’ என்ற காவியம் படைத்தவர். ’ஆ முக்த மால்யதா’ தமிழிலிருந்து வந்த வைணவத்தின் சரித்திரம் சொல்லும் நூல்.
திருப்பதி அருகே சந்திரகிரி கோட்டையில் கந்தாடை அய்யங்கார் என்பவர் விஜயநகர ராஜாவுக்கு அந்தச் ச்மயத்தில் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன. பர்டன் ஸ்டெயின் எழுதிய ‘விஜயநகரம்’ புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது. ராஜ மரியாதை பெற்று வந்த வைணவர்களுக்கு அய்யங்கார் என்று அழைக்கும் விவரங்கள் ஏராளமாக விஜயநகர நாயக்கர் காலத்து எழுத்துகளில் காணப்படுகின்றன. எப்படி சோழர்கள் காலத்தில் ’பிரும்மராயர்’ எனும் பட்டம் அமைச்சுப் பணி செய்யும் பிராம்மணர்களுக்கு ஏற்பட்டதோ, அதே போல விஜயநகர அரசர்கள் காலத்தில் ராஜகாரியம் அல்லது குருஸ்தானத்தில் உள்ள வைஷ்ணவ பிராம்மணர்களுக்கு இந்த தெலுங்கு மரியாதைச் சொல் சேர்ந்திருக்கலாம். எல்லாப்பெயர்களும் காலப்போக்குக்கு ஏற்றவாறு கொண்டுள்ள மாற்றம்தான் வைஷ்ணவர்களுக்கு ஆந்திரம் மூலமாக வந்த மாற்றமாகவும் கொள்ளலாம்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 15, 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்குதான் தமிழகம் உள்ளிட்ட தென்னகத்தின் முக்கியப்பகுதிகளில் ஆட்சி மொழி.
அதே சமயத்தில் ஆந்திராவில் தமிழ்நாட்டு வைஷ்ணவம் பரவி ஆயிரம் ஆண்டுகளாக செழித்து வரும் நிலையை இந்தச் சமயத்தில் நம் கோதை நாச்சியார் இங்கு வந்து பார்த்தால் ‘வாரணம் ஆயிரம்’ பாடலோடு ‘வைணவம் ஆயிரம்’ என ஆரம்பித்து பாடுவாளோ என்னவோ..