Saturday, November 27, 2010

விசாகேஸ்வரா.. மயில்வேலவனே .. முருகா.. சுப்ரமணியா

முருகன் தமிழ்க்கடவுள் என்பதை சங்ககாலம் முதலே நாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டு வருகிறோம். செந்திலாண்டவனே குமரிக்கண்டத்தின் கண்கண்ட தெய்வம் என சில ஆய்வாளர்களும் சொல்லி வருகின்றனர். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் அது முருகன் என்ற முதன்மையிலிருந்துதான் ஆரம்பமானது என்பதாக பெருமையோடு சொல்லும் முருகபக்தர்கள் அநேகர். தமிழன் எங்கெல்லாம் காடு மலை க்டந்தும் கடல்கடந்தும் சென்றாலும் முருகனை தன் நெஞ்சத்துள் மட்டுமல்லாமல் வெளியேயும் அவனுக்கு கோயில் அமைத்து காலம் காலமாக வழிபடுவது புதிய செய்தியுமல்ல. முருகனே முழுமுதற்கடவுள், அவனே தாயாய், தந்தையாய், மாமனாய், வேறு பல ரூப விகற்பதாய், கூறறியதாய் மாறி மாறி உலகெங்கும் ஆட்சி செய்து வருவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் விலாவாரியாக நமக்கு விவரிக்கும். முருகன் என்ற ஒரு சொல்லில் உலகில் அசையும் அசையா அத்தனையுமே அடக்கம் என்பதாக திருப்புகழ் பாடும் பாசுரங்களை எத்தனையோ சித்தர்கள் தமிழில் எழுதி வைத்திருக்கின்றனர். முருகா என்று ஓதுவார்முன் வல்வினையும் வருத்தும் கிரகமும் எதிர்தான் நிற்குமோ என்று நாம் நிதமும் முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறோம். உலகத்தின் ஓங்காரமந்திரமாக ஓம் எனும் பிரவணத்தைக் கொடுத்து தந்தைக்கே குருவாய் உருமாறி அந்த ஓங்காரமந்திரத்துள் உலகத்தையே அருளாட்சி செய்த முருகனை போற்றாத புராணங்களே இல்லை எனச் சொல்லிவிடலாம். காளிதாசனை மிகவும் கவர்ந்தவள் காளி என்றால் அந்தக் காளியின் புத்திரன் முருகனோ அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டதால் அல்லவோ குமாரசம்பவம் எனும் அருமையான காவியம் நம்க்குக் கிடைத்தது.

வடநாடுகளில் குமாரசுவாமி எனவும் ஸ்கந்தன் எனவும் ஷண்முகம் எனவும், கார்த்திகேயன் எனவும் மனதார பக்தர்களால் ஓதப்படும் முருகனை நாம் முருகா என்று ஓதும்போது கிடைக்கும் இன்பமே தனிதான். முருகநாமம் நம் தமிழருக்கு என்றுமே ஆனந்தம் தரக்கூடியதுதான். நாம் முருகா என்று சொல்லிவிட்டு மனதில் அவனை ஒரு கணம் நினைத்து அதையும் உள்ளுக்குள் உணரும் தருணம் ஏற்படும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை ஏது,,

அப்படிப்பட்ட முருகனை இந்த ஆந்திரதேசமும் நிச்சயமாக கவர்ந்திருக்கவேண்டும்தான். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார். விஜயவாடா இந்திரகிலாத்திரி மலையில்தான் தனிக்கோயில் கொண்ட முருகனை அடியேன் முதன் முதலாக சந்தித்தேன்.. (1978) என் மகிழ்ச்சியில் அவனைத் தமிழ்க்கடலாக பார்த்ததால் அந்தக் கோயில் மலைப்பாறையில் ‘அருள்மிகு வள்ளி தெய்வயானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம்’ என வெள்ளைப் பெயிண்டால் தமிழில் எழுதவைத்தது. அதனால் எழுந்த சில பரபரப்புகள் அதன் பிறகு நடந்த கோலத்தையும், தகராறுகளையும் ஏற்கனவே ஒரு பதிவில் (வம்சதாராவில்) எழுதி இருக்கிறேன். முருகன் அவன் திருவுருவைப் பார்க்கும்போதே உள்ளம் சிலிர்சிலிர்க்கும். அவன் அப்படித்தான். அதுவும் உரிமையோடு அவனை சொந்தம் கொண்டாடுவோரை அவன் எப்போதும் கைவிடுவதே இல்லை என்பதை அங்கு நேரிலேயே அனுபவித்தேன்.

ஆனால் முருகனின் ஆந்திரதேசத்து வரலாறு மிக மிகப் பழையானது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட பஞ்சாராமம் (வேங்கியில் ஐந்து இடங்களில் சிவனுக்காக எடுக்கப்பட்ட கற்கோயில்) திருக்கோயில்களில் முருகனுக்கு சிறப்பிடம் உண்டு. சாமல்கோட் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிவஸ்தலம் குமாரராமம் திருக்கோயில் என்றே இன்னமும் அழைக்கப்படுவது மிகவும் விசேஷன். ஏனைய நான்கு திருக்கோயில்களில் குமரனுக்கு தனி சந்நிதி உண்டு. இவை கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கழித்து முதல் கலிங்கப் போரில் கலந்துகொண்ட விக்கிரம சோழன் 1100 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கீழைக்கோடியில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோயிலில் ஒரு சந்நிதி புதிதாக சேர்க்கவைத்து அங்கு முருகனை பிரதிஷ்டை செய்வித்ததாக ஒட்டக்கூத்தர் பாடல் மூலம் தெரியவரும். அந்த முருகன் கையில் ஒரு கொம்புடன் ஔவைக்கு தரிசனம் தந்தவிதமான கோலத்துடன் (சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தமிழ் மூதாட்டியை ஒரு கலக்கு கலக்கிய அந்த சுட்டிப் பையன் போலவே) இருக்கிறான். மேகங்கள் மேலே மூடிக்கொண்டிருக்கும் ஒரு அழகான பகல் பொழுதில் சின்ன சின்ன மழைத்துளிகள் மேலே பட பட அதை அப்படியே தலைமேல ஆனந்தமாக வாங்கிகொண்டே அந்த அழகனை அப்படியே மனதுக்குள்ளே படம் பிடித்துக்கொண்டதை மறக்கமுடியாதுதான்.

இரண்டாம் கலிங்கப்போர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததை நம் தீந்தமிழ் கலிங்கத்துப் பரணி ஒன்றே பறை சாட்டினாலும் அந்தப் படையை வெற்றிகரமாக முடித்து விட்டு குலோத்துங்க அரசன் கட்டளையின் பேரில் இன்றைய விசாகப்பட்டினத்துப் பிராந்தியத்தே கடலருகே முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித்ததாகவும், விசாகை நட்சிரத்துக்கு உரியவனான முருகனுக்கு விசாகேஸ்வரன் என நாமமிட்டதாகவும் எத்தனையோ செய்திகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

இங்குள்ள கடலோரப்பகுதிகள் சற்று விசித்திரமானவை. கடல் அரிப்புகள் ஒருகாலத்தில் மிக அதிகமான அளவில் நிலத்தை அழித்து ஊருக்குள் நீர் புகுந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை இங்குள்ள நில அமைப்பைக் கொண்டே எத்தனையோ அறிஞர்கள் கட்டுரை வடித்துள்ளனர். காலவட்டத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அப்போதைய கடலோரக் கோயில், முருகனுக்காக தமிழரசனால் எழுப்பப்பட்ட கற்கோயில் கடல் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரு நரசய்யா போன்ற கடல்சார்அறிஞர்கள் கூட கூறி வருகிறார்கள். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இந்தக் கடல்சார் கழகத்தில் ஒரு பேராசிரியர் கங்காதர் என்று பெயர், அவருக்கு நிச்சயமான நம்பிக்கை, இந்த விசாகேஸ்வரர் கோயில் கடல் கொண்ட கோயில்தான், எப்படியும் மீட்டு விடுவோம் என்று அவ்வப்போது சபைகளில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவருபவர். திரு கங்காதரரின் முயற்சியால் இந்திய கடற்படையில் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு ஒரு சில வாரங்கள் கூட இந்தத் தேடல் முயற்சி செய்யப்பட்டது.

கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டர் சுரேஷ்குமார் மிகச் சிறந்த ஆழ்கடல் வீரர். தமிழர். அவர் இந்தக் குழுவில் மிக ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். அதுவும் நம் தமிழ்க்கடவுள் முருகன் அவன் கோயிலுக்காக தேடுகிறோம் என்பதில் அவருக்கு படு உற்சாகமாம். சமீபத்தில் சுரேஷ் குமாரை எதேச்சையாகப் பார்த்துப் பேசியபோதுதான் அவரும் கலந்துகொண்டது எனக்குத் தெரியவந்தது. ஆனால் ’இலக்கு’ இல்லாமல் தேடியதால் முயற்சி வீணானது சார்.. என்றார்.

ஆனாலும் விசாகப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயரைக் கொண்ட இந்த நகரில் நிச்சயமாக விசாகேஸ்வரனின் கோயில் இருந்ததுதான் காரணப்பெயர் என்கின்றனர் நகரத்துப் பெரிசுகள்.
என்றாலும் ஒருநாள் விசாகேஸ்வரன் நிச்சயம் நம் மீது கருணை காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான் என்று நம்புபவர்களும் நிறைய உண்டு.

அந்த விசாகேஸ்வரன் வராவிட்டால் என்ன, இல்லை அவன் இங்கு நகரத்துக்கு வரும் வரை என்னைப் பாருங்கள் என்று இன்னொரு முருகன் இங்கே நகர மக்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறான். சங்கரமடம் அமைந்த வளாகத்தில் தனியே தனக்கென ஒரு கோயில் அமைத்துக் கொண்டு மயில் வாகனனாகக் காட்சி தருபவன். ம்யிலோடும் வேலும் சேரும்போது அவனுடைய காட்சி கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிமையாக இருப்பதால் அவனுக்கு ‘மயில்வேலவன்’ எனப் பெயர் சூட்டி அந்தப் பெயரிலேயே அவனைப் பூசை செய்து வருகிறேன். மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். செவ்வாய் நாயகனான மயில்வேலவனுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் நடக்கும் அபிஷேகங்கள் முன்னூறைத் தாண்டிவிடுகின்றன. அப்படியும் எனக்கும் அவனுக்கும் உள்ள உறவே தனி.. ’உன்னையன்றி எனக்கு யார் முருகா’ என்று ’சோப்’ போட்டுக் கொண்டே போவதால் ஒருவேளை அவன் மயங்கி விட்டதைப் போல காட்சி தந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள உள்ளார்ந்த இணைப்பை வர்ணிக்க முடியாதுதான். அவனுக்கு நிகர் அவன் ஒருவனேதான் அல்லவோ.. நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,, அதுவும் அருணையார் சொல்லித் தந்ததுதான். எப்போதும் எந்தச் சமயத்திலும் அவன் நாமம எம் நாவில் உணர்வோடு இருக்க அவன் அருள் புரிய வேண்டும்.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

Thursday, November 4, 2010

November One

நவம்பர் ஒன்று என்பது இது நாள் வரை ஆந்திர தேசத்தில் மிகப் பிரபலமாக இருந்ததுதான். ஆனால் எப்போது தெலுங்கானா கோஷம் வலுப்பெற்றதோ, அந்த நவம்பர் ஒன்று இன்று வலுவிழந்துகொண்டே வருகிறது.

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் இந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் அதிகாரபூர்வமாக செயல்பட ஆரம்பித்தன. தமிழ்நாடு ‘மெட்ராஸ் மாநிலம்’ எனும் பெயரில் மிகப் பெரிய மாநிலமாக உண்மையான திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொஞ்சம் ஒரியா என ஆறு மொழிகளும் பேசப்படும் திராவிட நிலமாக இருந்து வந்ததைப் பொறுக்காமல், அவரவர்களுக்கு, அவரவர் மொழிகளுக்கு அவரவர் நிலம் தேவை என்று பிரிக்கப்பட்ட நாள்.

1953/56 வரை நம் மாநிலம் உண்மையான திராவிட தேசமாக இருந்து வந்தது எவ்வளவு தூரம் நம் இளைய தலைமுறைக்குத் தெரியும் என்பது கண்டிபிடிப்பது சற்று கஷ்டம்தான். ஒரு கால கட்டத்தில் தெலுங்கும் தமிழும் கோலோச்சி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டு காதல் பாட்டு பாடிக் கொண்டு இன்பமாய் பவனி வந்த நகரம்தான் சென்னை என்பது கூட தெரியுமோ தெரியாதோ.

ஆனாலும் யார் கண் பட்டதோ.. அல்லது தெலுங்கருக்கே தாங்கள் படும் இன்பம் கசந்ததோ என்னவோ, மொழி வாரியாகப் பிரித்துத் தா என்று கோஷம் போட்டு, ஒரு சிலர் உயிர்த்தியாகம் (நம் ஊரில் எல்லாம் உயிர்களின் விலை ரொம்ப சீப்) செய்து, ராஜாஜிக்கு அந்தச் சமயத்தில் எதிராக இருந்த ஸ்ரீமான் நேரு தான் நேராக மூதறிஞருடன் மோதாமல் காமராஜர் மூலமாக மோதி ஒப்புதல் அளித்து, எப்படியோ ஒரு கமிட்டி போட்டு, அந்தக் கமிட்டி மூலம மொழி வாரி மாநிலங்கள் என்று வாங்கியும் விட்டார்கள். ஐம்பத்திநான்கு ஆண்டுகள் ஓடியே விட்டன (கூடவே என் வயதோடு).

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையோ, விவசாய உற்பத்தி வளர்ச்சியோ இந்த மொழிவாரி மாநிலங்கள் மெட்ராஸ் மாநிலத்திலிருந்து பிரிந்ததனால் எந்த சிறு அளவும் பாதிக்கவில்லை என்பது மிகப் பெரிய உண்மைதான். ஆனால் ஆந்திராவின் நிலைமை அப்படி அல்ல. என்று பிரிந்தார்களோ, அன்றிலிருந்து அவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான்.

ஆந்திரா நீர்வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட பகுதி, இயற்கை அழகு கொஞ்சும் பிரதேசங்கள் இங்கு அதிகம். பொதுவாகவே மக்களில் பலர் அன்புக்கு அடிமை கொள்பவர்கள். இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிப் போய் வாழ்பவர்கள்.

ஆந்திராவை மூன்று பகுதிகாளாக எப்போதுமே பார்த்துப் பழகிவிட்டவர்கள் ஆந்திரர்கள். ராயலசீமா என தென் மேற்கு ஆந்திராவையும், கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்த்து, கடற்கரை ஆந்திரா எனவும் வடக்குப் பகுதியை தெலுங்கானா என்றும் எப்போதும் பேசி வருபவர்கள், இந்தப் பேச்சு நாளடைவில் இன்னொரு மிகப் பெரிய பிரிவினைக்கு வழி வகுக்கும் எனத் தெரியாமல் காலத்தைக் கழித்து விட்டவர்கள்.

இன்னும் இரண்டு மாதங்கள்தாம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலுங்கானாவுக்காக நிச்சயம் சாதகமாகத்தான் பரிந்துரைக்கும்.. எப்போது சிதம்பரனார் சென்ற ஆண்டுக் கடைசியில் தெலுங்கானா வரும், என்று முதலில் அறிவித்து வாபஸ் வாங்கினாரோ, அப்போதே மத்திய அரசு தெலுங்கானாவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிந்த ரகசியம்தான்.

ஆந்திரர்கள் அதாவது கடற்கரை மற்றும் ராயலசீமா மக்கள் மட்டும் எல்லோரும் ஒன்றாய்தான் இருக்கவேண்டும் என்று வெளியே பேசினாலும் பிரிவு உறுதி என்பதில் மட்டும் நிச்சயமாகத்தான் இருக்கிறார்கள். வெளியே அப்படி பிரிவு பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது, தெலுங்கானா பிரிந்துபோனால் பிரியட்டும், ஆனால் ஹைதராபாத் நிச்சயமாக எங்களுக்கும் தேவை என்பதிலும் கவனமாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

மொழிவாரி மாநிலம் என்ற கோஷத்தில் பெறப்பட்ட தேசம் இரண்டாகப் போவது ஏறத்தாழ நிச்சயமாக்கப்பட்டதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஹைதராபாத் விஷயம் கொஞ்சம் சாதகமாக அமையப் பேசித் தீர்த்துக் கொண்டால் இன்னமும் நலம் என்றே இரு தரப்பினரும் நினைக்கிறார்கள். ஆக ஒரே மொழி பேசும் மாநிலம் இரண்டாகப் போகிறது. இது ஒருவிதத்தில் வேதனைக்குரியதுதான். பிரிவு என்ற சொல்லே வேதனைதான்.

பிரிவு என மனதால் முடிவெடுக்கும்போது, வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த வருடம் நவம்பர் ஒன்றாம் நாளைக் கொண்டாடவே கூடாது என்று தெலுங்கானாக் காரர்கள் நிர்ப்பந்திக்க, ஏனைய ஆந்திரர்கள் இதைப் பற்றி எதிர்த்துப் பேசாமல் இருக்க, அரசாங்கம் மட்டும் ஏனோ தானோ என்று அந்த ஒன்றாம் நாளைக் கொண்டாடியது. ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நவம்பர் ஒன்று என்றால் இந்த மாநிலமே கலகலக்கும். அரசாங்க விழாவில் ஆளும் தலைவர்கள் ஆடம்பரமாக வார்த்தைகளை அள்ளி வீச ஒரு வாய்ப்பாகக் கருதுவர். இப்போது இவையெல்லாம் மிஸ்ஸிங்.

உத்தமர் காந்தியின் உத்தம சீடர் பொட்டி ஸ்ரீராமுலு. இவர் சொந்த வாழ்க்கை பெரும் சோகக்கதை. குழந்தை பிறந்தவுடனே மனைவி இறந்துவிட்டாள். பிறந்த குழந்தையும் கொஞ்சநாள் வாழ்வை முடித்துக் கொண்டு தாயோடு வானுலகில் சேர்ந்துகொண்டது. ஆனாலும் மனம் தளராதவர் தன் வாழ்க்கையை தேசத்துக்காகவே அர்ப்பணித்து காந்தியுடன் தன்னை சேர்த்துக் கொண்டவர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். ஒருமுறை காந்தியுடன் 29 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் இவர். காந்தியே இவரைப் போல பத்து பேர் சேர்ந்தால் சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடும் என்று புகழ்ந்ததாக ‘டைம்’ பத்திரிகை சொல்கிறது. அப்படிப்பட்டவர் காந்தி இறந்தபின் ஆந்திரம் தனியாகச் செல்லவேண்டும் எனக் கேட்டது ஏன் என்பது புரியாத புதிர். கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத் திருநாட்டில் இப்படி மொழிவாரி மாநிலங்களாக நாட்டைக் கூறு போட அவர் மறுபடியும் உண்ணாவிரதம் இருந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இன்றுவரை இல்லைதான். அதுவும் பிடிவாதமாக பிரிந்து போகும் ஆந்திரத்துக்கு சென்னையை தலைநகராக்க வேண்டும் எனக் கேட்டவிதமும் அதற்காக சென்னையில் அவர் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னுயிரைத் துறந்ததும் சற்று வேதனை தரக்கூடியதுதான்.

பொட்டி ஸ்ரீராமுலு இப்படி தன் உயிரைத் தியாகம் செய்து பெற்ற ஆந்திரத்தில் தற்சமயம் அந்த மகாமனிதருக்கே அவ்வளவு மரியாதைத் தரப்படுவதுமில்லை என்பதும் பெரிய சோகம்தான். ஹைதராபாதில் அவர் சிலைக்கு மாலையிட வேண்டுமென்றால் நிச்சயம் போலிஸ் பெடாலியனோடுதான் போகவேண்டும். மொழிவாரி மாநிலமாகப் பிரிந்திருக்க வேண்டாமோ என்றுதான் சரித்திரம் தெரிந்த பலரும் பேசுகின்றனர்.

இப்போதெல்லாம் இங்கு இருக்கும் பெரிசுகள் கொஞ்சம் வேதாந்தமாக மாறிவிட்டனர். இவர்கள் அந்தக் காலத்திலேயே மெட்ராஸ் மாநிலத்திலேயே எவ்வளவு அந்தஸ்த்தோடு இருந்தனர் என்பதை பட்டியல் போட்டுப் பேச ஆரம்பித்து விட்டனர். மெட்ராஸ் பிரிந்ததால் நஷ்டம் நமக்குத்தான் என்பதையும் அடித்துக் கூற ஆரம்பித்து விட்டனர். தெலுங்கும் தமிழும் கலந்து இருந்தால்தான் என்ன, குடி முழுகியா போய்விடும்.. இப்போதும் சென்னனயிலும் கோவையிலும் தெலுங்குக் காரர்கள் நன்றாக வாழவில்லையா.. அவர்களைப் போல நாமும் இல்லாமல் போய்விட்டோமே.. என்ன பெரிய மொழிவாரி மாநிலம்.. ஹைதராபாதில் இப்போதும் உருதுவுக்குதான் முதல் மரியாதை.. தெலுங்கும் ஹிந்தியும் தெலுங்கானா வட மாவட்டங்களில் கலந்து ஆட்சி செய்யவில்லையா.. எல்லோரும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்..

எது எப்படி ஆனாலும் மறுபடியும் தமிழ்நாட்டோடு சேரமுடியாது என்ற நிதர்சமும் இவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் சில வயது கடந்த பெரிசுகள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே ‘அந்தக் காலத்திலே..’ என்று ஆரம்பிப்பார்களே, அதைப் போலத்தான் இதுவும் ஒரு அங்கலாய்ப்பாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்..

தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால் 60 வருடங்களுக்குப் பிறகுதான் பிரிவினை என்ற ஒன்று எவ்வளவு தவறு என்பதே பலருக்கு உறைக்கிறது. இது பிற்காலத்தவருக்குப் பாடமாக அமையுமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த வருடம் நவம்பர் ஒன்று என்பதை எப்படி எந்தவிதமாக கொண்டாடப்படும்.. என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்..

Wednesday, September 1, 2010

ஆந்திர பக்தி உலகின் ஒளிவிளக்கு




திவாகர்,
நான விசாகையில் இருந்த போது எனது வீட்டிலேயே எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினேன். நல்ல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். எனது நெருங்கிய இலக்கிய நண்பர் வாகாடி பாண்டுரங்கராவ், பராகோ, கோசனா, முதலியோர் வந்திருந்தனர். வாகாடி சாஹித்ய அகாதமிக்குப் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழிபெயர்த்தவர். என்னுடைய கதைகளைக் கூடத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர்.
இக்கூட்டம் நடந்தது 80களின் ஆரம்பத்தில். அப்போது சினிமாவில் தடம் வைத்திருந்த மிஸ்ரோவும் இருந்தார். (நினைத்தாலே இனிக்கும் படம்) நான் கூட்டம் ஆரம்பிக்கு முன்னர் டி. ஆர். மஹாலிங்கம் பாடிய பாரதி பாடல்களை எல். பி. ரெகார்ட் போட்டுக் காட்டியபோது அக்குரலை எல்லோரும் ரசித்தனர். பின்னர் கூட்டத்தில் கடவுள் பற்றிய சர்ச்சை எழுந்தது. தெலுங்கு எழுத்தாளர்களில் பலர் நாஸ்திகர்கள் என்பது அப்போது தான் தெரிந்தது. ரா வி (ரா. விசுவநாத சாஸ்திரி)யும் (தமிழில் அற்பஜீவி - வாசகர் வட்டம்) அவ்வழி நினைப்பவர்! அதிகமானவர்கள் பிராமணர்கள்! ஆச்சர்யமாக இருந்தது! தெளிவான சிந்தனை!
அவர்கள் சொன்ன அன்றைய கருத்துகளும் கிட்டத்தட்ட உங்கள் நண்பர் பிரம்மாஜி போன்றது தான்!

நரசய்யா
--------------------------------------------------------

இன்றைய தெலுங்கு எழுத்தாளர்களில் பாதிக்கும் மேலோர் நாத்திக சிந்தனை உடையவர்கள் என்ற கண்ணோட்டமாக நான் ‘அடுத்தவீட்டில்’ எழுதிய பதிவுக்கு ஆதரவு தந்து அங்கே பதித்த நரசய்யா அவர்களின் கடிதம் இது. திருமதி டாக்டர் பிரேமா நந்தகுமார் இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதும்போது நான் தெலுங்கு இலக்கிய உலகை இன்னமும் சரியாக அலசவேண்டும் என்றும் ஸ்ரீ ஸுப்ரஸன்னாச்சார்யா போன்றோர் தம் தெலுங்கு இலக்கியத்துக்காக சிறந்த சேவை செய்வதையும் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறு சமீபத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. ஏறத்தாழ நாத்திகவாதமே அல்லாத பக்தி இலக்கிய எழுத்தாளர்களின் சங்கமமான ஒரு தெலுங்கு இலக்கிய கூட்டம். அதுவும் மிகவும் பிரபலமான மகா பெரிசுகள், இவர்கள் தெலுங்குக்கு செய்த சேவை சாதாரணமானதல்ல. இவர்களில் சித்ரகவி ஆத்ரேயா நமது ஆப்தர். அவரது சுயசரிதை புத்தகம் ஒன்று தெலுங்கில் வெளியிடப்படுவதால், அதைப் பெறுவதற்குதான் அடியேனை அழைத்திருந்தார்கள்.

சித்ரகவி ஆத்ரேயா தெலுங்கு பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுகிறவர். மார்கழி மாதத்தில் திருப்பாவை உபன்யாஸமும் செய்வார். விசாகையில் பல்லாண்டு காலம் இருந்த இவர் தற்போது வசிப்பது பெங்களூரில். வயது 77. சிறந்த ஆன்மீகவாதி என்று சொல்லவே தேவையில்லை. கடந்த ஒரு வருடமாக ‘ஆந்திரஜோதி’ தினப்பத்திரிகையில் பிரபலமாக வந்து கொண்டிருக்கிற ‘தர்ம சந்தேக’க் கேள்விகளுக்கு பதில் எழுதுபவர்.

இவருடைய குருநாதரான ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்ய சுவாமி விசாகப்பட்டினத்தில் இருந்துகொண்டு ஆந்திரமக்களுக்கு தெய்வானுக்ரஹத்தை திருப்பாவை மூலமும், ராமாயணம் மூலமும் பெற்றுத் தந்து புகழ்பெற்ற மகான். இன்று ஆந்திராவெங்கும் தமிழ்த் திருப்பாவை மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பான முறையில் பேசப்பட்டு, பாடப்பட்டு புகழ் பெறுகின்றது. அப்படி உபன்யாஸம் செய்து, தமிழிலே பாட்டு பாடி தெலுங்கில் பொருளோடு கதை சொல்லி ஊரெல்லாம பரப்புவது இந்த மகானுடைய சிஷ்யப் பெருமக்களே.. தமிழ்த் தாயின் செல்ல மகளான கோதை பிராட்டியார் ஸ்ரீபாஷ்யம் சுவாமி மூலமாக ஆந்திரமக்களுக்கு அனுக்ரஹம் செய்வதாகவே கூடச் சொல்லலாம்.

ஸ்ரீபாஷ்யம் சுவாமி நமக்கு கொஞ்சம் நெருக்கமாக தெரியவருவதற்குக் காரணம் நம் ஆப்த நண்பர் பெரியவர் திரு சம்பத் அவர்கள்தான். 1994 ஆம் ஆண்டில் நம் தமிழ்ச்சங்கம் மூலமாக ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டன்று புகழ்பெற்ற தெலுங்கர் ஒருவரை கௌரவப்படுத்துவது என்று முடிவெடுக்கையில் சம்பத் அவர்கள் ஸ்ரீபாஷ்யம் பெயரைத்தான் உடனடியாக அறிவித்தார்கள். அந்தப் பெருமையும் நம் சங்கத்துக்குக் கிடைத்தது. ஆனால் அடியேனுக்கு அவர்களின் நெருங்கிய ஆசிகள் கிடைத்தது அவர் இந்த பூமியில் வாழ்ந்த கடைசி கால கட்டத்தில்தான் எனச் சொல்லலாம். ஆனாலும் அவர் எங்களிடம் பேசிய கருத்துகள் எனக்கு ஏனோ உடையவர் ராமாநுஜர் வரலாற்றைத்தான் நினைவுபடுத்தின. சாந்தமான முகம், அருளை வீசும் கண்கள், எப்போதும் வாயில் ராமநாமம் என்று அவரைப் பார்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பரவசமாகவே சொல்வார்கள்.

’திருமலைத் திருடன்’ புத்தகம் எழுதும்போதுதான் சுவாமி அப்பளாசார்யுலு அவர்களின் நெருங்கிய பரிச்சயம் கிடைத்தது. அந்தப் புதினத்தில் ராமானுஜர் பற்றி வர்ணிக்கையில் தயங்காமல் என் மனக்கண் முன் தோன்றியவர் ஸ்ரீமான அப்பளாச்சார்யலு சுவாமிதான் என்பேன். என் கதையில் வரும் ராமானுஜர் அதிகம் பேசுவதில்லை. நடப்பவை அனைத்தையும் நாராயணனுக்கே என விட்டுவிடும் மகான். அப்படியே என் மனக்கண் பதித்ததை புதினத்திலும் கொடுத்துள்ளேன்.

ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமாயண உபன்யாசம் என்பது சாதாரண விஷயமாக ஒதுக்கவே முடியாதுதான். ஏனெனில் தெலுங்கர்கள் மிகச் சிறந்த பக்திமான்கள். ஸ்ரீராமனின் பாதம் பட்டு புண்ணியபூமியாக மாறிவிட்டதாகத்தான் தங்கள் மாநிலத்தை அவர்கள் நினைக்கிறார்கள். தெலுங்குப் பொது மக்களிடையே ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமகாவியப் பேச்சு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதை ஆந்திரர்கள் அனைவருமே ஒப்புக் கொள்வர். ஸ்ரீராமநவமிக்கு முதல் பத்துநாட்களும் ஆந்திரமக்களுக்கு சிறப்புதினங்கள்தான். அவர்தம் ராமாயண சொற்பொழிவு செவிக்கும், மனதுக்கும் இனிய மருந்தாக தித்திக்கும். ஆந்திரத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று ராமநாமத்தை இவர் வாயால் சொல்ல, அத்தனை மக்களும் பக்திப் பரவசத்தில் மூழ்குவதும் இங்கு பல ஆண்டுகளாக வாடிக்கைதான். அவருக்கு மிகப் பெரிய அளவில் அவருடைய ‘ஸகர்ஸ சந்த்ர தர்ஸன’ விழாவை விசாகப்பட்டினத்தில் நடத்தியபோது நகரமே அங்கு திரண்டு வந்ததைப் பார்த்து அதிசயித்தவன். அதே போல திருப்பாவையின் முப்பது பாடல்களுக்கும் சுமார் 700 பக்க அளவில் உரைகள் எழுதியவர், இந்தப் புத்தகம் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் என எல்லா ஜீயர் சுவாமிகளாலும் வேதம் எனப் போற்றப்பட்டுள்ளதால் இன்றளவும் பல தெலுங்கர் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம்.

நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என ஒரு சிறு அவை அடியேனாலும் திரு சம்பத் அவர்களாலும் 2003 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. திரு சித்ரகவி ஆத்ரேயாவும் அதில் ஒரு அங்கத்தினர். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆழ்வார் பிரபந்தங்களையும் அதற்கான விளக்கங்களையும் பெறுவது என்றுதான் இந்த அவை ஆரம்பிக்கப்பட்டது, இந்த அவையை ஸ்ரீபாஷ்யம் சுவாமி அவர்கள் தன் கடைக் காலத்தில் (அவரால் நடமாடமுடியாத நிலை, வயது அப்போது 82), தன் இல்லத்தில், உடையவர் ராமாநுஜர் உதித்த திருநாளில், தான் பிரத்தியேகமாக பூசை செய்யும் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை சுவாமி ஆசீர்வாதம் செய்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது. நம்மாழ்வாரின் தமிழ்ப் பிரபந்தங்களை வாய் நிறையச் சொல்லி விளக்கங்களையும் தெலுங்குமொழியில் அன்று அவரே விவரித்தார். விவரிக்க இயலாத பெருமையும் திருப்தியும் எங்களுக்குக் கிடைத்தது என்றுதான் சொல்லமுடியும்.

இந்த இனிய நிகழ்ச்சிதான் அவருடைய வாழ்நாளின் இறுதி நிகழ்ச்சி கூட.

ராமாநுஜ சரித்திரத்தில், உடையவர் தன் இறுதி உரையாக சீடர்களுக்குச் சொல்வது மிக முக்கியமான கட்டம் ஆகும். வாழ்க்கையில் ஒரு நல்ல வைணவரைக் கண்டாலே போதும், ஒரு மனிதன் பிறந்த பலன் அவனுக்குக் கிடைத்துவிடும் என்பார். எப்போதெல்லாம் ஸ்ரீபாஷ்யம் அவர்கள் என் நினைவில் வருகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு உடையவரின் அந்தக் கடைசி உரைக்கு விளக்கம் கிடைத்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றைக்கு ஆந்திர வைணவ உலகை ஆண்டுகொண்டிருக்கும் ஜீயர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை. அப்படிப்பட்ட மகான் தன் வாழ்க்கையிலும் தனக்கு ஆன்மீக குருவாக வழிகாட்டியதாக ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா புகழாரம் சூட்டியுள்ளார் இந்தப் புத்தகத்தில்.

இந்த விழாவுக்கு சென்றதால் ஸ்ரீபாஷ்யம் எனும் மாபெரும் மகானையும் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டார் ஸ்ரீமான் சிதரகவி ஆத்ரேயா அவர்கள். சிஷ்யரைப் பற்றிதான் எழுதவேண்டுமென நினைத்தது வாஸ்தவம். ஏனோ அவர்தம்குரு அவராகவே வந்துவிட்டார். அப்படி நினைக்கவைத்த சித்ரகவி ஆத்ரேயாவுக்கு நம் நன்றிகளை தாராளமாக தெரிவிப்போமாக.



( புகைப்படத்தில் அமர்ந்திருப்பது ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா, மேலேயுள்ள முதல் புகைப்படத்தில் ஆத்ரேயா அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிடப்படுகின்றது
இடமிருந்து வலம் - ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் மகனான ஸ்ரீனிவாஸாச்சாரியார், சஹ்ருதய சாஹிதி பிரபாகர், புத்தகம் வெளியிடும் பெரியவர் செல்லா சிவசங்கரம், சிதரகவி ஆத்ரேயா, வேதுல சுப்பிரமணிய சாஸ்திரி, எல்.ஆர்.சுவாமி)


.

Tuesday, June 29, 2010

சமீபத்தில் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் நான் வாசித்த கட்டுரை:
தமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும்:
திவாகர்

முச்சங்கம் கண்டு வளர்ந்த செம்மொழியாம் தமிழுக்கும் தமிழர்தம் பெருவாழ்வுக்கும் தொண்டு செய்யும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் எங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சங்கங்கள் அமைக்கப்பட்டு அமைப்பு ரீதியாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்க்க உதவுவதாக இங்கே குறிப்பிடும்போது, தமிழோடு தமிழர்தம் கலைகள், தமிழர்தம் பண்டைய விருந்தோம்பல் பண்புகள், தமிழர்தம் பிற்காலச் சந்ததியினர் அமிழ்தமாம் தமிழ்மொழியினை மறந்துபோகாமல் இருப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள், இவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்தியாவில் உள்ள ஏனைய மாநில தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழர் பெருவாழ்வுக்கு தொண்டு என வரும்போது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்தல், தமிழர்தம் உடைமைகளை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு செயல்படுகின்றன.
தமிழ் செம்மொழியாயினும் நடைமுறை வாழ்க்கையில் தமிழ்மொழியினை தமிழர் வாயால் பேச வைப்பதிலேயே பல சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாட்டுத் தமிழர்களை விட மற்ற மாநிலங்களில் வாழும் தமிழருக்கு தங்கள் நடைமுறை வாழ்க்கையில் தமிழுக்கு அதிக இடம் இல்லை என்றே கூறலாம். முதலில் ஆங்கிலம், பிறகு அவர்கள் பகுதியில் பேசப்படும் மொழி, இவைகளுக்குப் பிறகுதான் தமிழ் மொழி அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் இடம் பெறுகிறது.

ஏறத்தாழ மூன்றாம் இடத்தில் தள்ளப்பட்டுள்ள நம் இனிய தமிழ்மொழியை இல்லத்தில் மட்டுமே பேசவேண்டிய அளவுக்கு தள்ளப்பட்ட தீந்தமிழை, இன்றைய கல்விமுறையின் கட்டாயத்தால், இல்லத்தில் கூட ஆங்கிலம் ஆக்கிரமிக்க, இடை இடையே இனிய தமிழ் என்ற அவலநிலையில், இந்த இனிய தமிழை நம் தமிழர் நாளாவட்டத்தில் இல்லத்தில் பேசுவதற்கு கூட மறந்துவிடும் நிலை வருமோ என்ற அச்சத்தில், கவலையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாநிலத்தில் நிலையாக குடியேறிய குடும்பங்களில் தமிழ் இல்லத்தில் பேசப்படுகின்றதா என்ற ஒரு கேள்வி எழுமானால் அதற்கான பதில் தமிழ் உணர்வு கொண்டோருக்குக் கவலையே அளிக்கும். எத்தனையோ தமிழ்க்குடும்பங்கள் இன்று தங்கள் உயிருக்கும் உயிரான தமிழ்மொழிப் பேச்சிழந்து எத்தனையோ மாநிலங்களில் வசித்துவருகிறார்கள் என்பது இன்றைய கசப்பான உண்மை. உதாரணமாக சுமார் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழமன்னன் குலோத்துங்கன் காலத்தில் ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக குடியேறிய தமிழர் குடும்பங்கள் இன்று தங்கள் சொந்த மொழி இழந்து குடும்பப்பெயரான ‘திராவிட’ என்பதை மட்டும் கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். தங்கள் மூதாதையர் தமிழர் என்பது மட்டுமே தெரிந்து அதன் மூலம் பெருமை கொள்ளும் இவர்களுக்கு தமிழ் மொழி மேல் தற்சமயம் உறவில்லை என்பது உண்மை. இவர்கள் அதற்காக வருத்தப்பட்டாலும் இன்னொரு மண்ணில் இன்னொரு மொழியிடையே ஊன்றும்போது இவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே.

இங்குதான் தமிழ்ச்சங்கத்தின் தலையாயச் சேவை தேவைப்படுகின்றது, தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழ்ச்சேவை செய்யவேண்டியது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்படவேண்டிய நிலையில் தம்மை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வெளிமாநிலத்தில் வாழும்போது அங்குள்ள அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கே தமிழர்கள் முதலிடம் கொடுப்பது இயல்பு என்றாலும் அவர்களிடையே தங்கள் மொழியை வளர்த்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை தமிழ்ச்சங்கங்கள் உணர்த்தவேண்டும். மேலே குறிப்பிட்ட ‘திராவிட’ குடும்பங்கள் ஏன் தமிழ் பேசுவதில்லை எனக் கேட்டால் அவர்கள் தரும் பதில் அவர்தம் மூதாதையரைக் குற்றம் சொல்வதாக இருக்கும். இதே போல பிற்காலச் சந்ததியினர் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தினரைக் குறை சொல்லும் நிலைக்குத் தள்ளப்படாமல், தமிழ்ச்சங்கங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு, இன்றைய தலைமுறைக்குத் தேவையான விதத்தில் தமிழ் மொழியை அவர்களிடையே பரப்பவேண்டும்.

தமிழ்மொழியை பரவலாக்கப்படும்போது அது கலை மற்றும் கலாச்சார அளவில் தமிழர்தம் வாழ்வில் புகுத்தப்படும்போது தமிழ் மட்டும் வளரவில்லை, தமிழர்தம் பெருவாழ்வும் சேர்ந்து வளர்கிறது என்பதே தமிழ்ச்சங்கங்கள் தமிழருக்கு செய்கின்ற மிகப்பெரிய தமிழ்ச்சேவை.

இன்று இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் நிலையை சற்று பார்ப்போம்.

தமிழ்நாட்டின் ஜனத்தொகை 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி புதுவை மாநிலத்தையும் சேர்த்து 6.31 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த இருபது ஆண்டுகளாக கணிசமான அளவில் குறைந்துவருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதன் படி 1980-90 ஆம் ஆண்டுகளில் இருந்த 23% வளர்ச்சி விகிதம் அடுத்த பத்தாண்டுகளில் 20.5% ஆக குறைந்தது. இது மேலும் நடப்பு பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் 17% ஆகவும் குறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை கணக்கீட்டுக் குறிப்புகள் ஏற்கனவே கணித்துள்ளன. அந்த வகையில் பார்க்கும்போது 2010 ஆம் ஆண்டான தற்சமயத்தில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை புதுவையையும் சேர்த்து 7.6 கோடியாக இருக்கும். இப்போது தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களின் தற்போதைய நிலவரப்படி தமிழ் மக்கள் தொகையை சற்று பார்ப்போம்.

கேரளா : 20 லட்சம்
கர்நாடகா: 40 லட்சம்
ஆந்திரப்பிரதேசம்: 25 லட்சம்
மகாராட்டிரம், மும்பை உட்பட: 45 லட்சம்
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்: 5 லட்சம்
ஹிமாசல், காஷ்மீர், உத்தரப்பிரதேசம்,பீஹார், உத்தராஞ்சல்: 5 லட்சம்
மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்: 10 லட்சம்
மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர்: 3 லட்சம்
தில்லி மாநகரம்: 15 லட்சம்
அந்தமான் உட்பட்ட இதர இடங்கள்: 7 லட்சம்

ஆக மொத்தம் 1.75 கோடி தமிழர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் வசிக்கிறார்கள். இந்தக் கணக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் மூலமும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அந்தந்த மாநில அளவில் 2001 இல் எடுக்கப்பட்டிருந்த மொழிவாரி மக்கள் விகிதாசார விவரங்கள் மூலமாக எடுத்து அத்துடன் கடந்த பத்தாண்டு வளர்ச்சி விகிதத்தையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக ஏறத்தாழ ஐந்தில் ஒரு தமிழர் இந்தியாவில் தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களில் வசிக்கிறார் என்பதை நாம் இங்கு நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஒன்றே முக்கால் கோடி தமிழரில் எத்தனை சதவீதம் தமிழறிவு பெற்றுக்கொண்டிருப்பர் என ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அது நம்மை வியப்பிலும், அதிர்ச்சியிலும்தான் ஆழ்த்தும் என்பது நிச்சயம். கர்நாடகத்தில் 40 லட்சம் தமிழர் இருந்தும் அந்த மாநிலத்தில் 40 தமிழ்ப்பள்ளிகள் கூட இல்லை. அதே போல மகாராட்டிரத்தில் ஒரு மும்பையில் மட்டுமே 48 மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்பட்டும், மாநிலம் முழுவதுமாக 12 தனியார் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டும் தமிழ் மொழியைக் காப்பாற்றி வந்தாலும் 45 லட்சம் தமிழருக்கு 60 பள்ளிகள் எந்த மூலை என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். மேலும் மும்பையில் தமிழ் படிப்பு என்பது பொருளாதாரத்தில் கீழ்நிலையோர் படிக்கும் படிப்பாகவும், பொருளாதாரம் சிறிது நன்றாக இருக்கும் குடும்பங்கள் கூட ஆங்கிலப் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலத்து விஜயவாடாவில் திருவள்ளுவர் பெயரில் ராமசாமி நாடார் அவர்களால் சுமார் 1000 மாணவர்களுடன் 52 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலையில் இன்று 154 மாணவர்கள் மட்டுமே தமிழ் பயிலுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். அதே சமயத்தில் விஜயவாடாவில் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இப்போது வசித்து வருகிறார்கள் என்பதும் இங்கு ஒப்பு நோக்கவேண்டிய செய்தி.

பெங்களூரு நகரத்தில் மட்டுமே 25 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் அங்கே 20 தமிழ்ப் பள்ளிகள்தான் செயல்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம். 20 வருடங்களுக்கு முன்பு 50 தமிழ்ப்பள்ளிகள் இருந்த பெங்களூரு நகரத்தில் இன்று 20 பள்ளிகளே என்ற அளவுக்கு வந்து அந்த இருபது பள்ளிகளில் கூட ஆசிரியர் பற்றாக்குறை வந்து தேக்கமடையும் சூழ்நிலையில் இருக்கின்றது என்பது மேலும் நம்மை வருத்தப்பட வைக்கும். இந்த நிலை அனைத்து மாநிலத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று கூட சொல்லலாம்.

ஆசிரியர் நியமனம் என்பது, அரசு நிதியில் இயங்கும் அரசாங்க உத்தியோகம் என்பதால் அந்தந்த மாநில அரசுகள் ஏனைய மொழி ஆசிரியர் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பது கூட உண்மையான நிலைதான். இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ்ப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப கர்நாடக, மகாராட்டிர அரசுகள் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கின்றன. ஆனால் அரசுக்கு ஏற்படும் அதீதச் செலவுகள் மட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது, அதாவது சிக்கனம் என்று வரும்போது மட்டும் கல்வி விஷயத்தில், இந்தக் கட்டுப்பாடையும் மட்டுப்பாடையும் கையிலே கத்திரிக்கோல் கொண்டு கறாராகக் கடைபிடிக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் மும்பையில் 48 நகராட்சி தமிழ்ப் பள்ளிகளில் இந்த ஆசிரியப் பற்றாக்குறையினால் 8ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை ஒட்டு மொத்தமாக எல்லா இடங்களிலும் தூக்கப்பட்டு அந்த வகுப்புகள் மூடப்பட்டன. இந்த விஷயங்கள் ஊடகங்கள் மூலம் விரிவாகவே அலசப்பட்டாலும் மாநகராட்சிக் கல்வி அதிகாரி மட்டும் அசைந்துகொடுக்காமல் அந்தத் தமிழ் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கும் வேறு மொழிக்கும் மாற்றிக் கொள்வதுதான் மிகச் சிறந்த வழி என்று இலவச ஆலோசனை வழங்கிவிட்டார். இந்தச் செய்தி கூட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு கண்டனத்துக்கு உட்பட்டாலும் அரசு கலங்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். ஏனெனில் அரசு இங்கு மிக முறையாக சிக்கனத்தைக் கடைபிடித்து அரசு சிறுபான்மை மொழி ஆசிரியராக நியமிக்காததன் மூலம் ஏதோ சில ஆயிரங்களை சேமித்து தங்கள் திறமைக்கு அச்சாரமாக எடுத்துக் கொண்டு அதை வெளியேயும் பிரகடனப்படுத்தப்பட்டதால் மேலும் ஏதும் செய்யமுடியாத நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு பக்கம் மற்ற மாநிலங்களில் உள்ள அரசுகள் இப்படி தமிழுக்கு ஏதும் உதவி செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்றால் இன்னொரு பக்கம் ஏற்கனவே கூறியது போல குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களும் தமிழை அலட்சியப்படுத்துகிறார்களோ என்கிற அச்சத்தை உண்டுபண்ணுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் பெற்றோர்களுக்கு மிக மிகக் குறைந்துகொண்டே வருகிறது என்பது இன்றியமையாத உண்மை. இதற்கு இன்றைய கல்வி முறையையும் ஒரு காரணம். பயிர்களிலே பணப்பயிர்வகை போல கல்வியில் கூட பணம் எளிதில் கிடைக்க வகை செய்யும் கல்வி பரவலாக்கப்பட்ட நிலையில் தமிழ் எனும் மொழி இந்தப் பணப்பயிர்க் கல்வியில் இன்னமும் நுழைக்கப்படாத நிலையில் பெற்றோர்கள் இயற்கையாகவே இந்தப் பணப்பயிரைதான் தங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதுவும் வெளி மாநிலங்களில் உள்ள சூழ்நிலை சாதாரணமாகவே இந்த நிலைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. எது லாபகரமாக அவர்கள் கண்களுக்குத் தோன்றுகிறதோ, அந்தக் கல்வியில் மாணவச் செல்வங்களைத் திணிக்கும் இந்த விநோத சூழ்நிலையில் உள்ள மக்களின் மனோநிலையும் ஒரு காரணம் என்றாலும் இன்று நாம் பேசும் நமது மண்ணின் மொழியை தங்கள் பிள்ளைகள் மறந்துவிட்டால் நல்லதா என்று இவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆங்கில வழிக் கல்வி இன்றைய சூழ்நிலையில் அவசியமானது என்பதற்காக பெற்ற தாய்க்கும் கொண்ட தாரத்துக்கும் ஒப்பான தமிழை ஒதுக்கி வைக்கலாகுமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்..

இங்கேதான் தமிழ்ச்சங்கங்களின் பணி தேவைப்படுகிறது.

தமிழ் வளர்ப்பினை இரண்டாகப் பிரிப்போம்.

ஒன்று பேச்சு மொழி, இன்னொன்று எழுத்து மொழி.

பேச்சு இயற்கையாகவே தமிழனின் மூச்சு. அது அவன் உதிரத்தில் கலந்து விட்ட ஒரு ஆச்சரியமான உணர்ச்சி. ஆனால் அவன் எந்த மொழியில் பேச்சுத் திறமை பெறுகிறான் என்பதில் தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. பெரியவர்கள் நமக்குத் தந்த ஆருயிர்த் தமிழாக அந்தப் பேசும் மொழி ஆவதில் அவனைத் திசை திருப்பவேண்டும்.
இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும். தமிழில் பட்டி மன்றம் என்பது ஒரு சுவையான நிகழ்ச்சி. அல்லது நிகழ்காலக் கட்டத்தில் காரசாரமாக எல்லா பொதுமக்களிடையேயும் சாதாரணமாக பேசப்படும் தலைப்பில் தமிழ்மக்களைப் பேச வைத்துக் கேட்கவேண்டும். விவாத மேடைகளை அவ்வப்போது உருவாக்கி தமிழில் பயிற்சி கொடுத்துப் பேச வைக்கவேண்டும். பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும். இந்த விஷயங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தும்போது, அந்த பலன் மக்களை பரிபூரணமாகச் சேரும்போது, தமிழ் முதலில் பேச்சு மொழியாக மக்கள் மனதிலே நிலையாக நின்றுவிடும். இது காலம் காலமாகக் கடைபிடிக்கப்படும் சூழ்நிலையையும் சங்கங்கள் உருவாக்கவேண்டும். சங்கங்கள் வெறும் பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையை மாற்றி, பொழுதுபோக்குடன், இத்தகைய பேச்சுத் தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் தயங்காமல் அளிக்கவேண்டும். முதலில் கூட்டம் வரத் தயங்கும்தான். ஏனெனில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கேப் பழக்கப்பட்ட நம் மக்களின் ஆதரவு முதலில் கிடைக்காதுதான். ‘கடை விரித்தால் கொள்வார் யாரும் இல்லையென்பதால்’ சங்க நிர்வாகிகளுக்கே முதலில் சற்றுக் கடினம்தான். சிறு ஏச்சுப்பேச்சுகள் இதன்மூலம் சங்கநிர்வாகிகள் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் கொண்ட நோக்கம் நிறைவேற நம் தமிழ் ஓசை தெருவெங்கும் கேட்கவைக்க முயலத்தான் வேண்டும். தரமான பேச்சுப்போட்டிகள், தரமான பட்டிமன்றங்கள், தரமான விவாத அரங்கங்கள் என்று வரும்போது, மக்கள் தாமாகவே முன்வருவர். வெளியூர் அறிஞர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதை விட உள்ளூர்த் தமிழர்களை வைத்து நடத்தவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். முதலில் பலர் பேசத் தயங்குவர். ஆனால் போகப்போக அவர்கள் தமிழின் இனிமையை அவர்கள் நாக்கு உணரும்போதுதான் மக்களுக்கு தாம் எத்தகைய இனிமையான மொழியை எவ்வளவு அழகாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உணரத் தொடங்குவர். செந்தமிழும் நாப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்ற எண்ணம் நிச்சயமாக அவர்கள் மனதில் தோன்றும்..

அடுத்து எழுத்துத் தமிழ். இங்கு சங்கங்களின் உழைப்பு சற்றுக் கூடுதலாக வேண்டியிருக்கிறது. இன்று இணைய உலகில் மிக உல்லாசமாகவும் உற்சாகமாகவும், எழுச்சியோடும், சுதந்திரமாகவும், கட்டுப்பாடற்ற நிலையில் தமிழ் உலாவி வருகிறது. இந்த கட்டுப்பாடற்ற சுதந்திர இணையத்தில் எழுத்துத் தமிழ் பழகுவது என்பது மிக மிக எளிதானதாக இன்றைய காலகட்டத்தில் கணினி வகை செய்துள்ளது. இதை சங்கங்கள் மனதில் கொள்ளவேண்டும். நல்ல விஷயங்களை நம் தாய் மொழியில் எழுதுவது போல எந்த மொழியில் எழுதினாலும் அது இனிக்காது என்பதை நம் மக்கள் உணரச் செய்யவேண்டும். தமிழ்ப்பாடங்கள் மிக எளிய முறையில் ஆத்திச் சூடியிலிருந்து அடுக்குமொழிப் பயிற்சி வரை கற்றுக் கொள்ள குறுந்தகடுகள் வந்துவிட்டன. சங்கங்கள் இந்தக் குறுந்தகடுகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கவேண்டும்.

தாய்க்குலங்கள் மூலமாக தமிழ் மொழி எழுதப் பழக விடுமுறை நாட்களில் பயிற்சி எடுக்க உதவவேண்டும். நல்ல தமிழ் எழுதும்போது, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் கொடுத்து உதவவேண்டும். நான் வேண்டும் வேண்டும் என்று இங்கு சொல்வதெல்லாம், நம் இந்தியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் ஏற்கனவே முனைப்பாக செயல்படுத்தி வருவதுதான். இருந்தாலும் இந்த செயல்பாடுகள் முன்னுரிமையாக்கப்பட்டு மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படும்போது, தமிழன்னையின் நெஞ்சம் குளிர்ந்துகொண்டே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று இந்தியாவில் அனனத்துத் தமிழ்ச்சங்கங்களும் ஒரு விஷயத்தில் மிக ஒற்றுமையாக இருக்கின்றன என்றால் அது கவிஞன் பாரதிக்கு விழா எடுப்பதில்தான். ஆனால் அதை விட பாரதியை மனம் மகிழ வைப்பது என்னவென்றால் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றானே பாரதி. அவன் தந்த அந்த தெய்வீக வார்த்தைக்கு உண்மையான செயல் வடிவம் கொடுப்பதுதான் நம் சங்கங்களின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.

தமிழ்ச்சங்கங்கள் இன்று பல ஊர்களில் நல்ல நிலைமையில் இருக்கின்றன. வேறு சில ஊர்களில் நலிவடைந்த நிலையில் உள்ளன. தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தை நாம் உண்மையாகவே கடைப்பிடித்தால் நலிவு நம்மை நாடாது என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும். நாம் தமிழர் என்று ஒருவருக்கொருவர் உண்மையாக உணர்ந்து கொள்வதே மொழியால் பேசும்போதுதான். தமிழ்மொழி மட்டுமே நம் உணர்வுகளை சிலிர்க்கச் செய்து ஊர் பேர் தெரியாத போதும் அன்பால் ஒருவரை ஒருவர் நேசிக்கச் செய்கிறது. இதைக் கண்கூடாக உணர்ந்தவர்கள் தமிழ்ச்சங்கத்தவர்கள் என்று சொல்வதில் எனக்கும் ஒரு பெருமை உண்டு. 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமக்கென ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு இன்று வரை தொய்வில்லாமல் தமிழ்ப்பணியைத் தலையான பணியாக செய்து வரும் விசாகப்பட்டினத்து தமிழ்ச்சங்கத்திலிருந்து வருபவன் நான் என்பதே எனக்குப் பெருமைதானே..

தமிழர்களுக்கும், தமிழுக்கும் தற்போதைய நிலையில் இந்திய தமிழ்ச்சங்கங்களின் சேவையை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழ்ச்சங்கங்களின் சேவையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதும் நம் தமிழரின் கையில்தான் இருக்கிறது என்பதையும் நாம் இங்கே மறக்கக்கூடாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம். மைசூர் தமிழ்ச்சங்கமும், விஜயவாடா தமிழ்ச் சமுதாயமும் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக, அவர்கள் பள்ளி சென்று வருவதற்காக இலவச பேருந்துகள் நடத்துகின்றன. ஆனால் இந்த சமுதாயச் சலுகைகளைத் தமிழர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தவேண்டும், வெளிமாநிலத் தமிழர்கள் அனைவரையும் தத்தம் சங்கத்தினரை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினாலே போதும், நம் தாய்மொழி தரணியெங்கும் ஒலிக்கும்..

அதே சமயத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழன் எங்கே இருந்தாலும், அவன் உழைப்பு மற்றவர்க்குக் கிடைத்தாலும், அவனால் மற்றவர்கள் வாழ்ந்தாலும் அவன் நினைவும் உணர்வும் மட்டும் இந்த தமிழ் மண்ணின் மீதுதான். அவனுக்குள் இருக்கும் அந்தத் தமிழுணர்வை சங்கங்கள் தூண்டுகோலாக தாம் இருந்துகொண்டு தூண்டிக் கொண்டே இருக்கிறது. இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித் திருநாடு!!

• நன்றிகள்
• கர்நாடக தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு
• விஜயவாடா திருவள்ளுவர் தமிழ்பாடசாலை
• தில்லித் தமிழ்ச்சங்கம்
• மும்பைத் தமிழமைப்புகள்
• புனா தமிழ்ச்சங்கம்
• கொல்கத்தா தமிழமைப்புகள்
• பங்களூரு தமிழ்ச்சங்கம்
• கேரளத் தமிழமைப்புகள்
• மற்றும் பல மாநிலங்களில் உள்ள தமிழன்பர்கள்
• விசாகப்பட்டினம் தமிழ்க் கலை மன்றம்

Thursday, May 27, 2010




வயிறு எரிகிறது..

அப்படித்தான் அனைவருமே சொல்லுகிறார்கள் ஆந்திர அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை நினைத்து.

காலி (Gali) கோபுரம் என தெலுங்கர்களால் அழைக்கப்பட்டு வந்த 136 அடி உயர காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சியை என்னவென்று சொல்வது..




கி.பி. 1516 ஆம் ஆண்டு, கங்கர்களை போரில் வென்றவுடன், தன் காணிக்கையாக இந்த ராஜகோபுரத்தை சுவர்ணமுகி நதிக் கரையில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கட்டியபோது, இந்த கோபுரம் ஒரு ஆயிரம் ஆண்டாவது நிலைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கட்டிய கோபுரமாகத்தான் அவன் நினைத்திருக்கவேண்டும். அப்படித்தான் இத்தனை காலமாக இருந்தது. அந்தக் கோபுரத்தின் உயரத்திலும், சிவனுக்காக கட்டிய மாபெரும் தெய்வீகத் தொண்டு என்ற பெருமையிலும் அந்த கோபுரத்தின் பக்கத்திலேயே ஒரு சிலையாக நின்று கொண்டு தவம் செய்த அந்த அரசனின் கனவு கூட இந்த கோபுரத்து இடிபாடுடன் இடிந்த போன சோகக் கதையை என்னவென்பது?

அடித்தளம் பாறையுடன் கூடியது மேலே செங்கல்லும், சுண்ணமும், பாறாங்கல்லும் சேர்ந்த கலவையோடு கட்டும்போது, இந்தக் கோபுரத்தை தமக்குப் பின் வருவோர் அவ்வப்போது மராமத்து செய்வார்கள், நிச்சயம் அவர்கள் நன்றாகக் கட்டிக் காப்பார்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்து நின்ற அந்த அரசனின் கனவு அப்படியே நொடிந்தபோன நிலையை எப்படி சொல்வது?

வெளிநாடுகளில், அதுவும் நாகரீகம் மிகுந்த மேலை மற்றும் கீழை நாடுகளில் 200 வருடம் பழையது என்றாலே மிகுந்த அக்கறையோடு பொறுப்பெடுத்து அவைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால் 500 வருடம் பழைமை மிகுந்த இக்கோபுரம் இடியப் போகிறது என்று நன்றாகவே முன்னமேயே தெரிந்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மட்டுமே இடிந்தபோன இந்த உயர்ந்த கோபுரத்தை இனி மறுபடியும் காண்பதேது? மேலே உள்ள படத்தில் மட்டுமே காணலாம் இனி..

136 அடி உயரத்தில் உள்ள கோபுரம் பழைய கோபுரம்தான். பல ஆண்டுகளாகவே மேலிருந்து கீழாக விரிசல் விட்டு எப்போது இடிந்து விழுவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த கோபுரம்தான். (படத்தை விரிவாக்கிக் கூர்ந்து பார்த்தால் இந்த விரிசல் தெரியும், இத்தனைக்கும் இது பழைய படம்). ஆனாலும் கோயில் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு வரவில்லை. 1960 ஆம் ஆண்டில் ஒருமுறை, மறுபடியும் 1990 ஆண்டு ஒருமுறை இந்த விரிசல்களை செப்பனிட்டார்களாம்.(இந்தப் பணம் கூட திருப்பதி தேவஸ்தானம் கடனாக - ரூ. பத்து லட்சம் கொடுத்ததாம்) இன்னும் ஒரு முப்பது ஆண்டு காலம் அதாவது 2020 ஆன் ஆண்டு வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ.. அல்லது வேறு யாராவது கடன் கொடுக்க முன் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாமே என்று ‘சும்மா’ இருந்துவிட்டார்களோ என்னவோ..

இத்தனைக்கும் சமீபத்தில் வந்த ‘லைலா’ புயல் காற்று இவர்களுக்கு அந்த விரிசலை அகலப் படுத்தி (சுமார் ஒரு அங்குலம் விரிசல்) ஆட்சியாளருக்குப் பாடம் வேறு புகட்டியது. இப்போதாவது கவனியுங்கள் சாமி, என்பதைப் போல.

ஏதோ கவனித்தார்கள். எச்சரிக்கைப் பலகை ஒன்று போட்டார்கள். ‘இந்தக் கோபுரம் இடிந்து விழும் நிலையில் இங்கு யாரும் வரவேண்டாம்’ என்று. (இப்படிப் போட்டதால் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன் என்றாலும் அந்தக் கோபுரங்களில் வாழும் நூற்றுக்கும் மேலான குரங்குகளும், பறவைகளும் ‘படிப்பறிவு’ இல்லையாதலால் பார்க்கவில்லை) சென்னன ஐ.ஐ.டி யிலிருந்து நிபுணர் ஒருவரை சொகுசுக் காரில் வரவழைக்கப்பட்டு அவர் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட கோரிக்கை விடுத்ததாம். அவரும், இந்த அரசாங்கம் போலவே, ஆகா.. இதோ செய்கிறோமே.. என்று இன்னமும் திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ..

ஆனால் ஆகாச அளவுக்கு உயர்ந்த அந்த கோபுரம் ‘அறிவில்’ மனிதன் அளவு கூட உயரவில்லை அல்லவா.. திட்டம் போட மனிதன் பேப்பர் எடுத்து எழுதுவதற்கு முன்பே இடிந்து விழுந்துவிட்டது. அத்தோடு குரங்குகளும் பறவைகளும் கூட சமாதி ஆகிவிட்டன.. பாவம்.. வாயில்லா ஜன்மங்கள்..

எல்லாம் முடிந்த பின்னே, ‘அடடே.. இது பழைய கட்டடம்,, காற்றுக்கு இடிந்து போவது சகஜம்தான்.. புதியது ஒன்று கட்டிவிடலாமே.. என்ன பத்து கோடி ஆகுமா.. சரி, உடனே கோப்பு ஒன்று எழுதுங்கள்.. உடனடியாக கட்டிவிடலாம்’ என்று ஆந்திர அரசு சாவகாசமாக சொல்கிறது. இந்த பத்து கோடியில் பத்தில் ஒரு பங்கு முன்னமேயே கொடுத்து மராமத்து செய்திருந்தால் ஒரு புராதனக் கோயிலின் புராதனக் கோபுரம் கட்டிக் காக்கப்பட்டிருக்குமே.. அதோ இடிபாடுகளுக்குள்ளும் இடிபடாமல் அப்படியே சோகமாக நிற்கும் ஸ்ரீகிருஷ்ணதேவனை சுகமாக நிற்க வைத்திருக்கலாமே.. ஒரு புராதன நினைவுச் சின்னம் சின்னாபின்னாபடுத்தப் படாமல் முறைப் படுத்தியிருக்கலாமே.. இறந்து போன வாயில்லா ஜீவன்கள் தம் இருப்பிடத்தை செப்பனிட்டதற்காக வாயார அல்லது நெஞ்சாற வாழ்த்தியிருக்குமே..



ஏன் தோன்றவில்லை இவர்களுக்கு,

அப்படி ஒன்றும் கோயில் ஏழைக் கோயிலும் இல்லை. நல்ல வருமானம் ஈட்டித் தரும் பெரிய கோயிலில்களில் ஆந்திரத்து காளஹத்திக் கோயிலும் ஒன்று. காளஹத்தி ஈஸ்வரன் எல்லோருக்கும் எல்லா நன்மையும் உடனடியாக செய்து கொடுப்பதால் கோயிலில் வரும் பக்தர்களில் வருகையும் நாளுக்கு நாள் அதிகம்தான். சிவராத்திரி நாட்களில் ஊரே நெருக்கத்தில் தவியாய் தவிக்கும். பஞ்சபூத சேத்திரங்களுள் ஒன்று. ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று திருவாசகத்தால் பாராட்டப்பட்ட ஒப்பற்ற பக்தனான கண்ணப்பன் இருந்து வழிபட்ட தலம் இது. இத்தகைய தலத்தை இப்படி அலட்சியப்படுத்தலாமா.. பல்லவர் காலம் தொட்டுப் புகழ் பெற்ற கோயிலில் இப்படி ஒரு வருத்தமான நிகழ்ச்சியை நடத்த விடலாமா.. ஆன்மீகம் போற்றப்படும் ஆந்திராவிலேயே இப்படிப்பட்ட நிலைமையா?

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் அரசாட்சி ஏற்று சென்ற வருடத்தோடு ஐந்நூறு ஆண்டுகாலம் நிறைவு பெறும் நேரத்தில், அந்த ஒப்பற்ற அரசனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா.. நம் அலட்சியப் போக்கால் காலத்தால் அழிக்கமுடியாத செல்வங்களை இப்படி அழித்துக் கொண்டே போனால்,.. எதற்கும் சாட்சி தேவைப் படும் இந்த அசாதாரண உலகத்தில் புராதனம் அழிந்த நிலையில் நாளை பாரதம் தன்னை உலகத்தாருக்கு எப்படி வெளிக் காட்டிக் கொள்ளும்..

வயிறு எரிகிறதுதான்.

(Pictures curtesy The New Indian Express and Srikalahasti Temple GurukkaL)

Thursday, April 29, 2010

கடவுளும், தெலுங்கு எழுத்தாளர்களும்

என்ன காரணம் என்று தெரியவில்லை., இந்த மாதம் முதல் தேதியிலிருந்தே தினம் ’அன்புத்தொல்லை’க் கொடுத்துக் கொண்டிருந்த திருவாளர் பிரும்மாஜி கடந்த இரண்டு மூன்று நாளாக தொலைபேசியிலும் சரி, நேரிலும் சரி, வரவில்லைதான். கொஞ்சம் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. மனுஷன் பேசினா கேள்வியும், ஆதங்கமும்தான்.. இத்தனை ஆதங்கங்கள், மனதில் தாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்த முடியாத எழுத்தாளராக அதுவும் இந்த 60 வயது வாழ்க்கை அனுபவத்தில் இப்படி இவரால் எப்படி இருக்க முடிகிறது என நான் வியப்பதுண்டு. ஆனாலும் இவர் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் என்னிடம் தீர்வு கிடையாது.

’திருமலைத் திருடன்’ நாவல் பற்றி தெலுங்கில் பேச வேண்டுமென இங்குள்ள ’சஹ்ருதய சாஹிதி’ எனும் தெலுங்கு இலக்கிய அமைப்பு கேட்டதினால், அதுவும் தெலுங்கில் பேசவேண்டும் என்ற கோரிக்கையினால், நானே சற்று உள்ளுக்குள் உதறலோடுதான் அந்தச் சபையில் ஆஜரானேன். ஏதோ பேசினோமா, முடித்தோமா, போனோமா என்ற நிலையில் நான் அங்கிருந்து வெளியே வந்தபோதுதான் நம் பிரும்மாஜி என்னுடனே கூடவே வந்தார்.

’என் பெயர் பிரும்மாஜி!. உங்க நாவல் கதை முழுவதும் சொன்னீங்க.. கேட்பதற்கு ரொம்ப நல்லா இருந்திச்சு.. (இதுவரைக்கும் எனக்கும் நல்லாவே இருந்துச்சு).. ஆனா சார்.. உங்க நாவல் ல ஆண்டவன் இருக்கானா அல்லது இல்லையான்னு தெளிவா முடிவுல சொல்லி இருக்கீங்களா?’

”சார்.. ஆண்டவன் இருக்கிறதுனாலதான் இந்தக் கதையே இப்படி நடந்ததுன்னு கடைசில விளக்கம் கொடுத்தேனே சார்..”

”ஆங்! கொடுத்தீங்க சார்.. ஆனா. உண்மையிலே ஆண்டவன் இருக்கானா சார்.. உங்க சொந்த அபிப்பிராயம் என்ன.. அதைச் சொல்லுங்க..”

“அவன் இருக்கறதுனாலேதானே சார் உங்களை மாதிரி அன்பர்களையெல்லாம் சந்திச்சுப் பேசிண்டிருக்கேன்.. ஏன்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..”

’இது பத்தி உங்கள்ட்ட பேசணும் சார்.. உங்க விலாசம் கொடுங்க.. நான் வரதுக்கு முன்னாடியே போன் பண்ணிட்டு, நீங்க வரச் சொன்னா மட்டுமே வருவேன்.. அநாவசிய டிஸ்டர்பன்ஸ் பண்ணமாட்டேன் சார்..’

’என்ன சார் இது.. கட்டாயம் வாங்க..’

அங்கிருந்து அவரிடம் அப்படி சொல்லித் தப்பித்து விட்டதாகத் தான் அன்றிரவு நினைத்தேன். ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் இன்னொன்று நினைப்பான் அல்லவா.. அடுத்த நாள் காலையே போன் செய்து, மாலை என் அலுவலகம் வரலாமா என்று பர்மிஷன் கேட்டு, நானும் முழு மனதோடு (?) கொடுக்க, அன்று மாலையே மறுபடி பிரும்மாஜி என்னெதிரே ஆஜர்.

”சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இங்கே இருக்கற எழுத்தாளர்கள்னு சொல்லிக்கிறவங்கள்ளே – என்னையும் சேர்த்து - முக்கால்வாசிப்பேருக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.!”’ என்று ஆரம்பித்த பிரும்மாஜி, கவிஞர்கள், கதை எழுத்தாளர்கள் பலர் பெயர்களையும், அவர்கள் புத்தக விவரங்களையும் எடுத்துச் சொன்னார். முக்கால்வாசி புத்தகங்கள் இன்னமும் புரட்சிகளை முன் வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும், சுரண்டல் பேர்வழிகள், முதலாளிகள் இவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார். தெய்வபக்தி போன்றவை பெண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற பாவனையில் பலர் இருப்பதாகவும், கோயில் குளம் என்று செல்லும் எழுத்தாளர் பலர் கூட வீட்டுப் பெண்டிர் வற்புறுத்தலால் மட்டுமே அதிகம் செல்கிறார்கள் என்றும் சொன்னார்.

‘சார்.. என்ன இப்படிச் சொல்லிட்டிங்க.. நித்யானந்தா மாதிரி எந்த குருசாமி எந்த ஊர்லேருந்து வந்தாலும் முதல்ல ஆதரவு கொடுக்கறது நீங்கதானே சார்..’

மறுபடியும் எனக்கு தெளிவு படுத்தினார் பிரும்மாஜி. ஆந்திரர்கள் இன்னமும் முழுமையாகப் படிப்பறிவு பெறவில்லை எனவும், பாதிக்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கையில் கிடந்து மோசம் போகிறார்கள், இவர்களைக் காப்பாற்ற எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எத்தனையோ முயற்சி செய்தும் இவர்கள் திருந்த முன்வரவே இல்லை..’ என ஆதங்கத்துடன் பேசினார்.

’தெலுங்கு எழுத்தாளர்களின் முன்னோடி ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தான் சார். இவரும் புரட்சிகரமான கம்யூனிச எழுத்தாளர். சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர்களில் பாதிப்பேர் புரட்சி சிந்தனை எழுத்தாளர்கள்தான்’ என்று சொல்லிய பிரும்மாஜி, சில விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டார்.

தெலுங்கு மக்கள் என்னவோ இத்தகையவர்களை ஆதரிக்கவில்லை, இவர்கள் புத்தகங்களையும் வாங்குவதில்லை என்று பிரும்மாஜி வருத்தப்பட்டாலும், தெலுங்கு வாசிப்பு என்பதே மக்களிடையே சுவாதி, ஜோதி (நம் குமுதம், விகடன் போல) என்ற வர்த்தகப் பத்திரிகைகள்தான் என்றும் சொன்னபோது, ’அட, இது எங்கள் ஊரிலும் இப்படித்தான்.. நாடெங்கும் தேசமெங்கும் இருக்கும் நிலைதானே சார்!,’ என்று அவரிடம் சொன்னேன்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ’என்ன இருந்தாலும் தமிழர்களின் படிப்பறிவே தனி சார். அவர்கள் புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள். இங்கு புத்தகப்பதிப்பகங்கள் அவ்வளவாகக் கிடையாது. அப்படியே பதிப்பகங்கள் ஒவ்வொன்று கிடைத்தாலும் எழுத்தாளர் செலவு செய்தே பிரசுரிக்கவேண்டும். எழுத்தாளர் என்றால் அரசாங்கத்திடமோ, அல்லது பொது மக்களிடமோ எந்தவித மரியாதையும் கிடையாது. அதுவும் தெலுங்குப் புத்தக வாசிப்பு என்பதே கௌரவக் குறைச்சல் என்ற அளவுக்குப் போய்விட்டது சார்’ என் வருத்தப்பட்டார் பிரும்மாஜி.

‘உங்கள் நூலகங்கள் என்ன செய்கின்றன பிரும்மாஜி?’

’வெட்கக்கேடு, இந்த நூலகங்கள் பராமரிக்க இங்கே அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. அப்படியே ஒரு 200 நூலகங்கள் நாடெங்கும் இருந்தாலும் அவைகளில் புதிய தெலுங்குப் புத்தகங்கள் சேர்ப்பதுமில்லை. லைப்ரரி என்ற சொல்லே வேறு ஒரு புதிய அர்த்தத்துக்கு இப்போது வழி வகுத்துள்ளது’

‘என்ன சார் அது?’

’நாளிதழ், வார இதழ்கள் படிப்பதற்கும், விஞ்ஞானம் பற்றிய பழைய செய்திகள் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன சார். ஆங்கில நூல்கள் அதுவும் பழைய நூல்கள் ஏராளமாகப் பார்க்கப்படுகின்றன.. தெலுங்கு மொழியை இதில் கூட சீண்டுவார் இல்லை. ஏனெனில் தெலுங்கு மொழியில் யார் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறார்கள் என்ற மனப்போக்கு மக்களிடையே அதிகம்..’

உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. பிரும்மாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு மொழி சீரடைவது ஏன் என்ற ஆராய்ச்சி செய்து வருகிறாராம். இவர் இப்படியெல்லாம் ஒரு மொழியின் அழிவைப் பற்றிப் பேசும்போது அது கேட்க மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.

’ஆனால் தெலுங்குக்கு உண்மை நிலை இன்று இதுதான் சார். நானே 20 புத்தகங்கள் எழுதி என் செலவில் அச்சடித்து வெளியுட்டுள்ளேன். ஆதரிப்பார் யாரும் இல்லை. இலவசமாக விநியோகித்து வருகிறேன் சார்” என்று பிரும்மாஜி வருத்தத்தோடு சொன்னார்.

’என்ன செய்தால் இந்த நிலை மாறலாம்’ என்ற ஆலோசனைகள் உங்களைப் போன்றோர் தரவேண்டும். நான் இப்படிப் பலரையும் சந்தித்துப் பேசி அவர்கள் ஆலோசனைகளைப் பதித்து வருகின்றேன்.. பிறகு இந்த ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஐதராபாத் வரை நான் செல்லத் தயார். ராஜதானியில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து ஏதாவது நம் மொழி வளர்ச்சிக்குச் செய்யவேண்டும் சார்.. நான் என் ஆராய்ச்சியின் முடிவுரையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். அதே போல உங்கள் யோசனைகளையும் சொல்லுங்கள் சார்.. தமிழ் எழுத்தாளர்கள் நியாயமாகச் சொல்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய ஆய்வு முடிவுக் கட்டுரைக்கும் ரொம்பவும் உதவியாக இருக்கும், என்று பிரும்மாஜி கேட்டுக் கொண்டு போனவர், இரண்டு நாட்களாக வரவில்லை.

முதன் முதலில் தெலுங்கு மொழியில் நன்னய்யா எனும் பெருங்கவிஞர் மகாபாரதத்தை கவிதை நடையில் எழுதினார். நன்னய்யாவை தெலுங்கின் ஆதிகவி என்று சொல்வார்கள். அவருடைய பாரதத்தில் முதல் மூன்று வரிகளே மும்மூர்த்திகளை வணக்கம் சொல்லி பாடப்பட்ட முத்தான சமுஸ்க்ருத வரிகள். ஸ்ரீ, வாணி, கிரிஜா ஆகியோரை தங்களிடத்தே கொண்ட மும்மூர்த்திகளே, ஆதி தெய்வங்களே! இந்த உலகத்தை, ஆக்கி, காத்து, அழித்து, மறுபடியும் அருளும் பரப்பிரம்மத்தின் சொருபங்களே! எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி ஆரம்பிப்பார். பிறகு பாடப்பட்ட அனைத்துப் பாடல்களுமே தெலுங்கில்தான். (இவரால் மகாபாரதத்தை முழுமையாக எழுத முடியவில்லை. பின்னர் வந்த திக்கனா, எர்ரனா இருவரும் இந்த நூலை முடித்து வைத்தனர்)

நன்னய்யாவின் பாரதம் மிகவும் புகழ்பெற்ற நூல். இவர் எழுதிய காலம் சுமார் 1050 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. ஏனெனில் இவரின் இரண்டாவது பாடல், சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் மருமகனான விமலாதித்தன் எனும் வேங்கி அரசனின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் (கி.பி.1022-1060) எனும் பெயருடைய அரசன் மீது பாடப்பட்டதாகும். (இவ்விவரங்களை நன்னய்யாவே தனது இரண்டாவது பாடலில் மிக மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்) இதைக் கொண்டு பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தெலுங்கு நூல் இன்னமும் புகழ்பெற்று விளங்குகிறது ஏன் என்று இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் சிந்திக்கவாவது முயலவேண்டும்.

அடுத்து 15ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் பாடப்பட்ட அன்னமய்யாவின் பாடல்கள், திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட அற்புதமான நாவுக்கினிய கீதங்கள், பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வரிகள், ஐந்நூறு வருடத்துக்கு முன் இயற்றப்பட்ட இவை இன்று பட்டி தொட்டியெங்கும் பரவத்தொடங்கி உள்ளதையும் இந்தக் கால எழுத்தாளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் ‘ஆமுக்தமால்யதா’, அதே போலவே ராமதாசரின் கீதங்கள் கூட மக்களிடையே பிரபலம்தான்.

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனை தெலுங்கு நூல்கள் எழுதப்பட்டு சிறந்து விளங்கின என்று சில தெலுங்கு எழுத்தாளர்களிடம் கேட்டேன். எல்லோருமே ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசலு எனும் ஸ்ரீ ஸ்ரீ கவிதைகளைப் பற்றியே சொல்கிறார்களே தவிர, ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வதில்லை என்றே படுகிறது. எனக்குத் தெரிந்து ஜகன்னாத ராஜு எனும் நம் ராஜபாளையத்துக் காரர் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் அவைகளை சீண்டுவதில்லை என்பது வாஸ்தவமே. மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை என்பது கூட உண்மைதான். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் தெலுங்கில் ஒரு காலத்தில் மிக மிகப் பரவலாகப் பேசப்பட்டவை (தமிழில் சுஜாதா போல) ஆனால் இப்போது இவர் கூட ஒரு சபையில் பேசும்போது தன்னுடைய கதைகள் அவ்வளவாக விற்பதில்லை, ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று எழுதிய தன்னுடைய சிறிய நூல் ஒன்று லட்சம் பிரதிகள் விற்கிறது என்று ‘வருத்தத்துடன்’ குறிப்பிட்டார். ஆக இவரும் எழுத்தாளராக மிகவும் புகழ் பெற்றாலும், தெலுங்கில் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற குறையை பகிரங்கமாகவே சொல்லி வருகிறார். தெலுங்கு இலக்கிய உலகம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதை ஒரு அமைச்சரே சமீபத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் பேசியதை நானே கேட்டுள்ளேன். இப்படி எல்லோருமே கவலைப்படுவது போல முகத்தை சோகமாக்கிக் கொண்டு பேசி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்களுக்குத் தங்கள் மொழி வளர்க்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நல்ல தரமான எழுத்துகளுக்கு, அது எந்த மொழியாக இருந்தாலும் சரி, நிச்சயம் தெய்வம் துணை நிற்கும். அரசாங்கம் உண்மையிலே கவலைப்பட்டால், அது முதலில் செய்யவேண்டிய வேலை ஊரெங்கும் நூலகங்கள் ஏற்படுத்தி தெலுங்கு நூல்களை ‘டப்பு’ செலவழித்து வாங்கவேண்டும். எல்லா தெலுங்கு நூல்களும் ஒவ்வொரு நூலகமும் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும். இப்படி சட்டம் இயற்றப்படுவதால் ஒரு சில தீமைகளும் எழலாம். புற்றீசல் போல நெறியற்ற எழுத்துகள் நாடெங்கும் எழுதப்பட்டு, நூலகங்களுக்கு விற்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் காலாகட்டத்தில் இவை தேய்ந்துதான் போகும்.

ஆனால் உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், இலக்கிய ஆதாரங்கள், மண்ணின் வளம், பாரதத்தின் பண்டைய மேம்பாடு, என எழுத்துகள் வர ஆரம்பிக்கும்போது மொழி செழிப்பாக வளர நிச்சயம் வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தங்கள் எழுத்தில் இன்றைய எழுத்தாளர்கள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த விஷயங்களின் அடிப்படை உணர்ச்சியே தெய்வ நம்பிக்கை என்பதையும் இவர்கள் தெளியவேண்டும்.

விஜயநகரப் பேரரசு தென்னகமெங்கும் பரந்து விரிந்து கோலோச்சும் வேளையில் அதாவது சுமார் 200 வருடங்களுக்கு தெலுங்கு மொழியும் அரசவை மொழியாக கோலோச்சியது.தமிழகத்திலேயே தஞ்சை, மதுரை, காஞ்சியில் அப்போதெல்லாம் தெலுங்கு மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. தெலுங்கு மொழி பாடல் வகைகளுக்கேற்ற இனிய மொழி. நல்ல திரைப்படப் பாடல்கள் கூட இன்னமும் இனிய கீதமாக வேற்றுமொழிக்காரர்களால் கூட பாடமுடியும் அளவுக்கு இனிமை நிறைந்த மொழி. ஆனால் இம்மொழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது..

‘கன்ஞ்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா’ (வெண்கலம் கணீர் என கேட்பதைப் போல, தங்கத்தால் அப்படி முடியாதுதான், ஆனால் தங்கத்தின், அதன் தரத்தின் முன்னே வெண்கலம் நிற்குமா) என்று ’வேமனா’ எனும் பெரும் புலவர் தெலுங்கில் கேட்பார். தாய்மொழி தங்கம் போன்றது என்பதை எப்படி மக்களிடையே எடுத்துச் சொல்வது?

பிரும்மாஜி போன்றோர் கவலைகள் கவனிக்கப்படவேண்டியவை. மிகவும் ‘சீரியஸ்’ ஆக கவனிக்கப்படவேண்டியவை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் ஒரு மொழியை தெலுங்கு எழுத்தாளர்களான இவர்கள் வைத்திருக்கக்கூடாது. சமீபத்தில் ‘யுனெஸ்கோ’ அறிக்கையில், வருங்காலத்தில் மறைந்து போகும் உலக மொழிகளில் தெலுங்கும் ஒன்று என்று வந்துள்ளதாக சொல்கிறார்கள். இது உண்மையென்றால் நிச்சயம் நிலைமை கவலைக்கிடம்தான். தெலுங்கு மொழியைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்..

இப்படி (கடவுள்தான் காப்பாற்றவேண்டும்) நான் பிரும்மாஜியிடம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் சொல்லிவிடவேண்டியதுதான்.. ஏற்கனவே சொன்னேன், பிரும்மாஜி இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று.. வரட்டும்.. சொல்லிவிடலாம்..

Thursday, February 25, 2010


நாராயணனும் நாம கைங்கரியமும்

ஆந்திரத்தின் கதையே அலாதிதான்.

ஆந்திரர்கள் மிக நல்லவர்கள். நான் இங்கு வசிப்பதனால் இதை நான் சொல்வதில்லை. பொதுவாகவே மற்ற மாநில மக்களைக் காட்டிலும் (சுயநலம் குறைந்த) நல்லவர்கள். ஆனாலும் இவர்களுக்கு தங்கள் பழமையின் பெருமை இன்னும் புரியவில்லையோ.. தங்கள் நிலத்தின் வளமையும், மொழியின் வளமையும் இன்னமும் கூட தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தெரிந்து கொள்ள முயலவில்லையா என்பதும் எனக்கு இன்னமும் சந்தேகம்தான்.

ஆந்திரப்பிரதேச வரலாறு இங்கு மக்களுக்கு இன்னமும் சரிவரப் போதிக்கப்படுவதில்லை என்பது என்னுடைய மிகப் பெரிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை பல இடங்களில் இங்கு நான் பதிவு செய்தபோதெல்லாம் சிரித்துவிட்டுப் போய்விடுகின்றனர். பழமையின் பெருமை தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் உள்ள அலட்சியப் போக்கா என்பது கூட தெரியவில்லை.

நம் தமிழ் மண்ணில் உள்ள குகைக் கோயில்கள் போலவே பழமையான குகைக் கோயில்கள் இங்கு உள்ளன. முக்கியமாக விஜயவாடா நகரின் மத்தியிலேயே மூன்று குகைக் கோயில்கள் இருந்தாலும், நகரவாசிகள் பலருக்கு இங்கு சென்று காணும் ஆர்வம் கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நகரை அடுத்த தென்பகுதியில், கிருஷ்ணா நதியின் தென் கரையில் ஒரு அழகான குகைக் கோயில் உண்டவல்லி எனும் ஊரில் கட்டப்பட்டுள்ளது.


அனந்தசயனனான விஷ்ணுக்கும் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் எடுப்பிக்கப்பட்ட குகைக் கோயில் இது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட அனந்தசயனன் மிகமிக விசேஷமாக நம்மைக் கவர்கிறார். உண்டவல்லி குகைச் சிற்பங்கள் பற்றி பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நம் சிங்கப்பூர் விஜய் அழகான சிற்பப்படக் கட்டுரையைக் கூட எழுதியுள்ளார்.( www.poetryinstone.in/.../was-this-the-inspiration-behind-mahendra-pallavas-sculptural-quest.htm நாம் ஆகவே இந்தச் சிற்பங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.

என்னை மிகவும் வெகுவாகக் கவர்ந்தவர் இந்த பதினேழு அடியில் படுத்துக் கொண்டிருக்கும் அனந்தசயனன்.. பாற்கடலில் பள்ளி கொள்வதுபோல இருந்தாலும், பாற்கடலை தவிர்த்து அங்கே அத்தனை முனிவர்களும் தேவர்களும் பெருமாளைச் சேவிப்பது போல செதுக்கியுள்ளது ஒரு விசேஷம்.
அவரையே நானும் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது விசேஷமான ஒரு விஷயம் நம் கண்ணில் பட்டது. அது பெருமாளுக்குப் போடப்பட்டிருந்த நாமம். நல்ல பெரிய தென் கலை நாமத்தை கண்களுக்கு பளிச்சிட செதுக்கியிருந்தார்கள்.

ஆனால் நாமம் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாளோடு சேர்ந்து செதுக்கப்பட்டதாக இருக்கமுடியாது என்பதும் புரிந்தது, ஏனெனில் நாமம் இவ்வளவு பெரிதாக பெருமாளுக்கு போடப்படுவது உடையவர் ஸ்ரீராமானுஜர் காலத்தில்தான் மிகப் பரவலாக வளர்ந்தது. ராமானுஜருக்கு முந்தைய காலக் கட்டத்தில் சந்தனக் கீற்றாக ஒரு யூ வடிவில் போடப்பட்டதாக சில குறிப்புகள் கிடைக்கின்றன.

உடையவர் காலம் பதினோராம் நூற்றாண்டு. இந்த சிற்பம் படைக்கப்பட்ட காலத்தை சற்று ஆராய்ந்தோம். ஆந்திராவை பல அரச வம்சங்கள் பலப் பல ஆண்டுகளுக்கு ஆண்டுவந்தார்கள்.

கிருத்து பிறப்பதற்கு முன் இருநூறு ஆண்டுகளும், பிறந்த பின் 250 ஆண்டுகளுமாய் சுமார் நானூற்றைம்பது ஆண்டுகள் ஆண்ட பெருமை உடையவர்கள் சாதவாகனர்கள். இவர்கள் வேதமதத்திலும் பிறகு புத்தமதத்திலும் சேர்ந்து பெருமை படைத்தவர்கள்.

இவர்களுக்கு பின் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஆந்திரம் பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டது. இவர்களில் ஆந்திர இக்ஷவாகு அரசர்களும் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) ஆனந்த கோத்திர அரசர்களும் (கி.பி. நான்கும் ஐந்தாம் நூற்றாண்டு மத்தி வரை) இவர்கள் காலத்திலேயே இவர்களுக்குப் போட்டியாக வந்த விஷ்ணுகுந்தின் வம்சமும் மிகவும் புகழ்பெற்றவை. கி.பி.600 ஆம் ஆண்டு வரை ஆண்ட இந்த அரசர்களுக்குப் பிறகு சாளுக்கிய வம்சத்தினர், மேலைச் சாளுக்கியமாகவும், கீழைச் சாளுக்கியமாகவும் ஆந்திராவைப் பிரித்து ஆள ஆரம்பித்தனர். நம் தகவல்களுக்கு இந்தச் சரித்திரம் போதும் என நினைக்கிறேன்.

சரி, இந்த இடத்தில் நாம் குறிப்பிட்ட ஆனந்தகோத்திர அரசர்களால்தான் இந்த உண்டவல்லி குகைக் கோயில் குடையப்பட்டது. அதாவது சுமார் கி.பி.450-500 ஆண்டு கால கட்டங்களில் வேதமதத்தை மிகச் செழிப்பாக வளர்க்கும் உத்தியில் சிவன் - விஷ்ணு - பிரும்மா வுக்காக சிறுமலையைக் குடைந்து உளி கொண்டு செதுக்கப்பட்ட உயிரோவியங்கள். இப்படி இது நான்கு-ஐந்து நூற்றாண்டு கால ஆனந்தர்களால் கட்டப்பட்டது என்பதை அங்கேயே செதுக்கப்பட்ட, ரெட்டி அரசர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சொல்கிறது.

சரி, நாம் இப்போது நாம கைங்கரியத்துக்கு வருவோம்,

ராமாநுஜருக்கு முந்தைய நூற்றாண்டுகளில், அதுவும் அந்த ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் இந்த நாம வடிவம் இன்றுள்ளதைப் போல இல்லை என்று எல்லா சரித்திர ஆசிரியர்களும் எளிதாகவே சொல்லிவிடுவர். ஆனால் இந்த ஒரே பாறைச் சிற்பத்து பெருமாளில் எப்படி நாமம் வந்தது. அந்த நாமம் மட்டும் சுதை கொண்டு பின்னாளில் அதாவது பதினோராம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டுள்ளதாக சரித்திர ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

முதலில் எனக்கு சந்தேகம்தான். என்னதான் சுதையில் செய்து தனியாக இணைத்தாலும் இன்னமும் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் காலத்திலும் பொருந்துகிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக இருக்குமோ என்ற கேட்டதில் சமீபத்தில் ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்து அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை எடுத்துக் கொண்டு ஆராயச் சொன்னார். இது மறைந்த முன்னாள் பேராசிரியர் திரு பி.எஸ்.ராவ் அவர்களின் ஆந்திர நாட்டுச் சரித்திரம்.

இந்த உண்டவல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளால் நம் தமிழ்நாட்டு வைணவர்கள் குடும்பம் குடும்பமாக 10ஆம் நூற்றாண்டு முதல் குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டதைக் குறிப்பிடுகிறார். குண்டூர் மாவட்டம் சாத்லூரு போன்ற இடங்களில் (உண்டவல்லியும் குண்டூர் மாவட்டம்தான்) இன்னமும் இந்த வைணவக் குடும்பங்கள் உள்ளதாகவும் இவர்கள் திவ்வியபிரபந்தங்களில் சிறந்து விளங்குவதாகவும் தெரிய வந்தது. (சாத்லூரு ஸ்ரீமன் கோபாலகிருஷ்ணமாச்சார்யுலு, இங்கு விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். பிரபந்தத்தில் சிறந்த பண்டிதர். மிகச் சரளமாக தெலுங்கிலும், தமிழிலும் திவ்வியப்பிரபந்த பாடல்களை உபன்யாஸம் செய்வதில் வல்லவர்.) இப்படிப்பட்ட செய்திகளோடு இந்தப் புத்தகத்தில் இன்னொரு கூடுதல் செய்தியும் கிடைத்தது.

‘”வேங்கி மகாராஜுவைன ராஜேந்திர சோளுடு ஆக்ஞகு கட்டுபடி, அதடு சோளதேச சக்கரவர்த்தி ஆயினவெண்டனே, நாராயணராஜா ஆக்ஞபிரகாரம் சேஷசயனுடுகி பலு மராமத்து பணுலு சேயபடினதி”

என்று எழுதப்பட்டுள்ளது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது 1070 இல் ராஜேந்திரசோழன் வேங்கி அரசனானதும் அடுத்த ஆண்டிலேயே குலோத்துங்கசோழன் எனும் பெயர் பெற்று சோழதேசத்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். குலோத்துங்கசோழனின் தெலுங்கு நண்பனான நாராயணன் என்பானும் அவன் அண்ணனும் குண்டூர், கிருஷ்ணை மாவட்டங்கள் இணந்த ‘கம்மராட்டிரம்’ எனும் பகுதியை அரசாண்டதாக வரலாறு சொல்கிறது. இந்த சமயத்தில்தான் உண்டவல்லி அனந்தசயனப் பெருமாளுக்கு இந்த நாராயண சிற்றரசனால் நாம கைங்கரியம் செய்திருக்கப்படவேண்டும்.



இந்தக் கால கட்டத்தில் ‘சுதை’ எனப்படும் சுண்ணாம்புக் கலவை சிறபங்களில் உபயோகப்படுத்தப்படுவதென்பது தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த கலையாகும். மணிமேகலை இயற்றப்பட்ட காலத்திலிருந்தே இந்த சுதை சிற்பங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. (http://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612332.htm) பல்வேறு தூண்களில் இவை போல சிற்பங்கள் இன்னமும் காலத்தால் அழியப்படாமல் அதே களையுடன் சுதை கொண்டு பல்வேறு ரூபங்களில் செதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதே சுதை கொண்டு நாமம் மட்டுமே கூடுதலாக, ஒரு இணைப்பாக, ஒரு சிறு நிலத்தை ஆண்ட நாராயணனால் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட நிலம் நீர் வானம் என எல்லாவற்றையும் ஆளும் அந்த ஆண்டவனான பழைய நாராயணனுக்கு கைங்கரியமாக செய்துள்ளான் என்பது தெரியவருகிறது.

நாராயணனால் நாராயணனுக்கு செய்யப்பட்ட நாம கைங்கரியம் எனக் கொள்வோமா..

திவாகர்